திருவருகைக்கால 3ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 11-12-2011



முன்னுரை:  இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைத்துள்ளார். அதுவும் நம் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தமது அழைப்பின் மேன்மையை உணர்ந்து வாழ வேண்டும். திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, வெறுமை நிறை மனதோடு நாம் வாழ இன்று இறைவன் நம்மை அழைக்கிறார். எனவே அவரை ஆசீர்வதித்தது போல, நம்மையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். அமைதி அருளும் ஆண்டவரால் நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமைபெற விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த மனதோடு இயேசுவின் பிறப்பிற்காக காத்திருந்து, விழித்திருந்து, செபத்தில் நிலைத்திருந்து தகுந்த தயாரிப்போடு இருக்க அருள்வேண்டி செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை:  ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டோரின் பணிகள் பற்றியும், அவ்வாறு தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை ஆண்டவர் விடுதலை, நேர்மை போன்றவற்றால் அழுகுறச்செய்து நல்லநிலத்தினைபோல் பலன் கொடுக்கச் செய்வார் எனக்கூறும் இறைவாக்கினர் எசாயாவின் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் (எசா. 61:1-2,10,11)

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்: மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்: நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமைபெற விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த காலியான மனதுடன் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் பவுல் அடியாரின் குரலுக்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1 தெச. 5:16-24)

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:6-8,19-28)

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல: மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, நீர் யார்? என்று கேட்டபோது அவர், நான் மெசியா அல்ல என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? என்று அவர்கள் கேட்க, அவர், நானல்ல என்றார். நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? என்று கேட்டபோதும், அவர், இல்லை என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்: எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்கள். "அதற்கு அவர், 'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது""என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே என்றார்." பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?  என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்: அவர் எனக்குப்பின் வருபவர்: அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 


  1. எல்லாம் வல்ல இறைவா, எம்திருத்தந்தை 16 ஆம் ஆசிர்வாதப்பரையும், எம் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நற்செய்தியை அறிவிப்பதே எனது கடமை என்பதை உணர்ந்து செயல்பட தேவையான தூய ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தியாகத்தின் இறைவா, எம் பங்கிலுள்ள அனைத்து அன்பியங்களும் சிறப்பாக செயல்பட்டு எம் பங்கை ஒரு அன்பிய சமூகமாக உருவாக்கிட அனைவரும் சிறப்பாக உழைக்க தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நீதியின் தேவனே இறைவா, எம் நாட்டுத்தலைவர்கள், சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் எதற்காக மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற தியாக உள்ளத்துடன் பணிபுரிய தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. அன்பு தெய்வமே இறைவா எம் பங்கு பணியாளர் பங்கின் வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பங்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக