திருவருகைக்கால 4ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 18-12-2011


முன்னுரை:  அன்புக்குரிய சகோதரமே, நமது உள்ளம் நமது மனம் அருள் நிறைந்ததாக அதாவது நூற்றுகக்கு நூறு பரிசுத்தமாக இருந்தால் நமது உள்ளத்திற்குள், மனதுக்குள் இயேசு பிறப்பார். இயேசு பிறப்பு விழாவிற்கு வெளி அலங்காரத்தைவிட உள் அலங்காரம் தேவை. நமது கடவுள் மக்கள் நடுவே வாழ ஆசைப்படும் கடவுள். எனவே பிறக்க இருக்கும் இயேசுபாலன் நம்மோடு வாழ வேண்டுமென்றால் இறையருளால் நமது ஆன்மா நிரப்பப்பட வேண்டும். அந்த ஆவியானவரின் அருளைப் பெற தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:  கடவுள் மக்கள் நடுவே வாழும் கடவுளாக தன்னை வெளிப்படுத்துகிறார். நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது உடனிருப்பால் நமது உள்ளமும், இல்லமும் நிரப்பப்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவாக்குக் கூறும் கருத்தினை கேட்போம்.

இறைவாக்கினர் சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (2 சாமு. 7:1-5,8-12,14,16)

அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்து வாழ வேண்டும். பிறரோடு பழகும்போது அன்பாக பழக வேண்டும். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வேண்டும் என்ற ஆழந்த சிந்தனையுடன் கருத்துக்களை கூறும் பவுல் அடிகளாரின் அறிவுரையை வாசிக்க கேட்போம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (16:2-27)

இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (லூக். 1:26-38)

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!' என்றார். வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார். பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அன்பு தெய்வமே இறைவா, எம் திருச்சபையின் தலைவர்களை உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். அனைவருக்கும் உமது ஆவியின் அருளைப் பொழிந்து நற்செய்தியை சிறப்புடன் மக்களுக்கு வழங்கி திருச்சபையை சிறந்த முறையில் கட்டி எழுப்ப தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. கருணையின் தெய்வமே, எம் பங்கு பணியாளரை நிறைவாக ஆசீர்வதியும், பங்கின் முன்னேற்றப் பணிகளில் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், பங்கு மக்கள் ஒத்துழைப்பு தந்திட அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நீதியின் இறைவா, எம் பங்கு மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு உம்மை அன்பு செய்து ஏற்றுக்கொண்டு வாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இறைவா! உமது பிறப்பு பெருவிழாவிற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் இந்நாட்களில் ஏழை, எளியவர்களிடத்தில், இரக்கம் உள்ளவர்களாக வாழவும், வியாதினால் வருந்துகின்றவர்களை சந்தித்து ஆதரவு அளித்திடவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக