திருச்சிலுவைப் பாதை பாடல்


எல்லோரும்:
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
1. பழிகளைப் சுமத்திப் பரிகசித்தார் - உயிர்
    பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்

2. தாளாச் சிலுவையைச் சுமக்க வைத்தார் - உம்மை
    மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
    எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
    தாங்கிய அன்னைத் துயருற்றாள்

5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
    வருத்தினார் தன்னை உம்மோடு

6. நிலையாய்ப் பதிந்தது உம் வதனம் - அன்பின்
   விலையாய் மாதின் சிறு துணியில்

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
    சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
    மொழி நீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
    ஊன்றி நடந்திட மெய் நொந்தீர்

10. உடைகள் களைந்திட உமை தந்தீர் - ரத்த
     மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

11. பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
      தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12. இன்னுயிர் அகன்றது உமைவிட்டு - பூமி
      இருளினில் ஆழ்ந்தது ஒளி கெட்டு

13. துயருற்றுத் துடித்தார் உளம் நொந்து - அன்னை
      உயிரற்ற உடலினை மடி சுமந்து

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
     அடங்கிய கல்லறை உமதன்று

15. முன்னர் பன்முறை உரைத்தது போல் - நீர்
     மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்

1 கருத்து:

  1. அன்புள்ள web owner அவர்களுக்கு..,
    கிறிஸ்துவின் அன்பின் வணக்கம். என்னுடைய பெயர் ANTONY RAJA.Cr. எனக்கு சிலுவைப்பாதை பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம். சிலுவைப்பாதை பாடல்கள் எந்த வெப் சைட்டில் இருந்தாலும் அதை தேடி கண்டுபிடித்து கேட்டுவிடுவேன்.
    தங்களிடம் ''எனக்காக இறைவா எனக்காக
    இடர்பட வந்தீர் எனக்காக mp3'''
    இருப்பின் என்னுடைய மெயில் முகவரிக்கு அனுப்ப இயன்றால் அனுப்புமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு