பொதுக்காலம் 7 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 19-02-2012


முன்னுரை:  இறை இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டவர் இயேசுவிடம் சென்றால் வேண்டியது கிடைக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு முடக்குவாதமுற்ற மனிதனை தன்னிடம் கொண்டுவந்ததை கண்ட இயேசு அவனைக் குணப்படுத்துகிறார். மிகுந்த நம்பிக்கையோடும், தோழமை உணர்வோடும் பிணியாளரைத் தூக்கி வந்த நண்பர்களை போன்று இருந்தால் இன்றும் அதிகமாக நம்பிக்கை, விசுவாசம் கொண்டு பிறரை அன்பு செய்ய வரம் வேண்டுவோம். உள்ளத்திலே பொறாமை, தீய எண்ணம் ஆகியவைகளை கொண்டு வெளியில் நடக்கும் நன்மைகளை தீமையாகப் பார்த்துப் பிளவுகளை ஏற்படுத்துகின்ற மறைநூல் அறிஞரை போன்று இருந்தோமென்றால் இறைவன் நம் அனைவரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:  நம் முன்னோரின் கடவுள் பழிவாங்குபவராகவும், தண்டிக்ககூடியவராகவும் இல்லை மாறாக பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வதுபோல அவர் நம் பாவங்களை மன்னித்து புது வாழ்வை அருள்வார் என்று இறைவாக்கினர் எசாயாவிடம் கடவுள் கூறுவதை வாசிக்க கேட்போம்.
எசாயா நூலிலிருந்து வாசகம் (எசாயா43:18-19,21-22,24-25)

முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்;இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்;இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர். ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே! பணம் கொடுத்து நீ எனக்கென்று நறுமணப்படையல் வாங்கவில்லை; உன் பலிகளின் கொழுப்பால் என்னை நிறைவு செய்யவில்லை; மாறாக, உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்; உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய். நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி என்று மொழிந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, ஒரே நேரத்தில் ஆம் என்றும் இல்லையென்றும் பேசவில்லை. அதேப்போன்று தான் கடவுளின் ஊழியனாகிய நானும் என் உடன் ஊழியர்களும் இருந்தோம். ஆகவே நீங்களும் உண்மைக்கு சான்று பகர்ந்து கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் உறவை உறுதிப்படுத்தி தூய ஆவியை பெற்றுக்கொள்ள நம்மை நாமே தயாராக்குவோம் என்று புனித பவுலடியார் கூறுவதை வாசிக்க கேட்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் (2கொரி. 1:18-21)

நான் ஒரே நேரத்தில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் "ஆம் " என்றும் "இல்லை " என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் "ஆம் " என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் "ஆம் " வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக "ஆமென் " எனச் சொல்லுகிறோம். கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (2:1-12)

சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்றார்.அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு கண்ணுவதை இயேசு தமமுள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் " என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ "என்றார்.அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே " என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அன்பு தந்தையே எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும்  திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் மக்களை சாமாதானத்தின் கருவிகளாக மாற்றி நம்பிக்கையின் ஒளியில் வழிநடத்தி இறையரசைப் பரப்பிட தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று மொழிந்த இறைவனே! எம் ஊரில் உள்ள மக்கள் ஏதாவது ஒருவிதத்தில் பாவம் செய்து உம்மை விட்டு விளகி சென்றிருக்கும் அவர்களை மன்னித்து உம்பிள்ளைகளாக வாழ்ந்து உமக்கு பெருமைச்சேர்க்க வேண்டிய அருளைத்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும்,வறுமையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. நம்பிக்கையோடு வந்த அந்த முடக்குவாதமுற்ற மனிதனை குணப்படுத்தியது போல என் பங்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை ஆசிர்வதித்து அவர்கள் நம்பிக்கையோடு எதிர்கொள்ள இருக்கின்ற அரசு பொதுத்தேர்வினை சிறந்த முறையில் செய்து நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைந்து பிறருக்கு உதவிசெய்து வாழ வேண்டிய அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக