நள்ளிரவு/காலை திருப்பலி - புத்தாண்டு 2011

முன்னுரை

இறையேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,
புத்தாடைகளோடும், மனங்களில், பொங்கும் மகிழ்ச்சியோடும் பூமணம் வீசும் இப்பொன்னாளில் புலரும் (அல்லது)  புலர்ந்திருக்கிற புதிய ஆண்டினை இறை ஆசிரோடு தொடங்க, பரமனின் பலியிலே நாம் இணைத்திருக்கிறோம்.   இவ்வினிய வேளையில் கடந்த ஆண்டு முழுவதும் நம்மைக் காத்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, பூத்திருக்கும் இப்புதிய ஆண்டினை புத்துணர்ச்சியோடு தொடங்க, இறைவனின் பிள்ளைகளாய் தொடர்ந்து இறைபாதையில் நடக்க, ஆண்டவரின் அருளை இறைஞ்சுவோம்.

மேலும் இன்று “அன்னைமரி இறைவனின் தாய்” என்ற உண்மையை பெருவிழாவாக எடுத்து நம் தாய்த்திருச்சபை சிறப்பிக்கிறது.  மனுகுலம் மீட்படைய மாபரன், தான் வகுத்த மாபெரும் திட்டத்தினை நிறைவேற்ற, அன்னைமரியை தெரிந்தெடுத்து, பாவக்கறை படியாது அவரைப் பாதுகாத்து, “இறைவனின் தாய்” என்ற ஈடில்லா பேற்றினை அவருக்கு அளித்தார், என்ற உண்மையை நாம் ஒவ்வொரு வரும் அறிந்து கொள்ள திருச்சபை நமக்கு அழைப்பு விடுகிறது.

அன்று சிலுவை மரத்திலே இறக்கும் தறுவாயில் நம் ஆண்டவர் “இதோ உன் தாய்” என்று தன் அன்பு சீடரிடம் அன்னை மரியை ஒப்படைக்கிறார்.   அவரும் அன்னைமரியை தன் இல்லத்தில் ஏற்றுக் கொள்கிறார்.  எனவே, ஆண்டவரில் விசுவாசம் கொண்ட நாமும் அவரின் அன்பு சீடர்களாய் வாழ, அன்னை மரியை நம் உள்ளத்தில் ஏற்று, அவரின் கரம் பிடித்தபடி, பிறந்திருக்கிற இப்புதிய ஆண்டில் இறைவழி நடப்போம்.  

அன்பால் இதயங்கள் இணைந்திட
இம்மண்ணில் மனிதம் மலர்ந்திட
நம்மனங்களில் மகிழ்ச்சி நிறைந்திட
எங்கும் இறையாட்சி பரவிட
தொடர்ந்து இத்திருப்பலியில் மன்றாடுவோம்.  

வாசக முன்னுரைகள் :

முதல் வாசகம் (எண்.  66: 22-27)
எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ராயேல் மக்களை மீட்டபின் ஆண்டவர் மோயீசன் வழியாக ஆசீர்வதிக்கிறார்.  புதிய வருடம் இறைவன் கொடுக்கும் ஒரு புதிய கொடை.   இந்நாளில் ஆண்டவரின் ஆசீரை இவ்வாசகத்தின் வழியாக பெற்று மகிழ்வோம்.

இரண்டாம் வாசகம் : (கலா 4 : 4-7)
இயேசு கிறிஸ்துவை இறைவன் நேரடியாக மனுக்குலத்திற்கு அனுப்பவில்லை மாறாக அன்னை கன்னிமரியாள் வழியாக மனுகுலத்திற்கு கையளித்தார்.  இறைவனின் மீட்புத்திட்டத்தில் பங்கேற்ற அன்னை மரியாளின் பரிந்துரையும் ஆசீரும் இவ்வாண்டு முழுதும் தொடர வேண்டி இந்த வாசகத்திற்கு கனிவுடன் செவிமடுப்போம்

மன்றாட்டுக்கள் :-
01. நல்லாயனாம் எம் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் திருந்தந்தை ஆயர்கள், குருக்கள் திருத்தொண்டர்கள் ஆகியோருக்காக உம்மிடம் மன்றாடுகிறோம்.  இவர்கள் இறை விருப்பத்தை அறிந்து, உம்மைப் போல் வாழ்ந்து, மக்களை உம் அன்பு வழியில் வழி நடத்தி செல்லும், நல்ல மேழப்பர்களாக செயல்பட வேண்டிய அருளை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

02. வழிகாட்டும் விண்மீனே எம் இறைவா ! எங்கள் நாட்டு தலைவர்களுக்காக உம்மிடம் மன்றாடுகிறோம்.  அவர்கள் குடும்பம் ஜாதி, மதம் போன்ற குறுகிய வட்டங்களை விட்டு வெளியே வந்து மக்களின் நலன்களில் அக்கறைக் கொண்டு அன்பை அடிப்படையாக் கொண்ட புதியதொரு சமுதாயத்தை உருவாக்கும் உம் அன்பின் கருவிகளாக மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

03.    அன்பின் ஊற்றே எம் இறைவா! உலக நாடுகளிடையே சமாதானம் நிலவ உம்மிடம் மன்றாடுகிறோம்.  பிறந்திருக்கிற இப்புதிய ஆண்டில், நாடுகளிடையே நிலவும் சண்டை, சச்சரவு, வெறுப்பு போன்றவை நீங்கி இறைவனின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் என்பதை எல்லோரும் உள்ளங்களால் உணர்ந்து, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

04.   உலகின் ஒளியான எம் இறைவா! இளைஞராண்டை சிறப்பிக்கும் இந்தருணத்தில் உலகில் உள்ள அனைத்து இளைஞர், இளம்பெண்களுக்காக உம்மிடம் மன்றாடுகிறோம்.  இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் நோக்கத்தை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து, தீமையை களைந்து, நல்லதை ஏற்று, உம் அன்பு பிள்ளைகளாக, உமக்கு உகந்த வகையில் என்றும் வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Prepared by 
  1. Jayan G.
  2. Johnson S.
  3. Sundar Raj S.
  4. Victor Lawrence
  5. Arun Savariraj X.
Spirituality Course, St. John's Propaedeutic Seminary, Cuddalore