இறை அழைத்தல்

(Tamil Pandit Vijayavalli was requested to write about Vocation, Formation and Priesthood.  Here is her contribution.)

1. இறை அழைத்தல் 
அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. 
ஆம்! இறைவன், மனிதனை தம் உருவிலும்,  சாயலிலும் உண்டாக்கி தன் உயிர் மூச்சை ஊதி, உயிருள்ளவனாக்கி, அவன் விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கி அவளை அவனுக்குத் துணையாக்கி, தான் படைத்த அனைத்து படைப்புகளையும் ஆண்டுகொள்ள அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க. 

ஓரறிவு முதலாக ஆறறிவு வரையிலான அனைத்து உயிரினங்களைப் படைத்த இறைவனின் கட்டளையை ஆதிமனிதன் மீறியதால் சாவன பாவத்திற்கு ஆட்பட்ட மனித குலம், தொடர்ந்து வாழ்கிறது, வளர்கிறது, வாழ்ந்து கொண்டிருக்கிறது.  அவனது பாவச் செயல்களும் தொடர்கதையாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாவக்குழியிலே அமிழ்ந்து கொண்டிருந்த மனித குலத்தை மீட்க இறைவனால் அழைக்கப்பட்டவர்கள் தான் இறைவாக்கினர். 
ஆபிரகாம் முதல் அன்னை தெரசா வரை அனைவருமே இறை அழைத்தலுக்கு தன்னை அர்ப்பணித்தவர்கள் தான். 
தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே உன்னை திருநிலைப்படுத்துனேன். [எரேமியா 1;5].
தாயின் வயிற்றிலே உருவாக்கமுன்பே, ஏழையோ, செல்வந்தனோ, கூனோ,     குருடோ, இல்லறத்தரோ, துறவறத்தாரோ, ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வகுத்து வழிநடத்துபவர் இறைவன்.

எகிப்தில் இஸ்ராயேல் மக்களை விடுவித்து வழிநடத்த மோசேயசை தேர்ந்தெடுத்தார் தன்னிடம் உள்ள குறைகளை எடுத்துக்கூறி மோசே தட்டிக் கழித்த போதும் இறைவன் அவரை வழிநடத்தி இஸ்ரேயல் மக்களின் விடுதலைக்கு உதவினார். சாமுவேல், சவுல், தாவீது, சாலமோன் போன்ற அரசர்களையும் எசாயா, எரேமியா, எசேக்கியல், தானியேல், ஆமோஸ் போன்ற இறைவாக்கினர்களையும் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக தம் எண்ணங்களை மக்களுக்கு எடுத்துரத்தார்.  தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் நேரிய வழியில் செல்லும் போது அவர்களை அரவணைக்கவும் தவறவில்லை, தடம் மாறி நடந்த போது தண்டிக்கவும் தயங்கவில்லை. இறைவன் தமக்கு கொடுக்கப்பட்ட பணியை தவிர்த்து, யோனா தப்பியோட முயன்றபோது,  ஏற்பட்ட விளைவுகளையும்,  யோனா இறை சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, அவர் தமக்கு இட்ட கட்டளைகளை நிறைவேற்றியபோது இறை ஆசிர் பெற்றதையும் நாம் அறிவோம். 

ஆதலால் இறைவன் தன் திட்டபடியே, ஒவ்வொரு செயலையும் ஆற்றுகிறார் மனிதனை வழிநடத்துகிறார் எனபதை பழைய, புதிய ஏற்பாட்டின் வழியே நாம் அறிகிறோம். குருத்துவப் பணிக்கு தம்மை அர்ப்பணித்தோரின் வாழ்வும் அப்படிப்பட்டதே! இப்பணிக்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன்,  படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு இல்லை இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவனே போதும். அன்று இயேசு இறைப்பணிக்கு யாரை அழைத்தார்? மீன்பிடிப்போர், வரிவசூலிப்பவர் போன்ற பாமர மக்களை அல்லவா தேர்ந்தெடுத்தார்.  கிறிஸ்துவ இனத்தயே அடியோடு அழிப்பேன் என்று சபதம் செய்து வெறித்தனமாக செயலாற்றய சவுலை பவுலாக்கி,உலகமெங்கும் திருச்சபை பரவ வித்திட வைத்தவர்.  இயேசுவின் தாயாக மரியாளை இறைவன் தேர்ந்தேடுத்தபோது,
நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே நிகட்டும்.  [லூக் 1;38]
என்று இறைஅழைத்தலுக்கு தலை குனிந்தார் அன்னை மரியாள். தூய ஆவியின் உந்துதலால் இறைஅழைத்தலுக்கான மாற்றங்கள் நம் உள்ளத்தில் எழும்போது,
ஆண்டவரே பேசும்! அடியேன் நான் கேட்கின்றேன்.
என சாமூவேல் போல் பதிலளிக்க வேண்டும். புனித வாழ்வை யாரும் வாழ்ந்து அனுபவித்து மகிழலாம். ஒரு சிலருக்காக மட்டுமே அதை இறைவன் படைக்கவில்லை. இல்லறத்தார், துறவறத்தார் யாராக இருந்தாலும் தத்தம் வாழ்வின் நிலைக்கேற்ப புனிதராக முடியும் என்று சலேசியார் கூறுவது போல் எந்தச் சூழ்நிலையும் நம்மை தாக்காது புனித வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும். 

பெற்றோர், உற்றார், உறவினரின், தூண்டுதலால் நாம் குருத்துவ வாழ்வை மேற்கொள்ள இயலாது.  அன்று இயேசு தம் சீடர்களிடம் 
வந்து பாருங்கள் (யோ 1;38-39)
என்றார். பிலிப்பைக்கண்டு, 'என்னை பின்தொடர்ந்து வா' என்றார்.  (யோ 1;43) ஒரு பண்டத்தை பார்ப்பதால் மட்டுமல்ல சுவைத்துப் பார்ப்பதால் தான் சுவையின் தன்மை தெரியும். அது போல்இயேசுவை பின் செல்ல அவரோடு தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும். 
எண்ணித்துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
இறை அழைத்தலுக்கு தலைவணங்கி அவ்வாழ்வை ஏற்க துணிந்தவுடன் சில ஆண்டுகள் கழித்து ஏன் வந்தோம் என்று எண்ணுவது இழுக்கான செயல்.  கலப்பையில் கை வைத்த பின் திரும்பிப்பார்க்கலாமா?

சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தடுமாற வைக்கும் பொழுது பரிசுத்த ஆவியாரின் துணையுடன் தெளிவுபெற்று இயேசுவைப் பின் செல்ல வேண்டும். திட மனதினைப் பெற இயேசுவிடம் மன்றாட வேண்டும் இறைவனின் அருளும் ஆசியும் இருந்தாலொழிய, குருத்துவ வாழ்விலே நம்மால் நிலைத்து நிற்க முடியாது. நிலையில்லா உலகம், நிலையில்லா செல்லவம், நிலையில்லா உறவு என அறிந்தும் அவற்றை உதறிவிட்டுச் செல்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல.  
அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு 
ஆம் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தை நித்திய வாழ்வுக்கு வழிகாட்ட, இயேசுவின் அன்பை சுவைக்க வைக்க, நமக்காக சிலுவையிலே மரித்த இயேசுவின் போதனையை மக்களுக்கு எடுத்துக்கூற குருத்துவப்பணி மிக முக்கியம்.

இவ்வுலகில் எவ்வளவோ பணிகள் உள்ளன அறிவூட்டும் ஆசிரியப் பணி, நோய்த் தீர்க்கும் மருத்துவப்பணி, நாட்டைக் காக்கும் இராணுவப் பணி என்று ஆயிரக்கணக்கான பணிகள் உள்ளன.  இவையனைத்தும் இவ்வுலகில் வாழும் வரைதான் பயன்படும். மறுவுலக வாழ்விற்கு வழிகாட்டும் ஒரே பணி குருத்துவப்பணி தான் என்பதை உணர்ந்தால் நாம் தடுமாற மாட்டோம். விருப்பு, வெறுப்பு இல்லா இறைவனின் திருவடியை அடைந்தவர்க்கு, எக்காலத்துக்கும் துன்பம் இல்லை.
 நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன  
என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால் தான் கிறிஸ்துவை அறிய முடியும். அவரை அறிந்தால் தான் நித்திய வாழ்வை அடைய முடியும். அந்த ஒப்பற்ற செயலை ஆற்றுவதற்கு ஏற்ற பணி குருத்துவப்பணி. ஆதலால் இறை அழைத்தலுக்கு நாம் நம்மையே கையளிக்க வேண்டும். அதுகல்லும், முள்ளும் நிறைந்த பாதைதான். அரவணைத்து அழைத்துச் செல்ல நல்லாயனாம் இயேசு இருக்க அச்சம் ஏன்?
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிர் ஆகப் பெறின்
2. குருத்துவப் பயிற்சி 

சித்திரமும் கைப்பழக்கம்,செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி பிறவியிலேயே யாரும் ஓவியராகவோ,சிற்பியாகவோ பிறப்பதில்லை. மனதில் பிறக்கும் ஆசை வரையத்தூண்டும், ஒரு செயலில் முழு கவனத்தை செலுத்தி பயிற்சி எடுத்தால், வெள்ளைத் தாள்களெல்லாம் உயிருள்ள ஒவியங்களாகும்.  கரடு முரடான கற்களெல்லாம்,  கை குவித்து வணங்கும் 

தெய்வங்களாகும். மழலை பேசும் குழைந்தைகளுக்கு ஆசிரியர் கொடுக்கும் பயிற்சி தான் பிழையில்லா தேன்தமிழாய் நம் காதுகளில் ஒலிக்கும்.  பயிற்சி என்பது நாம் மேற்கொள்ளப் போகும் பணிக்கு அடித்தளம் போன்றது. அந்த அடித்தளமானது முறையாக, ஒழுங்காக போடப்பட்டால்தான், அதன் மேல் எழுப்படும் கட்டிடம் நீண்டக்காலம் உறுதியோடு இருக்கும். இன்றேல் சாதாரண மழைக்கும், இடிக்கும் தாங்காது சரிந்து விழுந்து மண்ணோடு மண்ணாகிப் போகும். உலகத்தில் ஒவ்வொரு பணிக்கும் ஒரு சில ஆண்டுகளே பயிற்சி அளிக்கப்படும். அந்த பயிற்சியைப பெற்றப் பின் தனது அனுபவத்தால், திறமையால், ஆர்வத்தால் முயற்சி செய்து அந்தப் பணியில் சிறப்புற்று விளங்குகின்றனர். 

ஆனால் குருத்துவப் பயிற்சி? மேல்நிலைக் கல்வியை முடித்துவரும் ஒரு மாணவன்,  தன் விருப்பத்திற்கோ, அல்லது மற்றவரது விருப்பத்திற்காகவோ இணங்கி, உள்ளே நுழைகிறான். இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற சூழ்நிலை. இவர்களுக்கு ஏன் பல ஆண்டுகள் பயிற்சி அளிக்கின்றனர்? மருத்துவப் பயிற்சி பெற்றோர் மருத்துவராக மட்டுமே பணியாற்றுவர்,  ஆசிரியப் பயிற்சி பெற்றோர் ஆசிரியராக மட்டுமே பணியாற்றுவர்.  இவ்வாறு எந்தெந்த துறையில் யார் யார் பயிற்சி பெற்றாரோ அந்தந்த துறையில் மட்டுமே பணியாற்றுவர். 

ஆனால் எல்லோருடனும் கலந்து,  அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்று,  அவர்களது குறைகளை களைய ஆலோசனைகள் வழங்கி தாயாய்,  தந்தையாய், ஆசிரியராய் அவர்களை வழிநடத்தும் பெரும் பொறுப்பு குருக்களுக்கு மட்டுமே உரியது.  மற்றவர்களை வழிநடத்த இருக்கும் ஒருவர்,  அதற்கான தகுதியை தான் பெற்றிருக்க வேண்டும். அந்த தகுதி ஓரிரு ஆண்டுகளில் வந்துவிடாது. பலவகைகளில் தம்மை சோதித்து புடமிட்ட பொன்னாக வெளிவர பயிற்சி மிக மிக அவசியம். இயேசு மீன் பிடித்துக் கொண்டிருந்த பேதுருவையும் அந்திரேயாவையும் பார்த்து,
என்பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்றார்.  (மத் 4;19 )
இயேசு தம்மை வெளிப்படுத்தி, புதுமைகள் புரிந்து, நற்செய்தியை அறிவித்த மூன்று ஆண்டுகளும் தமது 12 சீடர்களை தன்னருகே வைத்திருந்தார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றார்.  ஏன்? 

