பாஸ்காத் திருவிழிப்பு சடங்குகள்

பாஸ்காத் திருவிழிப்புக்குத் தேவையான பொருட்கள் 
1. அனைவரும் மெழுகுதிரி வைத்திருத்தல் வேண்டும்
2. கோவில் முற்றத்தில்
எரியும் நெருப்பு, பாஸ்காத் திரி, பவனிக்குச் சிலுவை, இரண்டு திரிகள், தூபக்கால், ஐந்து சாம்பிராணி மணிகள், எழுதுகோல், திருப்பலி புத்தகம் டார்ச் லைட், தீப்பெட்டி
3. பீடம்: அலங்கரிக்கபட்டு திரிகள் ஏற்றப்படாமல் இருக்கும்
4. பீடம் அருகில்: பாஸ்காத் திரி வைக்கும் தாங்கி, பெரிய பாத்திரம் நிறைய தண்ணீர்
5. சிறிய மேசையில்: தீர்த்தச் செம்பு, கைகழுவத் தண்ணீர், பாத்திரம், சோப்பு, துண்டு, திரு எண்ணெய்கள் (நுளீ, றீளீ) திரு முழுக்குத் திருச்சடங்கு நூல், (ஞானஸ்நானம் இருந்தால்) திருப்பலிக்கு தேவையான பொருட்கள். 

முன்னுரை:  
சாவை வீழ்த்தி வெற்றி கிடைக்க சரித்திர நாயகன் இயேசு, உயிர்க்கப் போகும் உன்னத இரவு இன்று நாம் அனைவரும் கூடியிருக்கும் ஆண்டவரின் பாஸ்கா திருவிழிப்பு, பாஸ்கா என்றாலே கடந்து போதல் என்று பொருள். சாவைக்கடந்து உயிர்ப்பை பெற்ற இயேசுவைப் போன்று, செங்கடலை கடந்து, அடிமைவாழ்வை ஒழித்து வாக்களிக்கப்பட்ட வளமான கானான் நாட்டிற்கு இஸ்ராயேல் மக்கள் கடந்து சென்றது போன்று நாமும் நம்முடைய பாவ இயல்புகளை களைந்து, பழைய வாழ்வை மறந்து இயேசுவின் அன்பைப் பெற்ற புதியமக்களாக, உயிர்ப்பு பெற்று வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுகின்றது. பாவத்திலிருந்து புனித வாழ்விற்கு அடிமைத்தனத்திலிருந்து இயேசுவின் ஒளியிலும் வாழ்வதற்கு தேவையான வரங்கள் வேண்டி இன்றைய திருவிழிப்பு சடங்கிலே பங்கேற்போம். 

இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளை உடையதாக அமைந்துள்ளது

1. ஒளி வழிபாடு
2. இறைவார்த்தை வழிபாடு
3. திருமுழுக்கு வழிபாடு  
4. நற்கருணை வழிபாடு 

எனவே, இத்திருவழிபாட்டில் பக்தியோடு பங்கேற்போம்.

1. ஒளி வழிபாடு
1. புதுத்தீயை மந்திரித்தல்
நெருப்பு பல வகைகளில் மனிதனுக்கு பயன்படுகிறது. நெருப்பு தூய்மை படுத்தும் கருவியாகவும், ஒளியை கொடுக்கக் கூடியதாகவும் விளங்குகிறது. திருவழிபாட்டில் நெருப்பு தூபத்திற்கு பயன்படுகிறது. எனவே இந்த நெருப்பை இப்போது குருவானவர் புனிதப்படுத்துகிறார். 

2. பாஸ்கா திரியின் விளக்கம்
பாஸ்கா திரி கிறிஸ்துவை குறிக்கிறது. அதில் வரையும் சிலுவை அடையாளம், சிலுவை மரத்தின் வழியாகத்தான் உயிர்ப்பின் மகிமை  உண்டு என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்து காலங்கள் யாவற்றையும் கடந்து நிற்கிறார் என்பதைக் குறிக்கின்ற வகையில் குருவானவர் பாஸ்கா திரியில், அகரமும், னகரமும் என்ற எழுத்துக்களையும், சிலுவையின் நான்கு கோணங்களில், நிகழும் ஆண்டின் எண்களையும் எழுதுகின்றார். பிறகு ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் பதிப்பார். அது இயேசுவின் ஐந்து காயங்களைக் குறிக்கிறது. 

3. பாஸ்கா திரி ஒளியேற்றுதல்
பாவம் என்னும் இருள் நிறைந்த வாழ்வை களைந்துவிட்டு புது வாழ்வு என்னும் ஒளியின் படைக்கலன்களை அணிந்து கொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாக புனிதப்படுத்தப்பட்ட திரியிலிருந்து பாஸ்கா திரி பற்ற வைக்கப்படுகிறது. உயிர்த்த இயேசு நம்முடைய மத்தியில் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. கிறிஸ்து என்ற திரியோடு நாமும் சேர்ந்து தீபமாக எரிவோம். பிறருக்கு ஒளி கொடுப்போம், வழிகாட்டுவோம். 

4. பாஸ்கா பவனி
அன்று இஸ்ரயேல் மக்களை இறைவன் நெருப்புத்தூண் வடிவில் மோயீசன் தலைமையில் வழிநடத்த , செங்கடலை கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு சென்றனர். பாஸ்காவின் உண்மையை, அதாவது, பாவத்திலிருந்து நாம் புதுவாழ்வு பெறவும், கிறிஸ்துவின் ஒளியை எல்லா மக்களுக்கும் காட்டி, அவர்களையும், ஒளியாகிய இறைவனிடம் கூட்டி வரவும் இந்த பவனி நமக்கு நினைவுபடுத்துகிறது. 

(ஒவ்வொரு முறையும் குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடும்போது இறைவா உமக்கு நன்றி என்று அனைவரும் சேர்ந்து பதில் கூறவேண்டும். கிறிஸ்துவின் உயிர்ப்புப் புத்தொளியில் நாமும் பங்கு பெறுவதைக் குறிக்கும் வண்ணம் இரண்டாம் முறையாக நாம் இறைவா உமக்கு நன்றி என்ற பதில் பாடிய பிறகு நம்மிடம் உள்ள மெழுகு திரிகளை பாஸ்கா திரியிருந்து பற்ற வைத்துக் கொள்வோம். மூன்றாம் முறையாக பாடிய பிறகு ஆலயத்தின் அனைத்து விளக்குகளும் ஏற்றப்படும்).  (இது முடிந்தவுடன்)

5. பாஸ்கா புகழுரை
மெசியாவாகிய இயேசு ஒளியானவர். இந்த ஒளி திருச்சபையில் இன்று மீட்பின் கருவியாக செயலாற்றுகின்றது. இந்த மீட்பின் வரலாறு இப்போது புகழுரையாக பாடப்படுகிறது. ஆகவே அனைவரும் கைகளில் எரியும் மெழுகுதிரிகளை பிடித்துக்கொண்டு நின்ற வண்ணம் பக்தியோடு மீட்பின் வரலாற்று உண்மைகளை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோம்.

2. இறைவார்த்தை வழிபாடு
முதல் வாசக முன்னுரை (தொநூ 1: 1-2: 2)
இறைவன் அனைத்துலகிற்கும் தலைமை வகிப்பவராக அனைத்தையும் ஆளுபவராக இருக்கிறார். எனவேதான் அவர் அனைத்தையும் படைத்து இருளை இல்லாமல் செய்து இறுதியில் மனிதனை தம் சாயலிலே படைத்து அவனை படைப்பின் சிகரமாக்கினார், அவனோடு உறவுகொண்டு வழிநடத்தினார் எனக் கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (விப 14:  15 -15:  1)
இறைவன் தொடக்கம் முதல் இஸ்ராயேல் மக்களை பல்வேறு துன்பங்களிலிருந்து காத்தார், மோயீசன் தலைமையில் இஸ்ராயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற அற்புத நிகழ்வுகளையும், எகிப்தியரை முறியடித்து மக்களை காப்பாற்றினார் என்பதையும் வாசிக்க கேட்போம். 

மூன்றாம் வாசகம் (எசே 36:  6-28)
இறைவனின் அன்பையும் அரவணைப்பையும் உணராததால் இஸ்ராயேல் மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். பாவத்தால் இறுகிப்போன மனித உள்ளங்கள் திரும்பி ஆண்டவருக்குள் வருகிறபோது, தூய நீரினால் தூய்மையாக்கி தன்னோடு சேர்த்துக்கொள்வார் என்று கூறும் இவ்Vசகத்தைக் கேட்போம்.

(மூன்றாம் வாசகம் முடிந்தவுடன் உன்னதங்கிளிலே பாடப்படும் மணி அடிக்கப்படும், பீடத்தின் திரிகள் பற்றவைக்கப்படும்). 

திருமுகம் (உரோ 6: 3-11)
இயேசு கிறிஸ்துவோடு துன்பப்படுகிறபோது இறக்கிறபோது திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம், எனவே பாவ வாழ்வைக் கடந்து தூய வழிகளில் வாழுங்கள் எனக் கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம். 

நற்செய்தி வாசகம் (லூக் 24:  1-12) 
3. திருமுழுக்கு வழிபாடு: திருமுழுக்கு வழிபாடு கிறிஸ்தவர்கள் எனப்படுகிற நாம் அனைவரும் இயேசுவின் இறப்பிலும், உயிர்ப்பிலும் பங்கேற்கிறோம் எனபதைக் குறித்துகாட்டுகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது விசுவாசத்தின் ஆணிவேர். ஆகவே கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பில் விசுவாசம் கொண்டு, நமது வாழ்வை தூய்மைப்படுத்திக் கொள்ள இந்த வழிபாட்டில் பங்கெடுப்போம்.  
இப்போது குருவானவர் நீரின் மீது இறைவன் இறங்கிவர நம் அனைவரையும் மன்றாட அழைக்கிறார். தொடர்ந்து புனிதர்கள் பிரார்த்தனை பாடப்படுகிறது. அனைத்துப் புனிதர்களின் பரிந்துரை வழியாக இறைவனின் அருள் இந்த திருமுழுக்கு தொட்டியில் உள்ள நீரில் இறங்க அனைவரும் எழுந்து நின்று மன்றாடுவோம். 

புனிதர்களின் பிராத்தனை

திருமுழுக்குத் தண்ணீர் மந்திரிக்கப்படுகிறது:
தண்ணீர் கடவுளுடைய கொடைகளில் முதன்மையானது. உலகம் உண்டாவதற்கு முன் தண்ணீர்தான் எங்கும் நிறைந்திருந்தது. இந்த தண்ணீரின் தன்மைகள், பலன்கள் கணக்கற்றவை. யோர்தான் ஆற்றிலே இயேசுவை ஆவியால் அபிஷேகம் செய்வதற்கு தண்ணீர் தேவைப்பட்டது. இன்றும் நாம் புனிதமடைவதற்கு புதுப்படைப்பாவதற்கு திருமுழுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகவே இப்போது குருவானவர் இந்த தண்ணீரை ஆசீர்வதித்து புனிதப்படுத்துகிறார்.
(குருவானவர் தண்ணீரிலிருந்து திரியை எடுத்தவுடன்)  அனைவரும் இப்போது நான் சொல்வதை தொடர்ந்து சொல்லுங்கள். 
“நீரூற்றுகளே ஆண்டவரைப் போற்றுங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்”
திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல்:  அனைவரும் மெழுகுதிரிகளை பற்றவைத்துக் கொள்ளுங்கள் இது ஒரு மகத்துவமிக்க நேரம். திருமுழுக்கின்போது நமது ஞானபெற்றோர்கள், நமக்கு பதிலாக வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். இப்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நாமே புதுப்பித்து கொள்வோம். 

உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டுமானால் இறைவனுக்கு எதிராக உள்ள தீயசக்திகளை விட்டுவிடுகிறேன் என்றும் கடவுளின் வெளிப்பாட்டினையும், வழிகாட்டுதலையும் ஏற்றுக்கொள்கிறேன் (அதாவது ஒருமையில் விட்டு விடுகிறேன் ஏற்றுக்கொள்கிறேன்) என்றும் பதிலளிப்போம்.

(வாக்குறுதிகள் புதுப்பித்தவுடன் தீர்த்தம் தெளிக்கப்படும். (தேவாலய வலபுறம்....) அதன்பின் இறைமக்களின் வேண்டல்கள்)

இறைமக்களின் வேண்டல்கள்:
1.  வாழ்வின் நாயகனே இறைவா! நீர் சாவினை வென்று, பாவத்தை அழித்து, இருளை அகற்றி வெற்றி வீரராய் உயிர்த்தது போல, நாங்களும் எங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற சோதனைகளில் வெற்றி பெற்று உயிர்ப்பின் மக்களாய் வாழ, உம் வழியில் வெற்றி நடை போடத் தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒளியின் பிறப்பிடமே இறைவா! இஸ்ரயேல் மக்கள் வேதனைகளையும், இன்னல்களையும் கடந்து பாஸ்காவிழாவைக் கொண்டாடியதுபோல, உமது உடலாகிய எம் திருச்சபையும் அனைத்து எதிர்ப்புகளையும், முரண்பாடுகளையும் கடந்து இந்த உயிர்ப்பின் விழாவினைக் கொண்டாடிடவும், பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்பப் பெற்று வாழ்ந்திடவும், வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
3. உலகின் மீட்பரே!  உம்முடைய உயிர்ப்பு விழாவைக் கொண்டாடும் என் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். இறைமக்கள் அனைவரும் உம்முடைய உயிர்ப்பின் ஒளியைப் பெற்று, திருச்சபையின் உண்மையான உறுப்பினர்களாக வாழத் தேவையான அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
4. வாழ்வின் வள்ளலே! பல்வேறு பிரச்சனைகளால் அல்லல்படும் எம் நாட்டிற்காக வேண்டுகிறோம். எம் நாட்டு மக்கள் உண்மையான விடுதலை பெறவும், எம் நாட்டுத் தலைவர்கள் சிறப்பாகவும், நேர்மையான முறையில் மக்களை வழிநடத்தவும், வேண்டிய ஞானத்தைத்தர இறைவா உம்மை வேண்டுகிறோம். 

புனித வெள்ளி (06.04.2012)

திருச்சிலுவை ஆராதனைக்கு தேவையானவை 

கோவில் முன்புறம்: திருவுடைகள் (சிகப்பு) மூடப்பட்ட சிறிய சிலுவை, மெழுகுதிரிகள், மரமணி. 
பீடத்தின் முன் பகுதியில்: பாய், தலையணை விரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பீடம்; திருப்பலி புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் வாசக மேடை துணியின்றி இருக்கும்.
சிறிய மேசையில்:  திருமேனித்துகில், நற்கருணைத் தட்டு, சிலுவைகள், உண்டியல், துடைக்கத்துணி, திருப்பாடுகள் வாசிக்க மூன்று புத்தகங்கள், பாத்திரம்துடைக்க சிறிய துணி, குவளையில் தண்ணீர். 
குறிப்பு: திருச்சிலுவையை முத்தி செய்த பிறகு பீடத்தின் மீது துணி விரிக்கப்படும். இறுதியில் பீடத்தின் துணியும், சிலுவையை மூடியிருக்கும் துணியும் அகற்றப்படும்.
 
முன்னுரை: தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்று அன்புக்கு இலக்கணம் வகுத்த இயேசு, இதோ இன்று தன்னுயிரை நமது பாவங்களுக்கு கழுவாயாகக் கொடுத்து நாம் மீட்புப் பெற அழைப்பு விடுக்கின்றார். அன்பின் உச்சகட்டமே தன் உயிரைக் கொடுப்பதுதான் என்று வார்த்தைகளால் மட்டுமல்ல மாறாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவையை,  தம்முடைய தியாகப் பலியாக, மீட்பின் சின்னமாக மாற்றுகிறார். ஆம் இன்று திருபாடுகளின் புனித வெள்ளி.
 
