பொதுக்காலம் 32வது ஞாயிறு முதல் ஆண்டு 06-11-2011

திருப்பலி முன்னுரை
அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்று நாம் பொதுக்காலம் 32வது ஞாயிறை கொண்டாடுகிறோம். உலக அறிவு வரையறைக்குட்பட்டது.  மெய்யறிவு எல்லையற்றது.  இவ்வேளையில் நாம் இன்றைய நற்செய்தியில் வரும் அறிவிலிகளைப் போல இல்லாது முன்மதியுள்ளவர்களைப்போல் இருக்க வேண்டும். மானிட மகன் வரும்பொழுது தயாராக இருப்போர் அழைத்துக்கொள்ளப்படுவர். எனவே நாம் அனைவரும் எப்பொழுதும் முன்மதியுடைய தோழிகளைப்போல் ஞானமுள்ளோராய் வாழ வேண்டி இத்திருப்பலியில் தொடர்ந்து பங்கெடுப்போம்;.

முதல் வாசக முன்னுரை
ஞானம் ஒளிமிக்கது மங்காதது தனக்கு தகுதியுள்ளவர்களை தேடிச் செல்கிறது என்று ஞானத்தை பற்றி கூறும் சாலமோனின் ஞான நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்கு செவிக்கொடுப்போம்.


சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16
ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.


இரண்டாம் வாசக முன்னுரை
இறந்தோரும் உயிரோடு இருப்போரும் எப்பொழுதும் ஆண்டவரோடு இருப்போம். எக்காளம் முழங்க ஆண்டவர் வருவார் என்று கூறும் புனித பவுல் கூறும் இரண்டாம் வாசகத்திற்கு செவிக்கொடுப்போம்..


திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18
சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.


நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: ``விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், `இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, `எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, `உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது' என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, `ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள். அவர் மறுமொழியாக, `உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


விசுவாசிகள் மன்றாட்டுகள்
  1. ஆயனே எம் இறைவா! எம் தாய் திருச்சபையை வழி நடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவறத்தார் ஆகிய அனைவரும் பெரிய குருவாகிய இயேசுவின் வழி நடந்து மக்களுக்காக உழைத்திட வேண்டிய ஞானத்தைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. வழிகாட்டும் எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் தங்களது கடமைகளை சரிவர செய்து மக்களுக்கு ஏற்ற தலைவர்களாக உண்மை வழியில் வாழவேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
  3. ஆசிரியரே எம் இறைவா! எங்கள் ஊரில் உள்ள அனைவரும் உம்மை அறிந்து, என்றும் உண்மை உள்ளவர்களாகவும் உம் வழி நடப்பவர்களாகவும் வாழ வேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
  4. மருத்துவரே எம் இறைவா! எம் ஊரில் உடல் நோயினாலும் மனநோயினாலும் வாடுவோரை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாக வாழ வேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக