இணையதளம் வழியாக நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கருக்குத் திருத்தந்தை அறிவுரை

சன.24,2011. நவீன இணையதள வசதிகளைப் பயன்படுத்தி நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கர் பிறரை மதிப்பவர்களாகவும், ஆன்லைனில் புகழ்பெற வேண்டுமென்பதைத் தங்களது இறுதி இலக்காகக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் 45 வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென இத்திங்களன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.Blog, Facebook, YouTube போன்றவை வழியாக நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கர், பொறுப்பு, நேர்மை, முன்னெச்சரிக்கை, காலமறிந்து செயல்படல் ஆகிய கிறிஸ்தவப் பண்புகளைக் கையாள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் டிஜிட்டல் உலகத்தின் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறியுள்ள திருத்தந்தை, சமூகப் பன்வலை அமைப்புகள் உறவுகளையும் சமூகங்களையும் கட்டி எழுப்புவதற்கு நேர்த்தியான வழிகள், எனினும், உண்மையான நட்புகளின் இடத்தில் மாயத்தோற்றமான உறவுகள் வைக்கப்படுவதும், உண்மையான விவரங்களைவிட செயற்கையான பொது விவகாரங்களை உருவாக்குவதற்கு சோதிக்கப்படுவதும் குறித்து எச்சரித்துள்ளார்.புதிய தொடர்புச் சாதனங்கள் வழியாக நற்செய்தியை அறிவிப்பது என்பது, பல்வேறு ஊடகங்களில் மதம் சார்ந்தவைகளை வெளியிடுவது மட்டுமல்ல, ஒருவர் தனது சொந்த இணையப் பக்கத்தில் தனது கிறிஸ்தவப் பண்புகளுக்குச் சாட்சியாகவும் நற்செய்தியோடு முழுவதும் அவை ஒத்திணங்கிச் செல்வதாகவும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
நடைமுறையில் மெய்மை எனக் கொள்ளத்தக்க தொடர்பு, நம் வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் இடம் பெறும் நேரடியான மனிதத் தொடர்பாக இருக்க முடியாது மற்றும் அதன் இடத்தை அது எடுக்கவும் முடியாது என்றும் அவர் கூறினார்
"டிஜிட்டல் உலகில் உண்மை, அறிவிப்பு, வாழ்க்கையின் எதார்த்தம்", என்ற தலைப்பில் இந்த 45 வது உலக சமூகத் தொடர்பு நாள், வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எழுத்தாளர்க்குப் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதி, உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் திருத்தந்தையின் இச்செய்தி ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.


திருமுழுக்கு


திருமுழுக்கு மறையறிவு:

திருமுழுக்கு என்னும் திருவருள்சாதனம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக அமைகிறது. கத்தோலிக் திருமறையின் மற்ற அருள்சாதனங்களைப் பெற நுழைவாயிலாகவும் அமைகிறது. திருமுழுக்கின் வழியாக ஜென்மப்பாவம்,கர்ம பாவம் நீக்கப் பட்டு நாம் கடவுளுடைய பிள்ளைகள் ஆகிறோம். மேலும் தூய ஆவியில் நாம் புதுப்பிறப்படைந்து கடவுளின் உரிமைப்பேறாகும் பேற்றினைப் பெறுகிறோம். கத்தோலிக்கத் திருமறையின் அங்கத்தினர் ஆகிறோம்.
திருமுழுக்கின் வழியாக நாம் புதுப்பிறப்படைவதோடு நாம் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை மனிதர்முன் வெளிப்படையாக அறிக்கையிட கடமைப்பட்டவர்களாகிறோம். நாம் ‘கிறிஸ்தவனாக’ ‘கிறிஸ்தவளாக’ வாழ அழைக்கப்படுகிறோம்.

தண்ணீர்:  தண்ணீர் பொதுவாக நாம் வாழ்வின் இன்றியமையாத பொருளாக அமைகிறது. தண்ணீரானது அனேக வேளைகளில்; சுத்தப்படுத்தப் பயன்படுத்துகிறோம். திருமுழுக்கில் தண்ணீரானது முக்கிய இடம் பெறுகிறது. தண்ணீர் பாவங்களை கழுவி கிறிஸ்துவில் நாம் மறுபிறப்படைந்துள்ளதையும் கிறிஸ்துவில் புதுவாழ்வு பெற்று அவரது உயிர்பிலும் பங்கு பெறுவோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். உரோமையர் 6:4-5

ஆயத்த எண்ணை பூசுதல்: திருமுழுக்குப் பெறுவோர் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாற்ற வேண்டி இப் புனித தைலம் பூசப்படுகிறது. 

வாக்குறுதிகளும் விசுவாச பிரமாணமும்: சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டுவிடுவதாகவும் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதாகவும் பெற்றோரும் ஞானத் தாய் தந்தையரும் வாக்குறுதி கொடுக்கின்றனர்.

திருத்தைலம் பூசுதல்: திருமுழுக்குப் பெற்றவர் புதுப்பிறப்படைந்த கிறிஸ்துவில் பெற்ற புதுவாழ்வில் கடைசிவரை நிலைத்து நிற்க வேண்டி ‘கிறிஸ்மா’ தைலம் பூசப்படுகிறது.

வெண்ணிற ஆடை: புதுப்படைப்பாக மாறியதையயும் அம்மாசற்ற வாழ்வை உங்கள் உறவினரின் சொல்லாலும் முன்மாதிரியாலும் மாசுபடாமல் முடிவில்லா வாழ்வுக்கு கொண்டுபோய் கொண்டுபோய் சேர்க்க அருள் வேண்டப்படுகிறது.

எரியும் திரி: பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று திருமுழுக்குப் பெற்றவர் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. விசுவாசத்தில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

எப்பேத்தா (திறக்கப்படு): 
குரு : செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.

தங்கள் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெறவேண்டும் பெற்றோர்களிடம் திருச்சபை எதிர்பார்ப்பவை:
  1. திருமுழுக்கு அருள்சாதனத்தின் போது பெற்றோரும் ஞானத் தாய், தந்தையும் கொடுத்த வாக்குறுதிகளின் படி அவர்கள் விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க முயற்சி செய்யவேண்டும். 
  2. பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கு கத்தோலிக்க விசுவாசத்தை கற்றுக்கொடுக்க போதிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதும், பிள்ளைகளை கத்தோலிக்க பள்ளிகளில் சேரச் செய்யவும், போதிய மறைக்கல்வியை கற்றுக் கொடுப்பதும் அல்லது கற்றுக்கொடுக்க வழிசெய்வதும் முக்கிய கடமையாகும்.
  3. குடும்பமாக ஜெபிப்பதும், சிறு பக்தி முயற்சிகளை சொல்லிக் கொடுப்பதும் எல்லாவற்றிகும் மேலாக கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகளான அன்பு, மகிழ்சி, சமாதானம், மன்னித்தல், பொறுமை, தாழ்ச்சி, நம்பிக்கை, விசுவாசம் ஆகிய புண்ணியங்களை பெற்றோர் பின்பற்றுவதும் பிள்ளைகளை அவ்வாறு வளர்பதும் பெற்றோரின் கடமையாகும். 
  4. ஞானப் பெற்றோர்கள் நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக தேர்ந்தெடுப்பது பெற்றோரின் கடமை. ஞானப் பெற்றோர்களும் தங்களின் ஞான்ப பிள்ளைகளுக்கு சிறந்த முன் மாதிரியாய் இருப்பதும் ஞான காரியங்களில் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கிய கடமையாகும்.

திருமுழுக்குச் சடங்குமுறை


குரு : உங்கள் குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்கள்?
பெற் : ............................... என்ற பெயரிட விரும்புகிறோம்.

குரு : (பெயர்)க்காக நீங்கள் இறைவனின் திருச்சபையிடம் கேட்பது என்ன?
பெற் : திருமுழுக்கு (அல்லது ஞானஸ்தானம்)

குரு : உங்கள் குழந்தை(களு)க்கு திருமுழுக்குக் கேட்கிறீர்கள். உங்கள் குழந்தை(கள்) கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து, கிறிஸ்து நமக்கு கற்பித்தது போல், இறைவனுக்கும், தங்கள் அயலாருக்கும் அன்பு செய்து வாழ அவர்களை விசுவாசத்தில் வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு; இதை உணர்ந்திருக்கிறீர்களா?
பெற் : உணர்ந்திருக்கிறோம்.

குரு : ஞானத்தாய் தந்தையரே, இக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் உதவி புரிவீர்களா?

குரு : (பெயர் ...................) (அல்லது குழந்தைகளே) கிறிஸ்தவ சமூகம் உங்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கின்றது. இந்த சமூகத்தின் பெயரால் நான் உங்கள் மீது சிலுவை அடையாளம் வரைகிறேன். பின்னர் உங்கள் பெற்றோரும், ஞானத்தாய் தந்தையரும் மீட்பராம் கிறிஸ்துவின் அடையாளத்தை உங்கள் மீது வரைவார்கள்.

(குரு மௌனமாக குழந்தையின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைய, தொடர்ந்து பெற்றோரும், ஞானப் பெற்றோரும் அவ்வாறே செய்கின்றனர்)

விசுவாசிகளின் மன்றாட்டு

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கின் அருளைப் பெறஇருக்கும் இக்குழந்தை(களு)க்காகவும், இவர்களுடைய பெற்றோர், ஞானத்தாய் தந்தையருக்காகவும் திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவருக்காகவும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை இறைஞ்சுவோமாக!

குரு : உம்முடைய இறப்பு, உயிர்ப்பு என்னும் ஒளிவீசும் தெய்வீக மறைபொருளால் திருமுழுக்கின் வழியாக இக்குழந்தைகள் மறுபிறப்பு அடைந்து திருச்சபையில் சேர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு : திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் வழியாக இவர்கள் விசுவாசமுள்ள சீடர்களாகவும், உமது நற்செய்தியின் சாட்சிகளாகவும், விளங்கச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : தூய ஆவியின் வழியாக இவர்களை விண்ணரசின் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இக் குழந்தைகளுக்கு விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒரு : இவர்களுடைய குடும்பங்களை உமது அன்பில் என்றும் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : எங்கள் அனைவரிடமும் திருமுழுக்கின் அருளைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
புனிதர்களை நோக்கி மன்றாட்டு

குரு : 1. இறைவனின் அன்னையாம் புனித மரியாயே, 
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
2. புனித சூசையப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
3. புனித ஸ்நானக அருளப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
4. புனித இராயப்பரே, சின்னப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 
5. புனித தோமையாரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
6. புனித சவேரியாரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

(கடைசியாக ) இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே.
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ங்கள்

பேய் ஓட்டும் செபம்

குரு : நித்தியரான எல்லாம் வல்ல இறைவா, தீமையின் ஆவியான சாத்தானின் ஆதிக்கத்தை எங்களிடமிருந்து அகற்றவும், இருளிலிருந்து மனிதனை விடுவித்து, உமது ஒளியின் வியத்தகு அரசில் கொண்டுவந்து சேர்க்கவும், உம் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினீர். இக்குழந்தைகளை சென்மப் பாவத்திலிருந்து மீட்டு உமது மாட்சியின் ஆலயமாக்கி, இவர்களில் தூய ஆவி குடிகொள்ளச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.

ஆயத்த எண்ணெய் பூசுதல்

குரு : உங்கள் மீது கிறிஸ்து இரட்சகரின் அடையாளம் வரைந்து மீட்பின் எண்ணெய் பூசுகின்றோம். நம் ஆண்டவராகிய அதே கிறிஸ்துவின் ஆற்றல் உங்களைத் திடப்படுத்துவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

திருமுழுக்கு விழா முன்னுரை

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர், இக்குழந்தைகளுக்கு நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் புதுவாழ்வு அளித்தருளுமாறு செபிப்போமாக.

குரு : அன்பார்ந்த பெற்றோரே, ஞானத்தாய் தந்தையரே, ஞானஸ்நானம் எனும் திருவருள்சாதனம் வழியாக நீங்கள் ஒப்புக்கொடுத்த இக்குழந்தைகள் அன்புள்ள இறைவனிடமிருந்து நீரினாலும், ஆவியினாலும் புதுவாழ்வு பெறப்போகின்றார்கள். இவர்களில் இந்த இறைவாழ்வு பாவநோயிலிருந்து பாதுகாக்கப் பெற்று நாளுக்கு நாள் வளர்ச்சியடையுமாறு இவர்களை நீங்கள் விசுவாசத்தில் வளர்க்க முயல வேண்டும்.

ஆகவே. உங்கள் விசுவாசத்தினால் தூண்டப்பெற்று, இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் உங்கள் ஞானஸ்நானத்தை நினைவில்கொண்டு பாவத்தை விட்டு விடுங்கள்; இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிடுங்கள். அதுவே திருச்சபையின் விசுவாசம்; அதிலேதான் குழந்தைகள் ஞானஸ்நானம் பெறுகின்றனர்.
குரு : இறைமக்களுக்குரிய சுதந்தரத்துடன் வாழ, நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா?
எல் : விட்டுவிடுகிறேன்

குரு : பாவம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலிருக்க நீங்கள் பாவத்தின் மாயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகிறீர்களா?
எல் : விட்டுவிடுகிறேன்

குரு : பாவத்திற்குக் காரணனும், தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?
எல் : விட்டுவிடுகிறேன்

விசுவாசப் பிரமாணம்

குரு : வானமும், வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறோம்

குரு : அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் விற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறேன்

குரு : பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் சமூக உறவையும், பாவமன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும், நித்திய வாழ்வையும் விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறேன்

குரு : இதுவே நமது விசுவாசம். இதுவே திருச்சபையின் விசுவாசம். இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதில் பெருமை கொள்கிறோம்.
எல் : ஆமென்.

திருமுழுக்கு அளித்தல்

குரு : ஆகவே உங்களோடு சேர்ந்து இப்பொழுது நாமெல்லாரும் அறிக்கையிட்ட திருச்சபையின்; விசுவாசத்தில் (பெயர் அல்லது இவர்கள்) திருமுழுக்குப் பெறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?
பெற். ஞானப்.: விரும்புகிறேன்

குரு : (மும்முறை தண்ணீர் ஊற்றி) பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்.

திருத்தைலம் பூசுதல்

குரு : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் உங்களைப் பாவத்திலிருந்து விடுவித்து, நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் உங்களுக்கு மறுபிறப்பு அளித்துள்ளார். இப்பொழுது அதே கிறிஸ்து உங்கள் மீது மீட்பின் தைலம் பூசுகிறார். எனவே, நீங்கள் இறைமக்களோடு இணைக்கப்பெற்று, குருவும், ஆசிரியரும் அரசருமாகிய கிறிஸ்துவின் உறுப்புக்களாய் நிலைத்திருந்தது, நித்திய வாழ்வு பெறுவீர்களாக.

(பிறகு குரு கிறிஸ்மா (ஊhசளைஅய) எனும் திருத்தலத்தை திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவரின் உச்சந்தலையில் மௌனமாகப் பூசுகிறார்.)