தன்னோடிருந்து தனது செயல்களைப பார்க்கும் அவர்கள், தனக்குப் பின்னால் தனது மேய்ப்புப்பணியை திறம்பட ஆற்றும் வல்லமை பெற வேண்டும் என்பதற்காகவே.  அவர் செய்த அனைத்துப் புதுமைகளையும் கண்டு வியந்த அவர்கள்,  சிலுவை மரணத்தை இயேசு அடைந்த போது உயிருக்கு அஞ்சி சிதறுண்டுப் போனார்கள். 

இயேசுவின் துணையாளரான பரிசுத்த ஆவி அவர்களை ஆட்கொண்டபோது, அவர்கள் துணிவு பெற்றார்கள்,  சாவுக்கு பயந்து, ஓடி ஒழியாமல் உலகின் கடைசி எல்லைவரை நற்செய்தியைப் பரப்பினார்கள்.  அவர்கள் வழியாய் பல இலட்சம் பேர் கிறிஸ்துவை அறிந்தார்கள்; பாடுகள் பட்டனர்; வேதசாட்சிகளாய் மறித்தனர். அதற்கு அவர்களது உடலும், உள்ளமும் எவ்வளவு பக்குவப்பட்டிருக்க வேண்டும். உடலும், உள்ளமும், பக்குவப்பட பயிற்சி மிகமிக அவசியம்.

உலக வாழ்விலிருந்து பெரிதும் மாறுப்பட்டது குருக்கள் வாழ்க்கை பொருளை சம்பாதிப்பதை அடிப்படையாகக் கொண்டது மற்றப்பணிகள். ஆனால் பொருளை சம்பாதிக்க அல்ல, அருளை மட்டுமே சம்பாதிக்க, தன்னயே அர்ப்பணிக்கும் தியாக வாழ்வு தான் குருத்துவ வாழ்வு. இவ்வாழ்வு முழுமை பெற, படிப்படியாக,  உடலும், உள்ளமும் பக்குவப்பட பயிற்சி மிகமிக அவசியம். அதைவிட, அவர்களுக்குக் கற்பிப்பவர்களும், வழிநடத்துபவர்களும் இயேசுவாக இல்லாவிட்டாலும் இயேசுவைப் போலாவது இருக்க வேண்டும் இது மிகமிக முக்கியம்
என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள். ( எரே 3-15)
குருமாணவர்களை,  அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துபவர் அவசியம்.  ஏனெனில் குரு கிறிஸ்துவின் பிரதிநிதி. 
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
என்று வள்ளுவன் கூறியதுபோல் மனதை கட்டுப்படுத்த செபம், தியானம், பொறுமை,  தாழ்ச்சி,  சாந்தம்,  கீழ்ப்படிதல், கற்பு,  ஏழ்மை, எளிமை,  பிறரன்பு அனைத்தும் அவசியம்,  இவை அனைத்தும் முழுநாளிலோ, ஒரு மாதத்திலோ,  ஒரு ஆண்டிலோ வந்துவிடாது.  இறைவனின் ஆசியாலும், தூய ஆவியின் துணையினாலும், துளித்துளியாய் பக்குவப்பட்டு, எந்தச் சூழ்நிலையாலும், சூறாவளியாலும் பாதிக்கப்படாத மலைப்போல் நிமிர்ந்து நிற்க முடியும். அதற்கு பயிற்சியும், முயற்சியும் மிகமிக அவசியம். 

ஆமைபோல் ஐம்புலன்களை அடக்கி வாழ பயிற்சி அவசியம்.  மனம் ஒரு குரங்கு.  அதை அடக்கி ஆளாவிட்டால் தாவித்தாவி தனிச்சையாய் திரிந்து பாவம் என்ற சாக்கடையில் விழுந்துவிடும். பந்த,பாசங்களுக்கு அப்பாற்பட்டதான இவ்வாழ்க்கைக்கு தன்னை ஒப்பக்கொடுக்கும் ஒருவர், தனது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் இயேசு ஒருவருக்கே சொந்தமாக்க வேண்டும்.
படைவீரர் எவரும் பிழைப்புக்காக பிற அலுவல்களில் ஈடுபடமாட்டார். தம்மைப்படையில் சேர்த்துக் கொண்டவருக்கு அவர் உகந்தவராய் இருக்க வேண்டும்.  விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூடமுடியும்
என்று புனித பவுல் திமொத்தியுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறியுள்ளது போல் (2திமொ 2;4-6) இயேசுவின் மேய்ப்புப்பணியில் பங்கேற்கும் குருக்கள், இயேசுவுக்கு உகந்தவர்களாக, அவர் வகுத்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். அப்பொழுதுதான் அப்பணி நிறைகுடமாகத் திகழும். நம்மையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றி வாழ வேண்டிய நிலை ஏற்படாது. 

நானும் மனிதன் தானே? எனக்குள் பந்த பாசம் இருக்க்க்கூடாதா என கேட்பவர்கள் நிச்சயம் இந்த குருத்துவ வாழ்விற்கு வரவே கூடாது. குருக்களின் பார்வை இயேசுவை நோக்கியே இருக்க வேண்டும். அவர்களது சொந்தமும்,  பந்தமும் இயேசு ஒருவரே.  அவர்களது உலக வாழ்வு தாமரை இலை தண்ணீர் போல் இருக்க வேண்டும். இயேசுவின் மேய்ப்புப்பணிக்கு தம்மை அர்ப்பணித்தவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்ககூடாது. ஆதலால் குருத்துவப் பயிற்சி என்பது நெருப்பின் மேல் நடப்பதுபோல்.  இயேசுவுக்கு சாட்சியாய் வாழ, தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட ஆடுகளை நன்முறையில் மேய்த்து உரியவரிடம் ஒப்படைக்க, புனிதனாக வாழ குருத்துவப் பயிற்சி மிகவும் தேவை முழுமையான பயிற்சியைப் பெற்றவர்கள் தான் வெற்றிக் கனிகளை பெற முடியும்.


குறிக்கோள்

இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, குருத்துவ பயிற்சியில் ஈடுபட இருப்போர், வாழ்நாளெல்லாம் இப்பணியை ஆற்ற இருக்கம் இவர்கள், சிறந்த இலட்சியத்தோடு, நல்ல குறிக்கோளுடன் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
“வெள்ளத்தளைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு” நீர்ப்பூக்களின்தாளின் (தண்டுகள்) நீளம் நீர்மட்டத்திற்கு ஏற்ப அமையும் அதுபோல மக்களின் உள்ளத்தின் எண்ணத்திற்கு உயர்ச்சி இருக்கும். உயர்ந்த குறிக்கோளுடன் செயல் பட்டால் மேற்கொண்ட பணிசிறப்படையும்.

குறிக்கோள் என்பது ஒரு மரத்தின் ஆணிவேர் போன்றது, பூமியில் ஆணிவேர் எவ்வளவு ஆழம் செல்கின்றதோ, பூமியில் ஆணிவேர் எவ்வளவு ஆழம் செல்கின்றதோ. அவ்வளவிற்கு பூமியில் மேல் உள்ள மரம் உறுதியாய் செழித்து, தழைத்து, வளர்ந்து பலன் கொடுக்கும். எந்த புயலும் அதை தாக்காது. அதைப்போலவே சிறந்த குறிக்கோளுடன் குரத்துவப்பணியை மேற்கொள்ளும் போது, அப்பணி உள்றாய், தூறாய் பெருகி பலன் கொடுக்கும்.

சிறுவன் இயேசு 12 வயதில் எருசnலுமில் காணாமல் போய். பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, மரியாள் அவரை நோக்கி. ‘மகனே ஏன் இப்படிச் செய்தாய்’ என்று (லூக் 248.49) கேட்க அவர் “ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்ற அருத்தமாகச் கூறினார். பன்னிரண்டு வயதே நிரம்பிய சிறுவன் இவ்வாறு கூறக்காரணம்: இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற இப்பூமிக்கு வந்த அவர், அதை நிறைவேற்ற அப்பொழுதே முடிவெடுத்த செயல்படத் தொடங்கி விட்டார். எதற்காக், இறைவனால் அனுப்பட்டடாரோ, அவர் எள்ளளவு கூட தவறவில்லை. சிலுவை மரணத்தை ஏற்கும் வரையிலும் இறைவனின் சித்தப்படியே நடந்தார்.