பழைய ஏற்பாட்டில் பாலைவனத்தில் யாவே இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்து பாம்பின் கடியினால் இறந்தவர்கள், உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பை பார்த்து உயிர்பிழைத்தார்கள். அந்த முன் அடையாளத்தன்படி விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்ட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து நாமும் மீட்பு பெற வரம் வேண்டி இன்றைய நாளிலே மன்றாடுவோம். இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் ஆழமாக சிந்தித்தவர்களாக வழிபாட்டிலே பக்தியோடு பங்கேற்போம். 
இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளை உடையதாக அமைந்துள்ளது
  1. இறைவார்த்தை வழிபாடு 
  2. பொது மன்றாட்டுக்கள் 
  3. திருச்சிலுவை ஆராதனை 
  4. நற்கருணை விருந்து
குருவானவர் முகம் குப்புற விழுந்து செபிக்கும்போது:
இதோ குருவானவர் இயேசுவின் பாடுகளை நினைவுபடுத்தி செந்நிற உடை அணிந்து முகம் குப்புற விழுந்து நம் அனைவரோடும் சேர்ந்து செபிக்கிறார். இந்த நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்தால் வந்த துயரத்தையும், அவருக்கு முன்னால் நமது தகுதியில்லாத தன்மையையும் காட்டுகிறது. அதோடு நாம் அனைவரும் அவரைச் சார்ந்து வாழுகிறோம் என்பதையும் காட்டுகிறது. நாமும் மன்டியிட்டு அமைதியாக குருவோடு செபிப்போம். 
 
எழுந்தவுடன்:
இப்போது குரு இயேசுவின் பாடுகளால் கிடைத்த மீட்பின் பலனை நமக்கு கொடையாக கொடுத்தருளுமாறு தந்தையாம் இறைவனிடம் செபிப்பார் அனைவரும் எழுந்து நின்று செபிப்போம். 
 
1. இறைவாக்கு வழிபாடு

 
முதல்வாசக முன்னுரை (எசா 52: 13 - 53: 12)
இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியர் என்பதையும், அவர் வரும்போது எவ்வாறு பாடுபடப் போகிறார், துன்பங்களை ஏறகப்போகிறார், இவ்வுலகத்தை மீட்க கையளிக்கப் போகிறார் என்பதை இறைஏவுதலால் முன்னறிவிக்கிறார் எசாயா இறைவாக்கினர். எனவே வாசகத்தை கவனமுடன் கேட்போம். 
 
இரண்டாம் வாசக முன்னுரை (எபிரே 4: 14-16, 5: 7-9)
இயேசு கிறிஸ்து குருக்களிலெல்லாம் சிறந்த நித்திய தலைமைக்குரு. இயேசு கிறிஸ்து மற்ற குருக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அதோடு பழைய ஏற்பாட்டின் பலிப்பொருளுக்கும், புதிய ஏற்பாட்டின் செம்மறி பலியாகிய கிறிஸ்துவுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை இப்போது வாசிக்க கேட்போம்.

 
நற்செய்தி வாசகம் (யோவா 18: 1-19, 42)  (மறையுரை)
 
2. பொதுமன்றாட்டுக்கள்:
அன்பார்ந்தவர்களே உலகின் தேவைகளுக்காகவும் திருச்சபையின் தேவைகளுக்காகவும், இயேசு தன்னை பலியாக்கிய இந்த நாளில் உருக்கத்தோடு மன்றாடுவோம். இப்போது குருவானவர் மன்றாட்டை வாசிக்கும்போது நின்றுகொண்டே ஒவ்வொரு மன்றாட்டுக்குப் பிறகும் ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று சொல்லவும், பிறகு குருவானவர் செபிப்பார். அப்போது அனைவரும் மண்டியிட வேண்டும் செபித்து முடித்தவுடன் ஆமென் என்று பதில் கூறவும். 
 
3. திருச்சிலுவை ஆராதனை
இப்போது திருச்சிலுவை ஆராதனை ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்துவின் தியாக பலியால் சிலுவை வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாக, தியாகத்தின் சின்னமாக மாறியது. 
சுமார் 4ம் நூற்றாண்டில் இயேசுவின் பாடுபட்ட சிலுவைக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து திருச்சிலுவைக்கு ஆராதனை செய்து, முத்தி செய்யும் பழக்கம் உருவானது. அதன் அடிப்படையில் குருவானவர் மூடப்பட்டிருக்கும் திருச்சிலுவையை பீடத்தை நோக்கி பவனியாக கொண்டுவருவார். திருச்சிலுவை , பீடத்தை அடைந்தவுடன் குருவானவர் மூடப்பட்டிருக்கும் சிலுவையை சிறிது சிறிதாக அகற்றி திருச்சிலுவை மரமிதோ என்ற வரிகளை பாட நாம் அனைவரும் வருவீர் ஆராதிப்போம் என பாடுவோம். (இவ்வாறு மூன்று முறை பாடப்படும்). பிறகு முதலில் குருவானவர் முத்தி செய்வார் பிறகு அனைவரும் பக்தியோடு, வரிசையாக அமைதியாக வந்து முத்தி செய்வோம்.
 
4. நற்கருணை விருந்து
இப்போது பீடத்தின் மீது துணி விரிக்கப்படும், திருமேனித்துகிலும் திருப்பலிப் புத்தகமும் வைக்கப்படும், பின் குருவானவர் புனிதமிகு நற்கருணையை புது பீடத்திலிருந்து தலைமை பீடத்திற்கு கொண்டு வருவார். நாம் பக்தியோடு நமது வணக்கத்தைச் செலுத்தவோம்.
பின் இயேசு கற்றுக் கொடுத்த செபத்தை சொல்லிய பிறகு, நற்கருணை விருந்தில் பங்கெடுப்போம்.
 
இறுதியில் 
கல்வாரிப் பலியும், சிலுவையும், இறை வல்லமையான அருளும், ஆசீரும் பொங்கி வருகின்ற சக்தியின் இருப்பிடம். எனவே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் தியானித்து அருள் வாழ்விற்காய் உயிர்க்க வேண்டும். மேலும் நமக்கு மீட்பைக் கொணர்ந்த வெற்றியின் சின்னமாகிய சிலுவையையும், அதில் பலியான நம் மீட்பர் இயேசுவையும் தியானித்த வண்ணம் அமைதியாக வீடு செல்வோம். 

பெரிய வியாழன் (05.04.2012)


சடங்கிற்குத் தேவையானவை:

கோவில் முன்புறம்: திரு உடைகள் (மஞ்சள்) தூபம், சாம்பிராணி, மெழுகு திரிகள், திருச் சிலுவை, பன்னிரெண்டு ஆண்கள்,  மேசை,  வெள்ளைத் துணி, திருப்பலிப் பாத்திரம் இரசம், அப்பம்,  மரமணி. 
பீடம்திருப்பலிப் புத்தகம், மெழுகுதிரி, பீட அலங்காரம் 
(வழக்கம்போல் அமைதல் வேண்டும்)

பாதம் கழுவும் சடங்கிற்கு (சிறிய மேசையில்): குவளையில் தண்ணீர், பெரிய பாத்திரம், துண்டு, சோப்பு, இடுப்பில் கட்ட துணி, பிரெட் (12),  மரமணி, கைமணி.

காணிக்கை மேசை: இரண்டு நாளுக்கு தேவையான திருஅப்பம், வழக்கமான பிற பொருட்கள் இருத்தல் வேண்டும். 

நற்கருணை ஆராதனைக்கு: திருமேனிதுகில், மெழுகுதிரி, தூபம், சிறப்பு பீடம் அலங்கரிக்கப்பட வேண்டும் (திருப்பலி துவங்குமுன் நற்கருணைப் பேழை வெறுமையாய் இருக்க வேண்டும். 

முன்னுரை: உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று பறைசாற்றிய இயேசு, பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே என்று தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி, இறையரசுப் பணிக்குச்  சான்று பகர்ந்து, தன் மீட்புப் பணி தரணியில், திருத்தூதர்கள் வழி தொடர்ந்து நீடிக்கவும், அருட்சாதனங்களின் வழி அருளை அளவில்லாமல் ஆன்மாக்களின் மீது பொழியவும், விண்ணகம் நோக்கிய பயணத்தில் இருக்கும் நமக்கு, வழிப்பயணக் கொடையாகவும், இன்சுவை உணவாகவும், தன் உடலையும், இரத்தத்தையும் தானமாய் கொடுத்து, நற்கருணை என்ற திருவருட்சாதனத்தை ஏற்படுத்தி, நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள் என்று அன்புக்கட்டளை வழங்கிய நன்னாள் இன்று. ஆம் இன்று திருப்பாடுகளின் பெரிய வியாழன். இயேசுவின் பணிவு அவரது அன்பு பணிக்கு பெருமை சேர்த்ததுபோல, வாழ்வுக்கு அவரது கல்வாரி மதிப்பீடுகள் அடித்தளமாய் அமைய இன்றைய வழிபாட்டிலே மன்றாடுவோம்.

இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளை கொண்டுள்ளது.
  1. வார்த்தை வழிபாடு
  2. பாதம் கழுவும் சடங்கு
  3. நற்கருணை வழிபாடு 
  4. நற்கருணை இடமாற்றப் பவனி
எனவே இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பொருளுணர்ந்து பக்தியோடு பங்கெடுப்போம். 
(உன்னதங்களிலே கீதம் பாடும் போது அனைத்து மணிகளும் ஒலிக்கப்பட வேண்டும். இதுமுதல் பாஸ்கா திருவிழிப்பு வரை மணிகள் ஒலிக்கலாகாது.)

1. இறைவார்த்தை வழிபாடு
முதல் வாசகம் (விப 12:  1-8;  11-14):  பாஸ்கா என்பது கடந்து செல்லுதல் எனப் பொருள்படும். இறைவன் தான் தேர்ந்தெடுத்த மக்களை வாழ்விலிருந்து மீட்டு, செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றார். அதுபோலவே பாவம் நிறைந்த இந்த உலக நிலையைக் கடந்து, பரிசுத்த விண்ணக வாழ்வை அடைய முயற்சிப்போம் என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்கு செவி கொடுப்போம். 

இரண்டாம் வாசகம் ( 1 கொரி 11:  23-26): நம் அனைவர் மேலும் கொண்ட அன்பினால் தன்னையே தியாகமாக கொடுத்த கிறிஸ்துவின் மரணத்தை அறிக்கையிடுவதுதான் திருப்பலி. எனவே நமது வாழ்வு ஆதரவற்றோருக்கு, துன்பப்படுவோருக்கு, துயருறுவோருக்கு அன்பை கொடுப்பதாக, ஆதரவு தருவதாக இருக்கிறதா? என சிந்திக்க அழைக்கும் வாசகத்திற்கு செவி கொடுப்போம். 

நற்செய்தி வாசகம் (யோவா 13: 1-15): பாதங்கள் கழுவுதல் என்பது அடிமைகள் அல்லது பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலை. ஆனால் இறை அரசை கட்டியயழுப்ப வந்த இறைமகன் இயேசு, தனது திருத்தூதர்களின் பாதங்களை கழுவி, தான் ஒரு பணியாளனாக செயல்படுகிறேன், எனவே நீங்களும் பணியாளர்களாக செயல்படுங்கள் என அறிவுறுத்தும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்போம். 

2. பாதம் கழுவும் சடங்கு
முன்னுரை: யூத வழக்கத்தில் வெளியே சென்ற ஒருவர் மீண்டும் வீட்டிற்குள் நுழையும்போது தன் பாதங்களைக் கழுவுவது வழக்கம். அதில் இயேசு முற்றிலும் மாறுபட்டு பணிவிடை பெற அன்று, பணிவிடை புரியவே வந்தேன் என்றும்,  பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் பணியாளனாய் இருக்கட்டும் என்றும் நீங்களும் இவ்வாறே செய்யுங்கள் என்றும் சொல்லி,  தம் அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவிய பணிவான பணியை, நிகழ்வை, இப்போது குருவானவர் இங்கு அமர்ந்திருக்கும் பன்னிருவரின் பாதங்களை கழுவி நமக்கு பாடமாக்குவார். இந்த நிகழ்வு வெறுமனே ஒரு சடங்காக மட்டுமல்ல மாறாக, நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்  தாழ்ச்சியுள்ள  வாழ்வு வாழ பக்தி நிறைந்த உணர்வோடு இதில் பங்கெடுப்போம். (விசுவாச அறிக்கை இல்லை).

இறைமக்களின் வேண்டல்கள் (பாதம் கழுவும் சடங்கு முடிந்தவுடன்)
1. வார்த்தையான இறைவனே! எம் திருச்சபையின் ஊழியர்கள் உம் வார்த்தையின் வழியில் பயணித்து இறைமக்களை அன்பின் வழியிலும், ஒளியிலும் வழிநடத்தவும், உமது வழியைப் பின்பற்றி எம் திருச்சபை அகிலமெங்கும் தழைத்தோங்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
2. அன்பின் இறைவா! எம் தலைவர்கள் தங்களின் தலைமைப் பொறுப்பினையும், கடமையினையும் உணரவும், மக்களை செம்மையாகவும் நீதி, நியாயம், மனிதமாண்பு, ஆகிய நல்ல நெறிகளுடன் வழிநடத்தவும், தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
3. ஒளியாம் இறைவா! உம்மையும், உம் வார்த்தைகளையும் பின்பற்றும் நாங்கள் உமது அன்பையும் பகிர்வையும் தியாகத்தையும் எங்கள் வாழ்வில் பிரதிபலிக்கவும் எங்கள் அன்றாட வாழ்க்கையில் உம்மை மையமாக வைத்து உம் அன்பின் மக்களாக வாழத் தேவையான அருளைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நித்திய குருவான இறைவா! உம் அடிச்சுவடுகளைப்  பின் தொடர்ந்து உமது பணியைச் செய்ய தங்களையே அர்ப்பணித்திருக்கின்ற குருக்களுக்காக வேண்டுகிறோம். நீர் குருத்துவத்தை ஏற்படுத்தியிருக்கின்ற இந்நாளில் அவர்கள், தங்களின் பணிவாழ்வில் சந்திக்கும் அனைத்துத் துன்பங்களையும், பொறுமையுடனும் இன்முகத்துடனும் ஏற்றுகொள்ளத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. நற்கருணை வழிபாடு

காணிக்கை பாடல்: அன்பும் நட்பும் எங்குள்ளதோ... 
(காணிக்கை மன்றாட்டுடன் திருப்பலி தொடரும், 
நன்றி மன்றாட்டு முடிந்த பிறகு நற்கருணை இடமாற்றப் பவனி)

4. நற்கருணை இடமாற்றப் பவனி
முன்னுரை: இயேசு பாடுகள் படுமுன் கெத்ஸமனி தோட்டத்தில், தனிமையாக தன் துயரத்தை தந்தையாம் இறைவனிடம் வெளிப்படுத்தியதை நினைவு கூறுகிறோம். இப்போது நற்கருணை நாதர், தலைமைப் பீடத்திலிருந்து தனியாக அலங்கரிக்கப்பட்ட இடத்திற்குப் பவனியாக எடுத்துச் செல்லப்படுவார். அவ்வாறு எடுத்துச் செல்லும்போது அனைவரும் முழந்தாள் பணிந்து நமது வணக்கத்தை செலுத்துவோம். தனிமையில் தனது துன்பநிலையை எண்ணி துயரப்படும் நம் இயேசுவோடு நாமும் விழித்திருந்து செபிப்போம்.

பாடல்: பாடுவாய் என் நாவே... இறுதியாக மாண்புயர் கீதம்..
(பின்பு சிலுவைகள் அனைத்தும் திரையிடப்பட வேண்டும்)

தேவனே என்னை பாருங்கள்


தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
Oh my Lord, pardon me 
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே

தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ
காய் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே


மான்களும் சொந்தம் தேடுமே
இம்மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே தந்த வெளியே
உன் பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ

செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது
சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
தேடி கொண்டாடிட நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
no peace of mind 

கேள் தருகிறேன் என்றதே நீர் அன்றோ
நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சந்நிதி
என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி
Oh Lord, please answer my prayer 

கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்

முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது....

திரைப்படம்: ஞான ஒளி
பாடல் ஆசிரியர்: கண்ணதாசன்
இசையமைப்பு: எம். எஸ். விஸ்வநாதன்
நடிகர் திலகம்:  சிவாஜி கணேசன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்