வெண்ணிற ஆடை அணிவித்தல்

குரு : (திருமுழுக்கு வெண்ணிற ஆடையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து) நீங்கள் புதுப்படையாக மாறி, கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள். இந்த வெண்ணிற ஆடை உங்களது மேன்மையின் அடையாளமாய் இருப்பதாக. உங்கள் உறவினரின் சொல்லாலும், முன்மாதிரிகையாலும் நீங்கள் உதவிபெற்று, இதை மாசுபடாமல் நித்திய வாழ்வுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பீர்களாக.
எல் : ஆமென்.

எரியும் திரி கொடுத்தல்

குரு : (பாஸ்கா திரியை கையில் தொட்டவாறு) கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
(குழந்தை(களி)ன் தந்தை(யர்) பாஸ்கா திரியிலிருந்து (தத்) தம் குழந்தையின் சார்பில் திரியைப் பற்ற வைக்கின்றனர்)

குரு : பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று இக்குழந்தைகள் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. விசுவாசத்தில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

எப்பேத்தா (திறக்கப்படு)

குரு : செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.
எல் : ஆமென்.

(திருப்பலியில் பெற்றோர், ஞானப்பெற்றோர் காணிக்கைப் பொருள்கள் எடுத்துச்சென்று குருவிடம் அளிக்கலாம்)

கிறிஸ்து கற்பித்த செபம்

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கினால் மறுபிறப்பு அடைந்து இறைவனின் மக்களாகவே இருக்கும் இக்குழந்தைகள் உறுதிபூசுதலால் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெறுவார்கள். ஆண்டவரின் பீடத்தை அணுகி வந்து, அவரது திருப்பலி விருந்தில் பங்குகொள்வார்கள். திருச்சபையில் இறைவனைத் தந்தையென அழைப்பார்கள். நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உணர்வுடன், ஆண்டவர் நமக்குக் கற்பித்தது போல் இக்குழந்தைகளின் பெயரால் இப்போது ஒன்றாய்ச் சேர்ந்து செபிப்போம்.
எல் : பரலோகத்தில் இருக்கிற ....................

ஆசியுரை

குரு : எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் கன்னிமரியிடமிருந்து பிறந்த தம் திருமகன் வழியாக குழந்தைகள் மீது ஒளிரும் நித்திய வாழ்வின் நம்பிக்கையால் கிறிஸ்தவத் தாய்மார்களை மகிழ்விக்கின்றார். அவரே, இக்குழந்தைகளின் தாய்மார்களை ஆசீர்வதிப்பாராக. தாங்கள் பெற்றெடுத்த மக்களுக்காக இப்பொழுது நன்றிசெலுத்தும் இத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் எக்காலமும் நன்றி செலுத்துவார்களாக.
எல் : ஆமென்.

குரு : மண்ணக வாழ்வையும், விண்ணக வாழ்வையும் வழங்கும் எல்லாம் எல்ல இறைவனாகிய ஆண்டவர் இக்குழந்தைகளின் தந்தையரை ஆசீர்வதிப்பாராக. இதனால் இவர்கள் தத்தம் மனைவியருடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தம் மக்கள் முன் சொல்லாலும், முன்மாதிரியாலும் விசுவாசத்தின் முதற்சாட்சிகளாய் விளங்குவார்களாக. 
எல் : ஆமென்.

குரு : நாம் நித்திய வாழ்வுபெற நீரினாலும், தூய ஆவியினாலும் நமக்கு மறுபிறப்பளித்த எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் தம் விசுவாசிகளாகிய இந்த ஞானப் பெற்றோர்க்கு (இவர்களுக்கு) நிறை ஆசீர் அளிப்பாராக. இதனால், இறைமக்களிடையே இவர்கள் என்றும் எங்கும் உயிராற்றல்மிக்க உறுப்பினர்களாய்த் திகழ்வார்களாக. இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தமது சமாதானத்தை வழங்குவாராக. 
எல் : ஆமென்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.