திருக்குடும்ப திருவிழா

அன்பார்ந்த இறைமக்களே,
கடவுள், பராமரிப்புக்காக பரம்பரையை தத்து கொடுத்த குடும்பம் இறை நம்பிக்கையில் தன்னையே ஒப்பு கொடுத்த குடும்பம், இந்த உலகமே போற்றும் உன்னத குடும்பமாம் திருக்குடும்ப திருவிழாவை சிறப்பிக்க ஒன்று கூடி வந்துள்ளோம்.  

“குடும்பம் ஒரு கோயில்”, “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்பார்கள்.  இப்படிப்பட்ட குடும்பம்தான் திருக்குடும்பம்.  தெய்வபயத்தை திடமாக கொண்டு ஆண்டவரின் அடிமை என்று அன்னையும், தேவவார்த்தைக்கு கீழ்படிந்து மரியாளை ஏற்று கொண்ட யோசப்பு போல, தெய்வபயம் நிறைந்த குடும்பமாகவும், ஆலயம் சென்று இறைவழிபாட்டில் பங்கேற்று ஆன்மிக வாழ்கையில் அக்கறை கொண்டு வாழவும் இறைவார்த்தையை போதிக்க யேசுவை அர்பணித்தது போல அர்ப்பண வாழ்வும், நீதிமானாகிய சூசை போல நேர்மையாளராகவும், மரியாளை போன்று ஓடோடி சென்று உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட குடும்பங்களாக நமது குடும்பங்கள் விளங்க செபிப்போம்.

திருச்சபையின் அடித்தளமும், ஆணிவேரும் குடும்பம் என்பதை உணர்ந்து நமது பங்கிலே உள்ள குடும்பங்களில் மேலும் ஒற்றுமை நேர்மை உதவி செய்யும் உள்ளம் கொண்டு வாழ பக்தியொடு திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை    சீராக் 3:2-7 
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பது ஆன்றோர் வாக்கு, பிள்ளைகளுக்கு பெற்றோர் மீதுள்ள கடமைகளையும், அன்னையால் செல்வமும், தந்தையால் மகிழ்ச்சியும் பெற்றோரை மதிக்கும்போது கிடைக்கும் எனக் கூறும் முதல் வாசகத்திற்கு செவி மடுப்போம்.   

இரண்டாம் வாசக முன்னுரை    கொலே 3:12-21  
“பெற்றோரின் நடத்தை பிள்ளைகளின் பாடபுத்தகம்” என்பார்கள்.  குடும்ப வாழ்விலே அன்பும், மன்னிப்பும் தலைசிறந்தது எனவும், குடும்ப வாழ்விலே கணவன் மனைவி எவ்வாறாக வாழ வேண்டும் என கூறும் II-ம் வாசகத்திற்கு செவி மடுப்போம்.   

விசுவாசிகளின் மன்றாட்டு 
1) எமது தாய் திருச்சபைக்காக மன்றாடுகின்றோம். வழிநடத்துகின்ற திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் ஆகியோரை நிறைவாக ஆசிர்வதியும்.  குடும்பம் திருச்சபையின் அடித்தளமும், ஆணி வேரும் என்பதை உணர்ந்து இறைவனுக்கு ஏற்ற மக்களை உருவாக்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

2)  நாட்டு தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம்.  தன் பிள்ளை, தன் மனைவி, தன்னுடைய ஊர் என வாழாமல் அனைவரும் ஓர் குடும்பம் என்பதை உணர்ந்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.   

3) வழிநடத்தும் தெய்வமே, இன்றைய குடும்பங்களை சிதைத்து கொண்டிருக்கும் குழப்பம், சந்தேகம், அவமானம் மற்றும் வறுமை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

4) இறைவா! எமது பங்கிலே உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசிர்வதியும், இவர்கள் ஆழமான விசுவாசம் பெறவும், தங்களது பிள்ளைகளை முமூக பணிக்கும், இறை பணிக்கும் அர்ப்பணித்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Prepared by 
  1. Jayan G.
  2. Johnson S.
  3. Sundar Raj S.
  4. Victor Lawrence
  5. Arun Savariraj X.
Spirituality Course, St. John's Propaedeutic Seminary, Cuddalore