பெரிய வியாழன் (05.04.2012)


சடங்கிற்குத் தேவையானவை:

கோவில் முன்புறம்: திரு உடைகள் (மஞ்சள்) தூபம், சாம்பிராணி, மெழுகு திரிகள், திருச் சிலுவை, பன்னிரெண்டு ஆண்கள்,  மேசை,  வெள்ளைத் துணி, திருப்பலிப் பாத்திரம் இரசம், அப்பம்,  மரமணி. 
பீடம்திருப்பலிப் புத்தகம், மெழுகுதிரி, பீட அலங்காரம் 
(வழக்கம்போல் அமைதல் வேண்டும்)

பாதம் கழுவும் சடங்கிற்கு (சிறிய மேசையில்): குவளையில் தண்ணீர், பெரிய பாத்திரம், துண்டு, சோப்பு, இடுப்பில் கட்ட துணி, பிரெட் (12),  மரமணி, கைமணி.

காணிக்கை மேசை: இரண்டு நாளுக்கு தேவையான திருஅப்பம், வழக்கமான பிற பொருட்கள் இருத்தல் வேண்டும். 

நற்கருணை ஆராதனைக்கு: திருமேனிதுகில், மெழுகுதிரி, தூபம், சிறப்பு பீடம் அலங்கரிக்கப்பட வேண்டும் (திருப்பலி துவங்குமுன் நற்கருணைப் பேழை வெறுமையாய் இருக்க வேண்டும். 

முன்னுரை: உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று பறைசாற்றிய இயேசு, பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே என்று தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி, இறையரசுப் பணிக்குச்  சான்று பகர்ந்து, தன் மீட்புப் பணி தரணியில், திருத்தூதர்கள் வழி தொடர்ந்து நீடிக்கவும், அருட்சாதனங்களின் வழி அருளை அளவில்லாமல் ஆன்மாக்களின் மீது பொழியவும், விண்ணகம் நோக்கிய பயணத்தில் இருக்கும் நமக்கு, வழிப்பயணக் கொடையாகவும், இன்சுவை உணவாகவும், தன் உடலையும், இரத்தத்தையும் தானமாய் கொடுத்து, நற்கருணை என்ற திருவருட்சாதனத்தை ஏற்படுத்தி, நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள் என்று அன்புக்கட்டளை வழங்கிய நன்னாள் இன்று. ஆம் இன்று திருப்பாடுகளின் பெரிய வியாழன். இயேசுவின் பணிவு அவரது அன்பு பணிக்கு பெருமை சேர்த்ததுபோல, வாழ்வுக்கு அவரது கல்வாரி மதிப்பீடுகள் அடித்தளமாய் அமைய இன்றைய வழிபாட்டிலே மன்றாடுவோம்.

இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளை கொண்டுள்ளது.
  1. வார்த்தை வழிபாடு
  2. பாதம் கழுவும் சடங்கு
  3. நற்கருணை வழிபாடு 
  4. நற்கருணை இடமாற்றப் பவனி
எனவே இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பொருளுணர்ந்து பக்தியோடு பங்கெடுப்போம். 
(உன்னதங்களிலே கீதம் பாடும் போது அனைத்து மணிகளும் ஒலிக்கப்பட வேண்டும். இதுமுதல் பாஸ்கா திருவிழிப்பு வரை மணிகள் ஒலிக்கலாகாது.)

1. இறைவார்த்தை வழிபாடு
முதல் வாசகம் (விப 12:  1-8;  11-14):  பாஸ்கா என்பது கடந்து செல்லுதல் எனப் பொருள்படும். இறைவன் தான் தேர்ந்தெடுத்த மக்களை வாழ்விலிருந்து மீட்டு, செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றார். அதுபோலவே பாவம் நிறைந்த இந்த உலக நிலையைக் கடந்து, பரிசுத்த விண்ணக வாழ்வை அடைய முயற்சிப்போம் என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்கு செவி கொடுப்போம். 

இரண்டாம் வாசகம் ( 1 கொரி 11:  23-26): நம் அனைவர் மேலும் கொண்ட அன்பினால் தன்னையே தியாகமாக கொடுத்த கிறிஸ்துவின் மரணத்தை அறிக்கையிடுவதுதான் திருப்பலி. எனவே நமது வாழ்வு ஆதரவற்றோருக்கு, துன்பப்படுவோருக்கு, துயருறுவோருக்கு அன்பை கொடுப்பதாக, ஆதரவு தருவதாக இருக்கிறதா? என சிந்திக்க அழைக்கும் வாசகத்திற்கு செவி கொடுப்போம். 

நற்செய்தி வாசகம் (யோவா 13: 1-15): பாதங்கள் கழுவுதல் என்பது அடிமைகள் அல்லது பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலை. ஆனால் இறை அரசை கட்டியயழுப்ப வந்த இறைமகன் இயேசு, தனது திருத்தூதர்களின் பாதங்களை கழுவி, தான் ஒரு பணியாளனாக செயல்படுகிறேன், எனவே நீங்களும் பணியாளர்களாக செயல்படுங்கள் என அறிவுறுத்தும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்போம். 

2. பாதம் கழுவும் சடங்கு
முன்னுரை: யூத வழக்கத்தில் வெளியே சென்ற ஒருவர் மீண்டும் வீட்டிற்குள் நுழையும்போது தன் பாதங்களைக் கழுவுவது வழக்கம். அதில் இயேசு முற்றிலும் மாறுபட்டு பணிவிடை பெற அன்று, பணிவிடை புரியவே வந்தேன் என்றும்,  பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் பணியாளனாய் இருக்கட்டும் என்றும் நீங்களும் இவ்வாறே செய்யுங்கள் என்றும் சொல்லி,  தம் அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவிய பணிவான பணியை, நிகழ்வை, இப்போது குருவானவர் இங்கு அமர்ந்திருக்கும் பன்னிருவரின் பாதங்களை கழுவி நமக்கு பாடமாக்குவார். இந்த நிகழ்வு வெறுமனே ஒரு சடங்காக மட்டுமல்ல மாறாக, நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்  தாழ்ச்சியுள்ள  வாழ்வு வாழ பக்தி நிறைந்த உணர்வோடு இதில் பங்கெடுப்போம். (விசுவாச அறிக்கை இல்லை).

இறைமக்களின் வேண்டல்கள் (பாதம் கழுவும் சடங்கு முடிந்தவுடன்)
1. வார்த்தையான இறைவனே! எம் திருச்சபையின் ஊழியர்கள் உம் வார்த்தையின் வழியில் பயணித்து இறைமக்களை அன்பின் வழியிலும், ஒளியிலும் வழிநடத்தவும், உமது வழியைப் பின்பற்றி எம் திருச்சபை அகிலமெங்கும் தழைத்தோங்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
2. அன்பின் இறைவா! எம் தலைவர்கள் தங்களின் தலைமைப் பொறுப்பினையும், கடமையினையும் உணரவும், மக்களை செம்மையாகவும் நீதி, நியாயம், மனிதமாண்பு, ஆகிய நல்ல நெறிகளுடன் வழிநடத்தவும், தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
3. ஒளியாம் இறைவா! உம்மையும், உம் வார்த்தைகளையும் பின்பற்றும் நாங்கள் உமது அன்பையும் பகிர்வையும் தியாகத்தையும் எங்கள் வாழ்வில் பிரதிபலிக்கவும் எங்கள் அன்றாட வாழ்க்கையில் உம்மை மையமாக வைத்து உம் அன்பின் மக்களாக வாழத் தேவையான அருளைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நித்திய குருவான இறைவா! உம் அடிச்சுவடுகளைப்  பின் தொடர்ந்து உமது பணியைச் செய்ய தங்களையே அர்ப்பணித்திருக்கின்ற குருக்களுக்காக வேண்டுகிறோம். நீர் குருத்துவத்தை ஏற்படுத்தியிருக்கின்ற இந்நாளில் அவர்கள், தங்களின் பணிவாழ்வில் சந்திக்கும் அனைத்துத் துன்பங்களையும், பொறுமையுடனும் இன்முகத்துடனும் ஏற்றுகொள்ளத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. நற்கருணை வழிபாடு

காணிக்கை பாடல்: அன்பும் நட்பும் எங்குள்ளதோ... 
(காணிக்கை மன்றாட்டுடன் திருப்பலி தொடரும், 
நன்றி மன்றாட்டு முடிந்த பிறகு நற்கருணை இடமாற்றப் பவனி)

4. நற்கருணை இடமாற்றப் பவனி
முன்னுரை: இயேசு பாடுகள் படுமுன் கெத்ஸமனி தோட்டத்தில், தனிமையாக தன் துயரத்தை தந்தையாம் இறைவனிடம் வெளிப்படுத்தியதை நினைவு கூறுகிறோம். இப்போது நற்கருணை நாதர், தலைமைப் பீடத்திலிருந்து தனியாக அலங்கரிக்கப்பட்ட இடத்திற்குப் பவனியாக எடுத்துச் செல்லப்படுவார். அவ்வாறு எடுத்துச் செல்லும்போது அனைவரும் முழந்தாள் பணிந்து நமது வணக்கத்தை செலுத்துவோம். தனிமையில் தனது துன்பநிலையை எண்ணி துயரப்படும் நம் இயேசுவோடு நாமும் விழித்திருந்து செபிப்போம்.

பாடல்: பாடுவாய் என் நாவே... இறுதியாக மாண்புயர் கீதம்..
(பின்பு சிலுவைகள் அனைத்தும் திரையிடப்பட வேண்டும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக