சிலுவைப்பாதை சிந்தனைகள்



முன்னுரை: சிலுவைப்பாதை அன்பின் பாதை; அருளின்பாதை; இரக்கத்தின் பாதை; தியாகத்தின் பாதை. ஆண்டவர் இயேசு நாம் நலமுடன், அருளுடன், உறவுடன் வாழ, தம்மையே தியாகமாக்கிய அதே சிலுவைப்பாதையின் வழிகளில் நம்மையும் ஈடுபடுத்தி ஆண்டவர் இயேசு ஏற்றுக்கொண்ட துன்பங்களில் ஒரு சிறிதளவாவது பங்கேற்கும் போதுதான்; திருந்திவாழ முயற்சிக்கும் போதுதான் இந்த வழிபாடு நமக்கு பொருளுள்ளதாக அர்த்தம் நிறைந்த வழிபாடாக அமையும். இத்தகைய சிந்தனைகளுடன் இயேசு நடந்து வந்த பாதைகளை சிந்திக்க நமது பாவங்கள்,குற்றம் குறைகளை ஏற்றுக்கொள்வோம் மனம் வருந்துவோம்.

எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (பிழை தட்டிக்கொண்டு) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

செபிப்போமாக: இறைவா உமது அருள் இரக்கத்தால் எங்கள் தவறுகளை, குறைகளை, குற்றங்களை மன்னிக்கிறீர். உமது சிலுவைப்பாதைகளின் வழியில் என்னையும் எனது வாழ்வையும் சீர்தூக்கி பார்த்து உமது வழியில் பயணம் தொடர, மனம்மாற, உறவில் வளர இந்த சிலுவைப்பாதை பக்தி முயற்சி பயன்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

பாடல்: இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்.

முதல் நிலை: இயேசு தீர்ப்பிடப்படுகின்றார்
'உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையை சார்ந்தவன் எவனும் எனது குரலுக்கு செவிமடுக்கிறான்." (யோவான்18:37).

இயேசுவுக்கு அளித்த தீர்ப்பில் உண்மை ஊமையாகிவிட்டது. நீதி தடம் புரண்டு விட்டது மறுக்கப்பட்டு விட்டது. ஆனால் உண்மையை ஒருநாளும் உறங்க வைத்துவிட முடியாது. ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். தவறு செய்பவர்கள் தண்டிகப்பட வேண்டும் என்பது தான் உலகத்தின் நியதி ஆனால் நிரபராதிகள் தண்டிக்கப்படுவது அநீதியானது. இன்றைய எனது அன்றாட வாழ்க்கை சூழ்நிலையில் நான் தவறு செய்திருந்தும், குற்றம் புரிந்திருந்தும் தண்டிக்கப்படக்கூடாது என்றே விரும்புகிறேன், தவறு செய்த எனது உறவினரை நண்பரை காப்பாற்ற வேண்டும் என்றே எண்ணுகிறேன். ஆனால் மற்றவர்கள், எனக்கு வேண்டாதவர்கள் குற்றம் செய்தபோது தவறு செய்தபோது அவர்களை தண்டிக்க வேண்டும், தண்டணை பெறவேண்டும் என்றே என் மனம் எண்ணுகிறது, முயற்சிக்கிறது. ஆண்டவர் இயேசுவோ குற்றம் ஏதும் செய்யாத நிலையில் தான் தண்டிக்கப்படுகிறார்.
அன்பு இயேசுவே எனது வாழ்வில் பிறர்மீது அவதூறான பழிச்சொல் கூறாது எவரையும் தவறாக மதிப்பிடாது உண்மைக்கு மட்டும் துணை நின்று சான்று பகர்ந்து செயல்பட அருள்தாரும்.
இரண்டாம் நிலை: இயேசுவின் தோள் மேல் சிலுவை சுமத்துகிறார்கள்
'இயேசு சிலுவையைத் தாமே சுமந்து கொண்டு எபிரேய மொழியில் கொல்கொத்தா எனப்படும் இடத்திற்கு சென்றார். அதற்கு மண்டை ஓடு என்பது பொருள்". (யோவான் 19:17)

சுமக்கிறவனுக்குத்தான் சுமையின் பாரம் தெரியும் ஆனால் வாழ்வே சுமையாகிவிட்டால் .. ..என்ன செய்வது.சிலுவை அவமானத்தின் சின்னம், கள்வர் கொடியவர்களைத்தான் சிலுவையில் அறைந்து தண்டிப்பது மக்களின் வழக்கம். ஆனால் அத்தகைய கொடிய தண்டணைய இயேசுவின்மேல் சுமத்துகிறார்கள். ஆண்டவர் இயேசு தனது வாழ்நாளில் எவருக்குமே ஒரு சுமையாக இருந்ததே இல்லை துன்பம் தந்தவராகவும் இல்லை.
அன்பு யேசுவே எங்கள் அருள்வாழ்வில் ஆன்ம வாழ்வில் மற்றவர்களுக்கு சுமைகளாக இல்லாமல் சுகம் தருபவர்களாக செயல்படவும் நாங்கள் சந்திக்கின்ற துன்பங்களை,வேதனைகளை சவால்களாக ஏற்று வாழ அருள்தாரும்.
மூன்றாம் நிலை : இயேசு முதன்முறையாக கீழே விழுகிறார்.
'அற்ப காரியங்களை அசட்டை செய்கிறவன் படிப்படியாக விழுவான்" (சீராக் 19:1)

வீழ்ச்சி மனித வாழ்க்கையின் எழுச்சிக்கு ஓர் முன தயாரிப்பு. வாழ்க்கையில் வீழ்ந்தவனெல்லாம் மடிந்து போவதில்லை மடிந்து போனவனெல்லாம் மக்கி போவதுமில்லை. வீழ்ந்து எழுவதில் தான் புது வழிகளை காணமுடியும். சாய்ந்து வளைந்து கொடுத்து நிமிர்ந்து நிற்பதில் தான் வாழ்க்கையின் அர்த்தம் பொருள் புரியும். நாணல் செடி, காற்றிலே சாய்கிறதே ஒழிய, சரிந்து விழுவதில்லை.நடக்கமுடியாதவர்களை நடக்கச் செய்தார் பார்வையற்றவர்களை பார்க்கச் செய்தார் அத்தகைய வல்லமை பெற்ற இயேசுவா இங்கே கீழே விழுந்து கிடக்கிறார். ஏன்? எதற்காக? தண்ணீரில் விழுந்த ஒருவரை காப்பாற்ற வேண்டுமென்றால் நாமும் தண்ணீரில் விழுந்துதானே காப்பாற்றமுடியும். அது போல பாவ படுகுழியில் வீழ்ந்துவிட்ட நம்மை காப்பாற்றத்தானே ஆண்டவர் இயேசுவும் சிலுவையோடு சேர்ந்து கீழே விழுகிறார்.
இயேசுவே எனது பாவச்சுமைகள் கொடூரச்செயல்கள், அன்பற்ற. இரக்கமற்ற தன்மைகள் உமக்கு இன்னும் அதிகமான வேதனையைத்தானே தருகின்றன. நான் இனி மனம்மாறி உம் துணையுடன் எழுந்து நடக்க அருள்தாரும்.
நான்காம் நிலை : இயேசு தம் தாயை சந்திக்கிறார்
'பெற்ற தாய்க்கு அன்பு வற்றிப்போகுமோ? பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ?’  (எசயா 49:15)

மனித வாழ்வில் மிகச் சிறந்த வழியாக, உயிராகி, உடலோடு ஒன்றித்திருப்பவள் தாய்மட்டும் தான். பாராட்டி, சீராட்டி, அன்புகாட்டி ஒரு உயிருக்கு உரமிடுபவளும் தாய்தான். எந்த ஒரு தாயும் தன் மகன் அல்லது மகள் துன்பப்படவேண்டும் வேதனையடைய வேண்டும் என எண்ணுவதில்லை. மாறாக உதவ வேண்டும் வழிகாட்ட வேண்டும் என்றே உண்மையான பாசத்தால் தாய் செயல்படுவார்கள். அதேபோல அன்னை மரியாவும் தம் ஒரே மகன் மீது வைத்திருந்த அன்பினால், பாசத்தினால் துன்பநேரத்திலும் இயேசுவை சந்திக்கிறார்கள் ஆறுதல் தருகிறார்கள்.
அன்பு இயேசுவே எங்கள் குடும்பங்களில் நாங்கள் பல நேரங்களில் தாயின் உண்மையான அன்பை உணராது அவமரியாதையாக அன்பின்றி பாசமின்றி நடத்தியிருக்கிறோம். எங்களது தாயின் உண்மையான அன்பை புரிந்து கொண்டு வாழ எங்களுக்கு அருள்தாரும்.
ஐந்தாம் நிலை : சிலுவையை சுமக்க சீமோன் உதவுகிறார்
'பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன் எனக்கு குடிக்கக் கொடுத்தீர்கள் நோயுற்றும், சிறையிலுமிருந்தேன் என்னை காண வந்தீர்கள்’ (மத்தேயு 25: 35-36)

பிறருக்கு உதவும் உள்ளங்களே உயர்ந்த உள்ளங்கள். ஆபத்தில் உதவிசெய்வது தவறில்லை. உதவி கேட்டு வருபவனுக்கு உள்ளதையெல்லாம் தரவில்லையென்றாலும் நல்ல, கனிவுள்ள,பண்புள்ள உள்ளத்தையாவது காட்டுபவனே உயர்ந்த மனிதன் எத்தனையோ மக்கள் இயேசு சிலுவை சுமந்து சென்றதை நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். இயேசுவின் துன்பத்தை வேதனையை அவமானத்தை சித்தரவதை செய்யப்படுவதை. ஆனால் சீரேன் என்ற ஊரைச்சார்ந்த சீமோன் மட்டும் இயேசுவின் சிலுவையை சுமக்க தனது உதவிக் கரம் நீட்ட முன் வருகின்றார்.
இயேசுவே எத்தனையோ சூழ்நிலைகளில் மற்றவர்கள் உதவியை மட்டுமே நான் எதிர்பார்த்து வாழ்ந்திருக்கிறேன். மற்றவர்கள் துன்பப்படும்போதும்கூட பார்த்து சந்தோசம் தான் அடைந்திருக்கிறேன். பிறரது துன்பத்தில் உதவக்கூடிய மனித மாண்புடன் வாழும் நல்ல உள்ளத்தை தாரும்.
ஆறாம் நிலை: வெரோணிக்கா இயேசுவின் முகத்தை துடைக்கிறாள்.
'அழுகிறவர்களை மகிழ்விக்கவும், சாம்பலுக்கு பதிலாய் மணிமுடியையும், அழுகைக்கு பதிலாய் மகிழ்சியின தைலத்தையும், நைந்த உள்ளத்திற்குப் பதிலாய் புகழ் என்னும் போர்வையையும் தரவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்" (எசயா 61:3)

வாடிய உள்ளங்களை, முகங்களை கண்டபோதெல்லாம் வாடுகின்ற மனது எல்லோருக்குமே வருவதில்லை. துன்பத்தில், சோதனையில்,வேதனையில் சோர்ந்துபோனவருக்கு சுகம் தருகின்ற சுயநலமில்லாத மனம் உள்ளவர்கள் தான் உதவ முடியும். அருளும் இரக்கமும் கருணையுமே உருவான இயேசுவின் இனிய முகம் கரைபடிந்துள்ளதை சோர்வுற்றிருப்பதை வெரோணிக்கா என்ற பெண் பார்த்து பதட்டத்துடன் இயேசுவின் முகத்தை துடைத்ததும் இயேசுவும் பரிசாக தன் திருவுருவை அந்தத் துணியில் பதியச்செய்கிறார்.

நாம் ஒவ்வொருவரும் நமது மனசாட்சியின் படி செயல்பட முன்வரும்போது நல்லவைகளை நேர்மையானதை உண்மையானதை செய்யமுடியும். நல்ல மனதுடன் நேர்மையான உள்ளத்துடன் சுயநலமின்றி செயல்படத்தானே இறைவன் நமக்கு மனசாட்சியை தந்துள்ளார். 
மனசாட்சியின் குரலை கேட்டு செயல்படும் போது தான் நல்லதை நேர்மையானதை செய்யமுடியும் என்பதை உணர்ந்து செயல்பட இயேசுவே எமக்கு அருள்தாரும்.
ஏழாம் நிலை : இரண்டாம் முறையாக இயேசு கீழே விழுகிறார்
'மெய்யாகவே அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார், நம்முடைய நோய்களைச் சுமந்து கொண்டார்’ (எசயா 53:4)

படுகுழி எனத்தெரிந்தும் விழுபவன் பக்குவமடையாதவன். மீண்டும் மீண்டும் விழுந்து எழுபவன் அனுபவசாலி. பாரமிருந்தாலும் தூரம் செல்ல தயங்காதவன் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன். மனித சமுதாயத்தை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலுவை மரணத்திற்கு தம்மையே கையளித்தவர் ஆண்டவர் இயேசு. சிலுவையின் பாரம் கசையடிகள் தடுமாற்றத்துடன் சோர்வடைந்த கால்கள், உடல் பலமின்றி தரையில் விழுகிறார் மீண்டும்.
அன்பு தெய்வமே இயேசுவே எங்களது வாழ்வின் குறிக்கோளை, இலட்சியத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் சோர்ந்துவிடுகிறோம், தளர்ந்து விடுகின்றோம். எங்களது வாழ்வின் துன்பங்கள் சுமைகள் சோகங்கள் அன்பைப் பகிர்ந்து வாழ துணையாய் உள்ளன என்பதை கண்டுகொண்டு இலட்சியத்தோடு பணிபுரிய அருள்தாரும்.
எட்டாம் நிலை : இயேசு எருசலேம் மகளிருக்கு ஆறுதல் கூறுகிறார்
'முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்துஎறி பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க கண்தெரியும்’ (மத்தேயு 7:5)

கண்ணீர் விட்டு கதறி அழும்போது மனிதனின் பாரம், தூரம் சென்று விடுகிறது. கண்ணீர் இதய பாரத்தின் வெளிப்பாடு கண்ணீர் சோகத்தின், துன்பத்தின் பெருமூச்சு. அதிகமான துன்பத்தின் மத்தியிலும் தமது வேதனையை பொருள்டுத்தாமல் தனது துன்பத்தை கண்டு வேதனைபட்ட யெருசலேம் பெண்களைப் பார்த்து ஆறுதல் தருகிறார். எப்படி இயேசுவால் மட்டும் இப்படி சொல்ல முடிந்தது. காரணம் தனக்கென வாழாது பிறருக்கென்றே வாழத்துடித்தார். எனவே தனது துன்பத்தை வேதனையை பற்றி கவலை கொள்ளாது தன்னை நாடி வந்தவர்களுக்கு ஆறுதல் தருகிறார்.
அன்பு தெய்வமே இயேசுவே எத்தனையோ நேரங்களில் நாங்கள் பிறரை துன்புறுத்தி கொடுமைபடுத்துவதிலேயே மகிழ்வைக் கண்டிருக்கிறோம். வேதனையில் இருப்போருக்கு ஆறுதல் தர அரவணைப்பு காட்ட பிறர் நலத்துடன் வாழ அன்பு செலுத்த நல் உள்ளம் தாரும்.
ஒன்பதாம் நிலை : இயேசு மூன்றாம் முறையாக கீழே விழுகிறார்
'நீங்கள் முதுமையடையும் வரையில் நாம் மாற மாட்டோம், உங்கள் தலை நரைக்கும் வரை உங்களைத் தூக்கிச் செல்வோம் நாமே படைத்தோம், நாமே உங்களைத் தாங்கினோம், நாமே உங்களை விடுவிப்போம்’ (எசயா 46:4)

பாரமிருந்தாலும் தூரம் செல்ல தயங்காதவன் பலமுறை வீழ்ந்த போதும் பக்குவமாக எழுந்து நடப்பவன் தான் பக்குவப்பட்ட மனிதன். ஆண்டவர் இயேசு தமது இலட்சியத்தை அடைய வேண்டும் நம் அனைவருக்கும் மீட்புத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் துணிவுடன் இருந்தார். ஆனால் அவரது உடல் வேதனை சோர்வு களைப்பு இவற்றால் தாங்க முடியாத நிலையில் மீண்டும் மூன்றாம் முறையாக தரையில் விழுகிறார். இயேசு தமக்காக அல்ல தாங்கமுடியாத வேதனையிலும் நம்மீது கொண்ட அன்பினாலே தொடர்ந்து சிலுவை சுமக்க உறுதி பெறுகிறார்.
அன்பு இயேசுவே எங்கள் வாழ்விலும் நாங்கள் எத்தனையோ தடைகளை, துன்பங்களை ,சோதனைகளை சந்திக்கும் போது மனந்தளர்ந்து சோர்ந்துவிடுகிறோம். வாழ்ந்தும் பயனில்லை என்ற நிலைக்கும் சென்றுவிடுகிறோம். உமது அருளில் நம்பிக்கை கொண்டு சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற எமக்கு அருள்தாரும்.
பத்தாம் நிலை : இயேசுவின் ஆடைகளை களைகிறார்கள்
'துன்புறுத்துகிறவர்களுக்கு என் உடலை கையளித்தேன், என் தாடியைக் பிய்க்கிறவர்களுக்கு என் கன்னங்களைக் காட்டினேன் நிந்தை கூறுவோர்க்கும், காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை’ (எசயா 50 : 6)

ஆடையில்லாதவன் அரைமனிதன். மனிதனின் மதிப்பீட்டை உயர்த்துவதே அவனது ஆடைதான.; சாட்டையடிகளால் உடலோடு உடலாக இயேசுவின் ஆடைகள் ஒன்றாய் ஒட்டியிருந்தது. அவற்றை களைந்தபோது மீண்டும் இரத்த வெள்ளம் பெருக்கெடுக்கிறது. துன்பத்திற்கு மேல் துன்பம் அதிகரிக்கிறது. வேதனைகளின் மத்தியில் துடிதுடிக்கிறார்.
அன்பு இயேசுவே ஆடை மனித மாண்பின் அடையாளம் அவற்றையும் களைந்து இன்னும் அதிகமான முறையில் கொடுமைபடுத்திய போதும் எல்லாவற்றையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டீர். எங்களது துன்பத்திலும் சோதனையிலும் நாங்கள் விசுவாசத்தை இழந்துவிடாது பொறுமையுடன் உம்முடன் நடக்க அருள்தாரும்.
பதினொன்றாம் நிலை : இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்
'நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார். நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார். நம்மை நலமாக்கும் தண்டனை அவர்மேல் விழுந்தது. அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்’ (எசயா53 :5)

பிறருக்காக வேதனையை சுமப்பவன் தியாகி. அன்புக்காக அவதிப்படுபவன் நண்பன். ஆண்டவனுக்காக வலியை தாங்கிக்கொள்பவன் பக்தன். நியாத்திற்காக, உண்மைக்காக,பிறருக்காக, அன்புக்காக, ஆண்டவனுக்காக காயப்படுபவனே முழு மனிதன் எத்தனையோ உள்ளங்களை உடல் நோயாளிகளை தொட்டு ஆசீர்வதித்த கைகளில் கால்களில் ஆணிகளை அடிக்கிறார்கள். ஒரு சிறு கல் நமது காலில் இடித்தாலும் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறோம். ஆனால் இயேசுவின் கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்து சிலுவை மரத்தோடு அவரது உடலை இணைத்தபோது எவ்வளவு கொடிய துன்பத்தை அனுபவித்திருப்பார் ? யாருக்காக ? உனக்காக !.. .. .. எனக்காக! .. .. நமக்காகத்தானே ?
அன்பு இயேசுவே எனக்காகவே நீர் காயப்பட்டீர்; அடித்து நொறுக்கப்பட்டீர். உமது காயங்களால்;தளும்புகளால் நாங்கள் சுகம் பெற்றுக் கொண்டோம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டு செயல் பட அருள் தாரும்.
பனிரெண்டாம் நிலை: இயேசு சிலுவையில் உயிர்விடுகிறார்
'நண்பகல் தொடங்கி மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. ஏறக்குறைய மூன்று மணிக்கு இயேசு என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர் என்று உரக்கக் கத்தி ஆவி துறந்தார்’(மத்தேயு 27:45-46).

மனிதன் விரும்பாத ஒன்று சாவு மட்டுமே, ஆனால் அதை யாராலும் மறுத்துவிட முடியாது.காலையில் மலர்ந்து மாலையில் மடிகின்ற மலர்களைப் போன்றவன் மனிதன். நீர்குமிழி போன்று நிரந்தமில்லாதது தான் மனித வாழ்வு. விண்ணையும் மண்ணையும் படைத்து பாதுகாத்து பராமரித்து வந்தவரை விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவே கல்வாரிமலை உச்சியிலே கள்வர்கள் நடுவில் எல்லாம் முடிந்தது எனக்கூறி உயிர்விடுகிறார்.
அன்பு தெய்வமே உமது இறுதி மூச்சு உள்ளவரை எங்களுக்காக எத்தனையோ துன்பங்கள் வேதனைகள் இறுதியாக உம்மிடமிருந்த உயிர்மூச்சையும் எங்களுக்காவே துறந்தீர். இனி நான் எனது வாழ்வில் வார்த்தைகளில் உறவில் அன்பில் மாற்றம் கண்டு உமக்காய் வாழ அருள்தாரும்.
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திருஇரத்தம் சிந்தும் தேவனைப் பார்

பதிமூன்றாம் நிலை : இயேசு அன்னை மரியாவின் மடியில்
"உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்". லூக்கா 2:35

தாய் சொந்தம் மட்டுமே தவிர்க்க முடியாதது. தாய் சொந்தம் மட்டுமே நிரந்தரமானது நிலைத்திருக்கக் கூடியது. இதோ உமது அடிமை உமது விருப்பமே நடக்கட்டும் என்று இறைவிருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற வந்த அன்னை மரியா தன் ஒரே மகனை பரிவுடனும் பாசத்துடனும், கனிவுடனும் கவனித்து வந்த அந்த அன்பு அன்னை தனது மகனின் உயிர் பிறிந்த உடலை மடியில் கிடத்தி தாங்கமுடியாத வேதனைகளை அனுபவித்திருப்பர்கள்.
அன்பு இயேசுவே உமது வேதனைகளில்; துன்பங்களில் உமது அன்னை பங்குகொண்டார்கள் எங்களது பெற்றோர்களின் அன்பை, கருணையை, பாசத்தை உணர்ந்து இறுதிவரையும் அன்பு காட்டி அக்கறை கொண்டு உண்மையான குடும்ப வாழ்வில் வளரும் நல்உள்ளத்தை தாரும்.
பதிநான்காம் நிலை : இயேசுவின் உடலை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
'நரிகளுக்கு வளைகள் உண்டு@ வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு, மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை’ (மத்தேயு 8 : 20)

அடக்கத்திற்கும் அமைதிக்கும் பெயர் போனதுதான் கல்லறை. இன்றைய காலகட்டத்தில் நல்லவர்களை நேர்மையானவர்களை விரைவாக கல்லறையில் உறங்கச் செய்து விடுகின்றனர். நன்மையை, உண்மையை, நீதியை நிலைநாட்ட விரும்பிய இயேசுவை கொன்று அடக்கம் செய்துவிட்டனர். இன்று நாம் வாழும் இந்த உலகிலும் உண்மையை நீதி நேர்மையை கடைபிடிப்பவர்களை தீர்த்துக் கட்ட வேண்டும் என்றுதான் உலகம் நினைக்கிறது.கல்லறைகள் தான் மனிதனுக்கு நிரந்தரமானவைகள்.
அன்பு இயேசுவே உண்மையை நன்மையை நீதியை மட்டும் நாங்கள் கடைபிடிக்க தேவையான மனதிடனை தாரும். துன்பத்தின் மத்தியில் தான் முழு இன்பத்தை காண முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டு செயல்பட அருள் தாரும்.
முடிவுரை: அன்புக்குரியவர்களே இயேசுவின் சிலுவைப்பாதையின் வழியில் நடந்து சிந்தித்த நாம் இதோடு நிறுத்தி விட்டோமென்றால் ஏதோ வாடிக்கையாக, வேடிக்காக செய்கின்ற செயலாகத்தான் மாறி விடும். அப்படியில்லாமல் நமது அன்றாட வாழ்வில், உறவின் வாழ்வில் மாற்றம் காண,உண்மையான உறவு நிலைகளை உருவாக்க முயல்வோம். இறைவனின் அருள்துணையை கேட்டு மன்றாடுவோம்.

Thanks to Rev. Fr. S. Emmanuel, Doctoral Student in Missiology, St. Peter's Pontifical Seminary, Bangalore

2 கருத்துகள்: