திருப்பலி செபங்கள்

முன்னுரை:
நம் மீட்பர் தமது இறுதி இராவுணவின்போது, தம் உடலும் இரத்தமும் உள்ளடங்கிய நற்கருணைப் பலியை ஏற்படுத்தினார். இப் பலியினால் தாம் மீண்டும் வருமளவும் தமது சிலுவைப்பலியை நூற்றாண்டுகளுக்கும் நிலைத்திருக்கச் செய்யவும், அதற்காக தம் அன்பு மணமகளாம் திருச்சபையிடம் தமது சாவு, உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுச் சின்னத்தை ஒப்படைக்கவும் இவ்வாறு செய்தார்.
திருப்பலியானது
  1. புகழ்ச்சிப் பலியாகவும்
  2. நன்றியறிதல் பலியாகவும்
  3. பாவப் பரிகாரப் பலியாகவும்
அமைந்துள்ளது.
திருப்பலியில் இரு பெரும் பகுதிகள் அடங்கியுள்ளது. இறைவாக்கு வழிபாடு மற்றும் நற்கருணை வழிபாடு. இவ்விரு பிரிவுகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைந்துள்ளன. ஏனெனில், திருப்பலியில் இறைவாக்காலும் கிறிஸ்துவின் உடலாலும் தயாராகும் திருப்பந்தியிலிருந்து விசுவாசிகள் போதனையும் ஊட்டமும் பெறுகின்றார்கள்.
அமைப்பு:
1. இறைவாக்கு வழிபாடு:
தொடக்கச் சடங்குகள்:
  • வருகைப் பவனி
  • வாழ்த்து, தூண்டுதலுரை
  • மனஸ்தாப முயற்சி
  • வானவர் கீதம்
  • சபை மன்றாட்டு
இறைவாக்கு அறிவிப்பு:
- வாசகங்கள்
- பதிலுரைப் பாடல்
- நற்செய்தி அறிவுப்பு
- மறையுரை, மௌன தியானம்
- விசுவாச அறிக்கை
- விசுவாசிகள் மன்றாட்டு
2. நற்கருணை வழிபாடு
நற்கருணை வழிபாடு:
  • காணிக்கைப் பவனி
  • காணிக்கை மன்றாட்டு
  • நற்கருணை செபம்
  • நற்கருணை வசீகரம் செய்தல்
  • புகழ்பாடல்
  • சமாதான அழைப்பு
  • திருவிருந்து
  • நன்றி மன்றாட்டு
  • வாழ்த்தும் ஆசீரும்.
திருப்பலி கொண்டாட்டம்
தொடக்கச் சடங்குகள்
(குரு பீடத்திற்கு வந்து வணக்கம் செய்யும் போது, அனைவரும் எழுந்து நின்று வருகைப் பாடலைப் பாடுவோம்)
வருகைப் பாடல்:
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே !
1.
ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் -2
பரிவுள்ள இறைவன் திருவுளம் ஏற்போம் - அன்பினில்
2.
பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்
பிறனையும் நம்மைப் போல் நினைத்திடவேண்டும் - அன்பினில்

குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
மக்கள்: ஆமென்.
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.
மன்னிப்பு வழிபாடு:
(ஞாயிற்றுக் கிழமைகளில்)
(கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவூட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் குரு தண்ணீரை மந்திரித்துத் தெளிக்கிறார்.)
குரு : அன்புமிக்க சகோதரரே, நம் திருமுழுக்கின் நினைவாக நம்மீது தெளிக்கப்படும் இத் தண்ணீரை ஆசீர்வதித்தருளுமாறு நம் இறைவனாகிய ஆண்டவரை கெஞ்சி மன்றாடுவோமாக. அவரே நமக்கு உதவியளித்து, நாம் அன்று பெற்றுக்கொண்ட தூய ஆவியாரிடம் என்றும் உண்மையுடன் இருக்க நமக்கு அருள்வாராக.
(சற்று நேர மௌனத்துக்குப் பின்) என்றும் வாழும் எல்லாம் வல்ல இறiவா, உயிரின் ஊற்றும் தூய்மைக்கு தொடக்கமுமான தண்ணீரின் வழியாக மக்கள் புனிதமடைந்து, முடிவில்லா வாழ்வின் கொடையைப் பெற வேண்டுமென்று திருவுளமானீர். உமது நாளாகிய இன்று நாங்கள் இத்தண்ணீரினால் உமது அருட்காவலைப் பெற விரும்புகின்றோம். எனவே ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். இத்தண்ணீரை ஆசீர்வதித்தருளும். உயிரளிக்கும் உமது அருளின் ஊற்றினை எம்முள் புதுப்பித்து, இத்தண்ணீரினால் எங்கள் உடலையும் உள்ளத்தையும் தீங்கனைத்திலிருந்து காத்தருள்வீராக. இவ்வாறு, நாங்கள் தூய உள்ளத்துடன் உம்மை அணுகி வரவும், உமது மீட்பை பெற்றுக் கொள்ளவும் தகுதி பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆமென்.
(தீருநீரில் உப்பைக் கலக்க விரும்பினால்)
எல்லாம் வல்ல இறைவா, தண்ணீர் வளம் பெற அதில் உப்பிட வேண்டுமென்று இறைவாக்கினர் எலிசேயு வழியாகக் கற்பித்தீரே; இந்த உப்பை பரிவன்புடன் ஆசீர்வதித்தருள உம்மைத் தாழ்மையாய் வேண்டுகிறோம். ஆண்டவரே உப்புக் கலந்த இத்தண்ணீர் தெளிக்கப்படும் இடமெல்லாம் எதிரியின் தாக்குதல் அனைத்தும் தோல்வியுறச் செய்வீராக. மேலும் உம்முடைய தூய ஆவியார் எமுந்தருளி எங்களை இடையராது பாதுகாக்க வேண்டுமென்றும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆமென்.
(குரு திருநீரைத் தெளிக்கும்போது கீழ்கண்ட பாடலைப் பாடுவோம்.)
ஆண்டவரே, ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்
நானும் தூய்மையாவேன்
நீரே என்னைக் கழுவ நானும்
உறைபனிதனிலும் வெண்மையாவேன்
இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப
என்மேல் இரக்கம் கொள்வீர்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய்ப் பெருக
ஆதியில் இருந்தது போல
இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.

சாதாரண நாள்களில்:

குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.
( சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.
குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!
மக்கள்: ஆமென்.
குரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக்கள்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
குரு : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
மக்கள்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
குரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக்கள்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அல்லது
குரு : சகோதரரே,திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
(சிறிது மெனத்திற்கு பிறகு)
உள்ளம் நொறுங்கி வருந்துவோரைக் குணமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக்கள்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
குரு : பாவிகளைத் தேடி மீட்க வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
மக்கள்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
குரு : தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து எங்களுக்காக பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக்கள்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.



வானவர் கீதம்:
(திருநாட்களில்)
உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.
ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.


(பாடல் திருப்பலியில்)



உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.
சபை மன்றாட்டு :
குரு :மன்றாடுவோமாக.
ஆண்டவரே, மகிழ்வோடு உம்மைத் தேடி வந்துள்ள எங்களுக்கு உம் திருமுகத்தைக் காட்டியருளும். எங்கள் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் வளரச் செய்தருளும். நீர் வாக்களிப்பதை நாங்கள் பெற்றுக் கொள்ளுமாறு, நீர் கட்டளையிடுவதை விரும்பி நிறைவேற்றுவோமாக. உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆமென்.

அருள்வாக்கு வழிபாடு
முதல் வாசகம் ( அனைவரும் அமைதியோடு அமர்ந்து பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினைக் கேட்போம். )
(ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு 3ஆம் சுற்று. ஜனவரி 31, 2010)
இறைவாக்கினர் எரேமியாஸ் எழுதிய திரு நூலிலிருந்து வாசகம்: அதிகாரம் 1 இறைவார்த்தைகள் 4-5, மற்றும் 17-19
எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:"தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்". " நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" என்கிறார் ஆண்டவர்.
வாசகர் : இது ஆண்டவரின் அருள் வாக்கு!
மக்கள்: இறைவா உமக்கு நன்றி!
பதிலுரைப் பாடல் :
(பாடகரும் மக்களுமாக மாறி மாறிப் பாடவும்)
பல்லவி:
ஆண்டவருடைய திருவருளால்
அவனியெங்கும் நிறைந்துள்ளது!
அவரை இறையாய்க் கொள்ளும் மக்கள்
அவர் பொருளாய்த் தேர்ந்தோர் பேறுபெற்றோர்,
தமக்கஞ்சிடுவோரைப் பார்க்கிறார் ஆண்டவர்
தம் அருளை நம்பினோரைக் கண்நோக்குகிறார் (ஆண்)
நம் ஆன்மா காத்திருப்ப தவர்க்காக
நமக்குதவி கேடயமும் அவரே!
மகிழ்கின்ற தவரில் நமது உள்ளம்,
வைக்கிறோம் திருப்பெயரில் நம்பிக்கை (ஆண்)

இரண்டாம் வாசகம்
(ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு 3ஆம் சுற்று. ஜனவரி 31, 2010)
அப்போஸ்தலரான புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் அதிகாரம் 13 இறைவார்த்தைகள் 4 முதல் 13 வரை;
அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
இது ஆண்டவரின் அருள் வாக்கு!
மக்கள்: இறைவா உமக்கு நன்றி!
அல்லேலூயாப் பாடல் ( எழுந்து நின்று பாடவும் )
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

"ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். "
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நற்செய்தி திருவுரை:
( இறைவன் தம் திருமகன் வழியாகப் பேசுகிறார்.)
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.
குரு : புனித லூக்கா எழுதிய பரிசுத்த நற்செய்தியிலிருந்து வாசகம்.
மக்கள்: ஆண்டவரே உமக்கு மகிமை.
லூக்கா 4:21-30 (ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு ஜனவரி 31, 2010)
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், "மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்" என்னும் பழமொழியைச் சொல்லி, "கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்" எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெணண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது" என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வ10ரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
குரு : இது கிறிஸ்துவின் நற்செய்தி !
மக்கள்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்!
( மறைவுரை முடிந்ததும், மெனமாகச் சற்று நேரம் தியானிக்கவும்.)
விசுவாச அறிக்கை (ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும்):
ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்,) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதணையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென்.
விசுவாச அறிக்கை (பாடல் திருப்பலியில்) :
வானமும் பூமியும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார்
தந்தை சுதன் தூய ஆவியுமாய் தன்னில் உறவுடன் வாழ்கின்றார்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருமகன் மரியிடம் மனுவானார்.
மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார்.
பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் கல்லறை ஒன்றில் அடக்கப்படடார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் மரணத்தின் மீதே வெற்றி கொண்டார்.
பரலோகம் வாழும் தந்தையிடம் அரியணை கொண்டு இருக்கின்றார்.
உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.
பரிசுத்த ஆவியை நம்புகிறோம் பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்.
திருச்சபை உரைப்பதை நம்புகிறோம் புனிதர்கள் உறவை நம்புகிறோம்
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் - ஆமென்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
குரு: அன்பு மிக்க சகோதர சகோதிரிகளே! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய நம் ஆண்டவரிடம், இப்போது நம் தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமன்றி, நம் தாய் திருச்சபைக்காகவும், பாரத திருநாட்டிற்காகவும், உலக சமாதானத்திற்காகவும், நமது வேண்டுதல்களை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.
எங்கள் அன்புத்தந்தையே இறைவா! எங்கள் பரிசுத்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும் நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றி, சமாதானத்தின் தூதுவர்களாகவும், அன்பின் வழிகாட்டிகளாகவும் நீதியின் கருவிகளாகவும் வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கள் பாரத நாட்டை ஆளும் தலைவர்கள், சுய நலன்பாராது, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, வேலை வாய்ப்புள்ள சிறந்த செயல்திட்டங்களை பயனுள்ளவகையில் நிறைவேற்றவும், மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், பண்பாட்டில் மென்மேலும் வளரவும் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைத்தையும் அமைத்தாளும் இறைவா! இறைப்பணிக்காக நீர் தேர்ந்து கொண்ட மறைப்பணியாளர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியைத் திறம்பட நிறைவேற்றவும், உமக்கு உண்மையுள்ள ஊழியராய் விழங்கவும், தங்கள் இறைப்பணியில் இறுதிவரை நிலைத்திருந்து தங்கள் பணியாலும் புனித வாழ்க்கையாலும், திருச்சபைக்கு என்றும் நற்கனிகளைக் கொடுக்கின்ற அருள்வரத்தைத் தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கள் அன்புத்தந்தையே! ஒரே திருமுழுக்கினால் உமக்கு சொந்தமான நாங்கள், முழுமையான விசுவாசத்தால் இணைக்கப்பெற்று, ஒரே குடும்பமாக உமது அழைப்பிற்கேற்ப வாழவும், உண்மைக்குச் சான்று பகர்ந்து வாழவும், விசுவசிப்போர் அனைவரிடமும் ஒற்றுமையும,; அமைதி உணர்வும் உருவாக, உறுதியுடன் உழைக்கவும,; உமது ஆவியின் அருளைப் பொழியவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
|உங்களுக்கு அமைதி உரித்தாகுக| என்று மொழிந்த எங்கள் அன்புத்தந்தையே! பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் உலகில் அமைதியற்ற நிலையைக் காண்கின்றோம். இயேசுவே! இந்நிலை மாறி நாடுகளை ஆளும் தலைவர்களின் அறிவுத்திறனாலும், ஆக்கச்செயல்களாலும். மக்களின் ஒத்துழைப்பாலும், உலகில் நீடித்த அமைதியும், ஒருமைப்பாடும், வளமான வாழ்வும் பெற அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்:  ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வளமான வாழ்வைத் தருகின்ற இறைவா! இதுநாள் வரையில் நீர் எங்களுக்குச் செய்துவருகின்ற சகல நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூர்கின்றோம். எங்களையும், எங்கள் பெற்றோர்கள், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும், மென்மேலும் ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்றும், படிக்கின்ற எம் பிள்ளைகள் கருத்தாய் படிக்கவும் அவர்களுக்கு போதிய அறிவையும் சிறந்த ஞானத்தையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உண்மையின் இறைவா! எங்கள் தொழில் முயற்சிகளை ஆசீர்வதித்து எங்கள் உழைப்பிற்கேற்ற நற்பலனை தந்து, எங்களுக்குப் போதுமான மட்டும் மழை தந்து எங்கள் வாழ்வு வளம் பெறச்செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இரக்கத்தின் வடிவே இறைவா! எங்கள் குடும்பங்களில் மரித்தவர்களுக்கும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்களுக்கும், யாரும் நினையாத, மறந்துபோன ஆத்துமாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்....

குரு: எங்கள் புகலிடமும் பலமுமாகிய இறைவா! எங்களுடைய பக்தியுணர்வைத் தூண்டி எழுப்புகின்றவர் நீரே ! உம்முடைய அன்பு மக்களின் உருக்கமான மன்றாடுக்களுக்கு தயவுடன் செவிமடுத்து, அவற்றை விரைவாகப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் - ஆமென்.

நற்கருணை வழிபாடு
காணிக்கைப் பொருட்களைத் தயாரித்தல்
மக்கள் காணிக்கைப் பொருட்களைச் சேகரிக்கும் போதும், பீடத்துக்கு எடுத்துச் செல்லும் போதும் காணிக்கைப் பாடலை பாடுகின்றனர்.

அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பீர் ஆண்டவரே - 2
1.
பாவி யென்றெம்மைப் பாராமல்
பாவத்தின் தீர்வையை அடையாமல் -2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய் -அடியோர்
2.
மேலோரு வாழ்வு உண்டு என்று - எம்
மேல் எழும் துன்பத்தை மறக்கின்றோம் -2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய் மாற்றிடுவாய் -அடியோர்

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.
(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)
(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.
(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)
(கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)

குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக்கள்: ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
காணிக்கை மன்றாட்டு:
குரு: எங்கள் இரக்கம் நிறைந்த தந்தையே,  நீர் எங்களுக்குக் கொடுத்தவைகளையே நாங்கள் உமக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றோம்.  இக்காணிக்கைகளை ஏற்று எங்களுக்கு உமது மீட்பைத் தந்தருளும்.  எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக
உம்மை மன்றாடுகிறோம்.
மக்: ஆமென்.

நற்கருணை மன்றாட்டு
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக்கள்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக்கள்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
குரு :
ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.
எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.
தூயவரான தந்தையே, உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும்,
உம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும்.
ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவுள்.
காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இருக்கின்றீர்.
அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர்.
நீர் ஒருவரே நல்லவர். ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் படைத்து,
படைப்புகளை நலன்களால் நிறைத்து,
உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவுளமானீர்.
ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,
இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர்.
உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து,
உம்மை இடையறாது புகழ்கின்றனர்;.
அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும்,
உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :

மக்கள்:



தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா! 
ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

நற்கருணை மன்றாட்டு 1
இரக்கம் மிகுந்த தந்தையே, இதயம் நிறைந்த நன்றியுடன் நாங்கள் இப்புனித காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்துள்ளோம். இவற்றை உமக்கு உகந்த பலிப்பொருளாக நீர் ஏற்று ஆசீர்வதித்தருள, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
உமது தூய கத்தோலிக்கத் திருச்சபைக்காக நாங்கள் இவற்றை ஒப்புக் கொடுக்கின்றோம். அதற்கு உலகமெங்கும் அமைதியும் ஒற்றுமையும் அளித்து அதனைப் பாதுகாத்து வழிநடத்துவீராக. உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை....... ஆயர்........ க்காகவும், அப்போஸ்தலிக்க விசுவாசத்தைக் கடைபிடித்துப் போதிப்பவர்கள் அனைவருக்காகவும் இக்காணிக்கைகளை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
இறைவா உம் மக்கள் எல்லாரையும், சிறப்பாக இன்று யாருக்காக மன்றாடுகிறோமோ அவர்களையும் நினைவு கூர்ந்தருளும். (பெயர்கள்). இங்கே கூடியிருக்கும் எங்களையும் நினைவு கூர்ந்தருளும், எங்கள் விசுவாசத்தையும் அர்ப்பணத்தையும் நீர் அறிவீர். எங்களுக்காகவும் எம்மவர்க்காகவும் இப்புகழ்ச்சி பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். உயிருள்ள மெய்யான என்றும் வாழும் இறைவா, எங்கள் ஈடேற்றத்திற்காகவும், நாங்கள் எதிர்ப்பார்கும் தீங்கற்ற நல்வாழ்வுக்காகவும் எங்கள் வேண்டுதலைச் செலுத்துகிறோம்.
புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாளையும், அவருடைய கணவர் புனித சூசையப்பரையும், உம்முடைய அப்போஸ்தலரும் புனிதருமான இராயப்பர், சின்னப்பர், அந்திரேயா, மற்றப் புனிதர் எல்லாரையும் வணக்கத்துடன் நினைவுகூர்கின்றோம். இவர்களுடைய பேறுபலன்களினாலும் வேண்டுதலினாலு;ம் நாங்கள் யாவற்றிலும் உமது உதவி பெற்றுக் காக்கப்படுமாறு அருள்புரியும்.
ஆகவே, இறைவா, உம் ஊழியர்களாளிய நாங்களும், உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கும் இக்காணிக்கையை மனமுவந்து ஏற்றருளும். வாழ்நாளெல்லாம் எங்களுக்கு உமது அமைதியைத் தந்து, முடிவில்லா அழிவிலிருந்து எங்களைக் காப்பாற்றி , நீர் தேர்ந்து கொண்டவர்களின் கூட்டத்தில் சேர்த்தருளும்.
இறைவா,இந்தக் காணிக்கையை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, ஆவியிலும் உண்மையிலும், உமக்கு உகந்ததாகச் செய்தருளும், இவ்வாறு உம்முடைய அன்புத் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் திருவுடலாகவும் இரத்தமாகவும் இக்காணிக்கை மாறுவதாக.

அவர் தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் வணக்கத்துக்குரிய தம் திருக்கைகளில் அப்பத்தை எடுத்து, வான்நோக்கிக் கண்களை உயர்த்தி, எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையுமாகிய உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்;
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.  இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள்: ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக் கின்றோம்.

ஆகவே, இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்து பாடுபட்டதையும், மாட்சியுடன் விண்ணகம் சென்றதையும் உம் ஊழியர்களாகிய நாங்களும், உம்முடைய புனித மக்களும் நினைவு கூர்கின்றோம். நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து முடிவில்லா வாழ்வு தரும் புனித அப்பத்தையும், நிலையான மீட்பளிக்கும் கிண்ணத்தையும், தூய, புனித, மாசற்றப் பலியாக மாட்சிமை மிக்க உமக்கு நாங்கள் ஒப்புக் கொடுக்கின்றோம்.
இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும், நீதிமானாகிய உம்முடைய ஊழியன் ஆபேலின் காணிக்கைகளையும், எங்கள் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலியையும், உம்முடைய உன்னதகுரு மெல்கிசெதக்கு அளித்த காணிக்கைகளையும் நீர் ஏற்றுக் கொண்டது போல், இவற்றைப் புனித பலியாகவும் மாசற்ற பலிப்பொருளாகவும் ஏற்றருளும்.
எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் இக்காணிக்கைகளை உமது விண்ணகப் பீடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். உம்முடைய மகனின் திருவுடலையும் இரத்தத்தையும் இப்பீடத்திலிருந்து பெறுகின்ற நாங்கள் அனைவரும் எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக் கொள்ளச் செய்தருளும்.
இறைவா விசுவாசத்தின் அடையாளத்தைப் பெற்று இறந்து போன உம் அடியார்களையும், சிறப்பாக இன்று யாருக்காக மன்றாடுகிறோமோ அவர்களையும் நினைவு கூர்ந்தருளும். (பெயர்கள்)
இறைவா இவர்களுக்கும், கிறிஸ்துவில் இளைப்பாறும் மற்ற அனைவருக்கும் இன்பமும், ஒளியும் அமைதியும் அளித்தருளும்.
பாவிகளாகிய நாங்களும் உமது பேரிரக்கத்தை நம்பியிருக்கின்றோம். உம்முடைய புனித அப்போஸ்தலர், மறைசாட்சிகள், அருளப்பர், ஸ்தேபான், மத்தியாஸ், பர்னபா, மற்றப் புனிதர் அனைவருடனும் உம் அடியாராகிய எங்களுக்கும் பங்களித்து, அவர்களோடு நாங்கள் தோழமை கொள்ள அருள்புரியும். எங்கள் தகுதியின்மைப் பாராமல், எங்களை மன்னித்து, புனிதரின் அவையில் இடமளிக்குமாறு, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
இவர் வழியாகவே, இறைவா, நீர் எப்போதும் இவற்றையெல்லாம் நல்லவையாக்கி, புனிதப்படுத்தி, உய்வித்து, ஆசீர்வதித்து எங்களுக்கு அருளுகின்றீர்.
இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

நற்கருணை மன்றாட்டு 2
வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், புனிதத்திற்கெல்லாம் ஊற்று.
ஆகவே, உம்முடைய தூய ஆவியைப் பொழிந்து , இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட மனமுவந்து தம்மைக் கையளித்தபோது, அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ;
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், கிண்ணத்தை; எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ;
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.  இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள்: கிறிஸ்து மரித்தார்; கிறிஸ்து உயிர்த்தார்; கிறிஸ்து மீண்டும் வருவார்.
ஆகவே, இறைவா, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்ப்பையும் நினைவு கூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்களென எங்களை ஏற்றுக் கொண்டீர். எனவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும், கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவி ஒன்று சேர்க்க வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
இறைவா, உலகெங்கும் பரவியிருக்கும் உமது திருச்சபையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை........ எங்கள் ஆயர்......... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். எங்கள் அனைவரையும் அன்பின் நிறைவை அடையச் செய்தருளும்.
(தந்தையே, நீர் (இன்று) இவ்வுலகில் உம்மிடம் அழைத்துக் கொண்ட ....... என்னும் எம் சகோதரரை சகோதரியை) நினைவுகூர்ந்தருளும், இவர் திருமுழுக்கின் வழியாக உம் திருமகனுடைய சாவில் அவரோடு ஒன்றாய் இணைக்கப்பட்டது போல், உயிர்ப்பிலும் அவரைப் போல் இருக்கச் செய்தருளும். மேலும்,
உயிர்த்தெழும் நம்பிக்கையுடன் இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும், இறந்தோர் அனைவரையும் நினைவுகூர்ந்து, ஒளிமிக்க உம் திருமுன் ஏற்றுக்கொள்ளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இறைவனின் கன்னித்தாயான மாட்ச்சிமிக்க மரியாள், புனித அப்போஸ்தலர் இவ்வுலகில் உமக்குகந்தவராய் இருந்தவர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலையான வாழ்வில் தோழமை கொண்டு, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்.
இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

நற்கருணை மன்றாட்டு 3
வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக மக்களை இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.
ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம்.
ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ;
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ;
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.  இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள்: ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.
ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக.
இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.
இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இக்குடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய மக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.
இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

நற்கருணை மன்றாட்டு 4
குரு : தூயவரான தந்தையே, உம்மைப் புகழ்கின்றோம்: ஏனெனில், நீர் மாண்புமிக்கவர். உமது ஞானமும் பேரன்பும் விளங்க, அனைத்தையும் செய்தருளினீர். மனிதர் எங்களை உமது சாயலாகப் படைத்து, படைத்தவராகிய உமக்கே நாங்கள் பணிபுரியவும், படைப்புகளை எல்லாம் ஆண்டு நடத்தவும், உலகம் அனைத்தையும் எங்கள் பொறுப்பில் ஒப்படைத்தீர். கீழ்படியாமல் நாங்கள் உமது நட்புறவை இழந்தபோதிலும், நீர் எங்களை சாவின் அழிவுக்கு விட்டு விட வில்லை. ஏனெனில், தேடுவோர் யாவரும் உம்மைக் கண்டடைய நீர் இரக்கத்துடன் துணைபுரிந்தீர். மேலும், எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளப் பன்முறை முன் வந்தீர், மீட்பினை எதிர்பார்க்க இறைவாக்கினா வழியாக எங்களுக்கு கற்பித்தீர்
தூயவரான தந்தையே, காலம் நிறைவுற்ற போது, உமது ஒரே பேறான திருமகனை மீட்பராக அனுப்பும் அளவுக்கு, நீர் எங்களை அன்பு செய்தீர். அவர் தூய ஆவியால் கன்னிமரியாளிடம் உடலெடுத்து, மனிதராகப் பிறந்து, பாவம் தவிர மற்றனைத்திலும் எங்களைப் போல வாழ்ந்தார். ஏழைகளுக்கு ஈடேற்றம், சிறைப்பட்டோர்க்கு விடுதலை, துயருற்றோருக்கு மகிழ்ச்சி என்று நற்செய்தி கூறினார், உமது திட்டத்தை நிறைவேற்ற, தம்மைத் தாமே சாவுக்குக் கையளித்தார், இறந்தோரிடமிருந்து உயிர்த் தெழுந்து, சாவையழித்து புதுவாழ்வு தந்தார்.
தந்தையே இனிமேல் நாங்கள் எங்களுக்காக வாழாமல், எங்களுக்காக இறந்து உயிர்த்த அவருக்காகவே வாழும் பொருட்டு விசுவசிப்போர் எங்கள் மீது தூய ஆவியை உம்மிடமிருந்து முதற் கொடையாக அனுப்பினார்.
இவ்வாறு, அவரது அலுவலைத் தூய ஆவி இவ்வுலகில் தொடர்ந்து நடத்தி, புனிதமாக்கும் பணியை நிறைவேற்றி வருகின்றார்.
ஆகவே, இறைவா, தூய ஆவி இக்காணிக்கைகளைப் புனிதப் படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இவ்வாநு எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிலையான உடன்படிக்கையாக எங்களுக்கு விட்டுச் சென்ற இந்த மாண்புமிக்க திருப்பலியை நாங்கள் நிறைவேற்றுமாறு, இக்காணிக்கைகள் அவரது உடலும் இரத்தமுமாக மாறுவனவாக!
ஏனெனில், தூயவரான தந்தையே, உம்மால் அவர் மகிமை பெற வேண்டிய நேரம் வந்ததும், உலகில் இருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்து அவர், இறுதிவரையும் அன்புகூர்ந்து, அவர்களோடு உணவு அருந்துகையில், அப்பத்தை எடுத்து, வாழ்த்துரைத்து, அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ;
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ;
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.  இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள்: ஆண்டவரே, உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும். உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே!

ஆகவே, இறைவா, எங்கள் மீட்பின் நினைவை இப்பொமுது கொண்டாடும் நாங்கள் கிறிஸ்து இறந்ததையும் பாதாளங்களில் இறங்கியதையும் நினைவு கூர்கின்றோம். அவர் உயிர்த்ததையும், உமது வலப்பக்கத்திற்கு எழுந்ததையும் அறிக்கையிடுகின்றோம். மாட்சியுடன் அவர் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள், உமக்கு உகந்ததும் உலகிற்கெல்லாம் மீட்பளிப்பதுமான பலியாக அவருடைய திருவுடலையும் இரத்தத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
இறைவா, உமது திருச்சபைக்காக நீரே ஏற்பாடு செய்த இப்பலிபொருளைக் கண்நோக்கியருளும். இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறுகின்ற எல்லாரும் தூய ஆவியால் ஒரே உடலாக இணைக்கப் பெற்று, உமது மாட்சியின் புகழுக்காக, கிறிஸ்துவில் உயிருள்ள பலிப்பொருள் ஆகுமாறு தயவாய் அருள்புரியும்.
இறைவா, இன்று யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோமோ, அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவு கூர்ந்தருளும், உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை....., எங்கள் ஆயர்.... ஆண்டகை, ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொது நிலையினர் ஆகிய அனைவரையும் நினைவு கூர்ந்தருளும். இப்பலியை ஒப்புக் கொடுப்போரையும், இங்கிருப்போர் அனைவரையும் உம் மக்கள் எல்லாரையும், நேர்மனத்தோடு உம்மைத் தேடிவரும் யாவரையும் நினைவு கூர்ந்தருளும். கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் நினைவு கூர்ந்தருளும். இறந்தவர்களில் உம்மீது விசுவாசம் கொண்டவர்கள் யாரென நீர் ஒருவரே அறிவீர். அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்தருளும்;
இரக்கமுள்ள தந்தையே, இறைவனின் அன்னை புனிதமிக்க கன்னி மரியாள், உம் அப்போஸ்தலர், புனிதர் அனைவரோடும் உம்முடைய பிள்ளைகளாகிய நாங்களும் விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்ள அருள்புரியும். பாவத்தினாலும் சாவினாலும் வரும் அழிவிலிருந்து விடுதலை பெற்ற படைப்புகள் அனைத்தோடும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உமது அரசில் உம்மை புகழ்ந்தேத்துவோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.
இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.
திருவிருந்துச் சடங்கு :

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக்கள்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.


குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
மக்கள்: ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!
குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, |அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்| என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
மக்கள்: ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)


மக்கள்: 
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியேஎங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியேஎங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
(பாடல் திருப்பலியில்)

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும்.
(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)
குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக்கள்: ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.
(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
குரு : கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர் : ஆமென்.

திருவிருந்து பாடல்:

யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வுதரும் வார்தை யெல்லாம் உம்மிடமன்றோ உள்ளன -யாரிடம்
Yaridam Selvoom by shseminary
1.
அலை மோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் -2
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய்
ஆதரித்தே அரவணைப்பாய் -யாரிடம்
2.
மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா -2
குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் நிறைவதெப்போ?
குவலயம் தான் நினைவதெப்போ? -யாரிடம்
3.
வேரறுந்த மரங்களிலே விழைந்திருக்கும் மலர்களைப் போல்
உலகிருக்கும் நிலைகண்டு உனது மனம் இரங்காதோ
உனது மனம் இறங்காதோ -யாரிடம்

(சிறிது நேரம் மௌனம் காத்து அல்லது நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக.)

குரு : செபிப்போமாக. இறைவா, உம் திருமகன் வழியாக நீர் எங்களுக்கு அளித்த மீட்பை இத்திருவெளிபாட்டில் நாங்கள் கொண்டாடி மகிழ்ந்தோம், இந்த அனுபவத்தின் ஆற்றலால், சமுதாயத்தில் நிலவும் நன்மை தீமைகளைப் பகுத்தாயும் தெளிந்த பார்வை பெறவும், உம்மீது மாறா அன்பு கொண்டு, சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கவும் வரந்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள்: ஆமென்.
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!
மக்கள்: ஆமென்.
குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று.
மக்கள்: இறைவா உமக்கு நன்றி.



(குரு பீட வணக்கம் செய்து பீடப் பணியாளர்களுடன் திரும்பிச் செல்கிறார்.
நாமும் இறைவனைப் புகழ்ந்தேத்திய வண்ணம் நற்செயல்களைப் புரிய இல்லம் திரும்புவோம்)