ஆண்டவர் மோசேயிடம் ‘நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது. தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர் என்றார். ஆம், ஆண்டவர் முதலில் நம்மிடம் எதிர்பபார்ப்பது தூய்மை. உடல்தூய்மை நீரால் அமையும். ஆனால் உள்ளத்தூய்மை வாய்மையால் காணப்படும். உள்ளத்தூய்மையையே ஆண்டவர் விரும்புகிறார். நம் உடலில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செலி ஆகிய ஐந்து புலன்களுமே, நம்மை பாவத்திற்க அழைத்துச் செல்லும் கருவிகளாகும். இவற்றை அடக்கி வாழ நாம் பயிற்சி எடுக்க வேண்டும். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள் தான். வாழ்ந்த காலத்தில் எப்படி வாழ்ந்தார்? உண்பதும், உறங்குவதுமாக அவர் காலத்தைக் கழிக்கவில்லை.

மக்களுக்க நற்செய்தியைப் போதித்தார். நோயாளர்களைக் குண்படுத்தினார். மற்ற நேரங்களில் எல்லாம் ஜெபம் செய்தார். குருத்துவ பணியை ஏற்க இருப்போர் இதையே முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். தனியாகச் சென்று இறைவனிடம் பேசவேண்டும்.இறைவார்த்தைகளை ஊன்றிப்படித்து, இறைவன் நமக்கு கடும் கட்டளைகளை கேட்டு அதன்படி நடக்க முன்வரவேண்டும்

குறிக்கோள் அச்சாணி போன்றது. அந்த ஆணி சக்கரத்தோடு பொருத்தி அழுத்தமாக இருந்தால்தான் வண்டி ஓடும். அதைப்போலவே நல்ல பல குறிக்கோள்களை மனதில் பதியவைத்து செயல்படும் போது நம்பணி நிறைவாய், செல்ல வேண்டிய திசைநோக்கி செல்லும். இன்றேல் அச்சாணி இல்லாத வண்டிபோல் கவிழ்ந்துவிடும். நாம் இயேசுகிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பவர். இயேசுவின் திருவுளத்தை நிறைவேற்பவர் என்ற எண்ணம் குரக்கள் உள்ளத்தில் இருந்த கொண்டேயிருக்க வேண்டும். அப்போழுதான் பாவநாட்டங்கள் அவர்கள் உள்ளத்தில் எழாது. உலகம் பிறந்தது நமக்காக என்று உலக இச்சைகளில் மனம் செல்லாது.

உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவராய் இருங்கள். ஏனெனில் நான் தூயவன் என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

தூயவராக வாழ்வது எப்படி, மனதில் குற்றமில்லாமல் வாழ்வது, மனக்குற்றங்கள் என வள்ளுவன் குறிப்பிடுவன அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் ஆகும். இந்த பொறாமை, ஆசை, கோபம் கடுஞ்சொல் இவைகள்தான். எல்லாப்பாவங்களுக்கும் விளைநிலம். உலகவாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவைகள் ஏற்படலாம். ஆனால் உலகவாழ்வைத் துறந்து இறைப்பணிக்கு தம்மை அர்பணிக்கும் குருக்களுக்கு இந்த நான்கு குற்றங்களும் நெருங்கவே கூடாது. குருக்களுக்கு தந்தை, தாய், மனைவி, மக்கள், என்று யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களுக்காக உழைக்கவேண்டும் என்ற திட்டமும் இல்லை. அவர்களும் இவர்களுக்காக வாழவேண்டிய அவசியம் இல்லை. இவர்களும் அவர்களுக்காக வாழவேண்டிய உலகில் உள்ள அனைவருமே இவர்களின் குடும்பத்தினர்தான் அவசியம் இல்லை. ஆகவே இந்த மனக்குற்றங்கள் இன்றி வாழ முறய்சி செய்தால் கூடாதா? கூடும், தன்னம்பிக்கையோடு, தூய ஆவியின் அருளோடு, ஓரடி எடுத்து வைத்து, இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டால், பெற்ற தகப்பன் தன் குழந்தையை கைநழுவாது பத்திரமாக அழைத்துச் செல்வதுபோல் இறைமகன் இயேசுவும், இறுதிவரை அழைத்துச்செல்வார் என்ற நம்பிக்கை ஒவ்வொரு குருமாணவனுக்கும் இருக்க வேண்டும். இறைவன் ஆளைப்பார்த்து அல்ல அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குபவர்.

புனித பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதும்போது பந்தயத்தில் ஓடுபவர் பலராயினும் பரிசுபெறுபவர் ஒருவரே தன்னடக்க பயிற்சி அழிவற்ற வெற்றிவாகை சூடும் நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். பிறருக்கு நற்செய்தி என்உடலை அடக்கி கட்டுப்படுத்துகிறேன் என்கிறார். தன்னடக்கத்தை வாழ்வின் குறிக்கோளாகப் பேசுகிறார். ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் பகிர்ந்தளித்த கொடையின்படியும், அவர்விடுத்த அழைப்பின்படியும் வாழ முயற்சிக்க வேண்டும். உலகில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருப்பினும் ஒருசிலருக்கு மட்டுமே இறைஅழைத்தல் விடுக்கப்பட்டுள்ளது. காரணம் கடவுளின் அருள் அவர்களுக்கு மிகுதியாக கிடைத்துள்ளது.

ஆதலால் சிறந்த குறிக்கோளோடு இப்பணியில் ஈடுபட்டால், அது ஆழமாய்த்தோண்டி  பாறைமீது அடித்தளம் அமைத்து, வீடுகட்டிய ஒருவருக்கு ஒப்பாகும். வெள்ளம் பெருக்கெடுத்து அந்த வீட்டின் மேல் மோதினாலும் வீடு அசையாது. ஆனால் குறிக்கோளின்று உள்ளொன்றும், புறமொன்றுமாக வாழ்ந்தால் அது மணல்மீது கட்டிய வீட்டிற்குச்சமமாகும். நீர் பெருக்கெடுத்து வீட்டின் மேல் மோதிய உடனே, மணல் கரைந்து வீடு விழுந்து அழிந்துவிடும். குருத்துவவாழ்வும் அதைப்போன்றதுதான்.

கடவுள் நமக்கு முன்னே நன்மையும், தீமையும் வைத்துள்ளார் எதுதேவையோ, அவற்றை எடுத்துக்கொள்ளும் சுதந்தரத்தையும் கொடுத்துள்ளார். ஞானம் நிறைந்த ஒருவன். இனிக்கும் கனிகளை விட்டு விட்டு, கசப்பான எட்டிக்காயை எடுத்து உன்ன மாட்டான். ஆதலால் எந்த சூழ்நிலையிலும் இறைவனின் கட்டளையிலிருந்து வழுவாது, இறைவன் எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாரோ, அந்த குருத்துவப்பணியை என் உயிர் உள்ளவரை பிரமாணிக்கமாய் கடைப்பிடிப்பேன் என்ற வைரநெஞ்சத்தோடு ஈடுபட்டு, குருத்துவப்பணியை புனிதத்தோடு ஆற்ற தூய ஆவியாரின் துணையை நாடி செயல்பட வேண்டும்.

அன்பு உறவில்

இறைஅழைத்தலை ஏற்று, பல்வேறு குறிக்கோளுடன் குருத்துவபயிற்சியை மேற்கொள்ளும் மாணவர், தன்னுள் வளர்த்துக் கொள்ளும் நற்பண்புகளில் தலைசிறந்து அன்பு. தன்னைப் படைத்த கடவுளிடமும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களிடமும் கொள்ளும் அன்பு.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” தம் உயிரையை பிறருக்குக் கொடுக்கும் உத்தமர்கள்தான் உண்மையான அன்புடையோர் ஆவர். இறைவன், பாவசேற்றிலே மூழ்கிக் கெலாண்டிருந்த மக்களை மீட்க தன் ஒரேமகனான் இயேசுவை உலகிற்கு அனுப்பியது, இறைவன் தான் படைத்த மக்கள் மீது கொண்ட அன்புதான் அந்த மக்களை மீட்க தன் உயிரையே சிலுவையில் கொடுத்தாரே இறைமகன் இயேசு, அந்த அன்பு கல்வாரி அன்பு நமக்குக் கற்பிக்கும் பாடம்.



-விசயவல்லி
ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை
திரு இருதய மருத்துவமனை
கும்பகோணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக