சிலுவைப் பாதை -1

பசுமையான பாதைகள்

முன்னுரை

மானுடமே!
நீ விரித்த பாவச் சிறகு
                ஒரு மனிதனின் கழுத்தைச் சிரச் சேதம் செய்த்து.
நீ கடந்த இருட்டு
                ஒரு மனிதனுக்கு கல்லறை கட்டியது.
நீ மீட்டிய அபசுரங்கள்
                ஒரு சிம்மாசனம் சிதைக்கப்பட்டது.
உன் முள்முடிகளுக்காய்
                ஒரு மகுடம் பறிக்கப்பட்டது.
உன் முகம் உமிழ் பட்டுவிடாமல் இருக்க
                ஒரு முகம் குப்பைத் தொட்டியானது
உன் சிலுவைகளுக்காய்
                தான் இந்த சிலுவைப்பாதை...!

ஒரு நிமிடம் மௌனமாய் சிந்திப்போம்

இந்த குடிசைப் பற்றி எரிய
                நானும் ஒரு தீக்குச்சி கிழித்துப் போட்டேனா...?
இந்த சமுத்திரம் வற்றிப் போக
                நானும் ஒரு கிளிஞ்சல் நீரை வெளியேற்றினேனா...?
இந்த பூவை அழிக்க
                நானும் ஒரு பூகம்பத்தை உற்பத்தி செய்தேனா...?

சிந்திப்போம்....
யேசுவின் பாதை கல்வாரிப்பாதை...
யேசுவின் வாழ்வு போராட்ட வாழ்வு...
யேசுவின் மரணம் ஈசனின் மரணம்...
வாருங்கள் அதனை வாழ்ந்து பார்ப்போம்.

முதல் நிலை

  • படைத்தவன் படைப்புக்குத் தீர்ப்பு வழங்குவது முறை. ஆனால், இங்கு அந்த நிலை மாறி மானிடகுலம் தன்னைப்படைத்த இறைமகன் இயேசுவுக்கே தீர்ப்பு வழங்குகிறது.

இந்த தீர்ப்பு அநீதி நிறைந்த தீர்ப்பு, அதிகாரமான தீர்ப்பு, நீதி நேர்மையற்ற தீர்ப்பு பாரபட்சமான தீர்ப்பு அன்று இயேசுவை இஸ்ரேயல் மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.
யூத மதகுருக்களுக்கும் பரிசேயர்களுக்கும் பயந்து இயேசுவை சாவுக்குத் தீர்ப்பிட்டான் பிலாத்து. அவன் மட்டுமா? தவறு என்று தெரிந்தும் எல்லோரும் செய்கிறார்களே என்று கூட்டத்தையே சேர்த்து கொள்ளும்போது, தன்மானத்தை காக்க பொய் சொல்லும் போது, தற்பெருமையில் தவறிழைக்கும்போது, சந்தேக குணத்தால் அடுத்தவரின் மனதை 
புண்படுத்தும்போது நாமுந்தான் இயேசுவைத் தீர்ப்பிடுகிறோம். ஆகவே நமது வாழ்வில் மற்றவர்களால் நமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இன்னல்கள் அனைத்தையும் இயேசுவின் சிலுவையின் ஒரு சில பகுதிகள் என உணர்ந்து அவைகளை முழுமனதுடன் ஏற்று இறைவழியில் நடப்போம். மனிதாபிமானம் கொண்ட இயேசு பேசுகிறார்:
தீர்ப்பிட வேண்டாம் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டாம் மன்னியுங்கள் நீங்களும் மன்னிக்கப் படுவீர்கள்.
சிந்தனை:
இவையெல்லாம் யாருக்காக? எண்ணிப்பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். பாவத்தின் சம்பளம் சாவு. அந்த சம்பளத்துக்குரியவர் நாம் தான். நம்மை மீட்கும் பொருட்டே அந்த சாவை தானே முன் வந்து வாங்கிக் கொண்டார் இயேசு.

செபம்:
அமைதியின் தெய்வமே! எங்கள் வாழ்வில் மற்றவர்களால் இழைக்கப்படும் சிறு சிறு துன்பங்களும் நீர் சுமந்த சிலுவையின் பாகங்களே என்பதை உணர்ந்து அவைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள உமது அருளைத்தாரும்...ஆமென்.

2_ம் நிலை

  • ஆண்டவனின் தோளில் அவமானத்தின் சின்னம்

பாரச் சிலுவையை பரிதாபமாகச் சுமக்கும் இயேசுவை பாருங்கள். இந்த சிலுவை பழங்காலத்தில் அவமானத்தின் சின்னமாக கருதப்பட்டது. பலராலும் இழிவாக கருதி ஒதுக்கப்பட்டது. ஆனால்! இயேசு இந்த சிலுவையைச் சுமந்த பிறகுதான் அதற்கு மேலும் பெருமை சேர்கிறது. அது அவமானத்தின் சின்னத்திலிருந்து புனித சின்னமாக மாற்றப்படுகிறது. அவரது வாழ்வில் நாமும் முழுமை பெற நம்மையே நாம் அவரோடு ஒன்றிக்க சிலுவைகள் சுமத்தப்பட வேண்டும். எனவே தான் அன்று இயேசு "என்னை பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து தன் சிலுவையை சுமந்து கொண்டு என்னை பின் செல்லட்டும்" என்று தெளிவாக உறுதியுடன் கூறினார் எனவே இயேசுவின் பொறுமையும் சகிப்புத்தன்மையையும் நமக்கு வர அவரிடமே வேண்டுவோம். தோளில் நிறுத்திய சிலுவையோடு தோழமையை நோக்கிப் பேசுகிறார் இயேசு:
பழி சுமத்தாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் உன் நுகத்தை அகற்றாது பிறர் அகத்தை புரட்டாதீர்கள்.
சிந்தனை:
இயேசுவை போல தியாகம் நம்மிடமில்லை. ஏனெனில் பிறர்நலம் நம்மில் இல்லை சுயநலம் இருள்மயமாக இருப்பதால் அடுத்தவர் நம் கண்களில் தெரிவதில்லை. எனவே தான் வேதனைகளும் சோதனைகளும் நம்மில் விதவிதமாய் விலாசம் தேடுகின்றன.

செபம்:
எங்களன்பு இறைமகனே! உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் எங்களது சிலுவைகளைச் சுமந்து உம்மைப் பின் தொடர்ந்து உமக்கு சான்று பகரத் தேவையான அருள் வரம் தந்தருளும்!

3 _ம் நிலை

  • மண்ணுக்கு கிடைத்த முதல் முத்தம்

வாழ்வின் தொடர் பயணத்தில் எத்தனை இடறல்கள். விழுவதும் எழுவதும் வாழ்வின் நியதி. இது இயற்கையின் விதி. தோல்வி வெற்றிக்கு அறிகுறி. இது வாழ்வில் நாம் விழுந்த போது மீண்டும் எழுந்து நடந்தார்.  இது காண்பது வரலாறு காட்டும் உண்மை.

ஆனால் துன்பங்களை ஏற்க மறுப்பதும் தோல்விகளைக் கண்டு துவண்டு போவதும் மனித இயல்பு இதோ இயேசுவின் வார்த்தை இன்றும் ஒலிக்கிறது வாழ்வில் விழுந்துவிட்டாயா? ''பயப்படாதே எழுந்து நட''என கூறுகிறார். உன் வாழ்க்கைச் சுமையை தூக்கிக் கொண்டு எல்லா சுமைகளையும் சுமந்து கொண்டு எழுந்து நட என்று கூறுகிறார். வாழ்வின் எல்லா சுமைகளையும் சுமந்து வெற்றிகான வேண்டும் என்பது தான் இறைவனின் விருப்பம். தேர்வில் தோல்வியா? தேர்தலில் தோல்வியா? நண்பர்கள் கை விட்டுவிட்டார்களா? ஆகவே மகனே! மகளே! அகந்தை, அவநம்பிக்கை, இறுமாப்பு, வீண் பிடிவாதம், பலவீனம், தாழ்வு மனப்பான்மை, வீண் பெருமை, பொறாமை போன்ற அனைத்திலுருந்தும் எழுந்து நட. எனது மன்னிப்பும் அன்பும் உன்னை வழிநடத்தும். இயேசு விழுந்த நிலையிலும் எழுந்து சொன்னார்:
தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள் உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி திடம் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்.
சிந்தனை:
ஆன்மா பலம் வாய்ந்தது தான் ஆனால் ஊனுடலோ வலுவற்றது. நீரில் விழுந்தவனைக் காப்பாற்ற நாமும் நீரில் தானே விழ வேண்டும்.

செபம்:
எல்லாம் வல்ல இறைவா எங்கள் வாழ்வில் நாங்கள் முதல்முறை விழுந்தவுடன் சோர்ந்துப் போகாமல் மீண்டும் எழுந்து பயணத்தை தொடர பலவீனங்களிலிருந்து விடுதலை பெற அருள் தாரும்! ஆமென்.

4-ம் நிலை

  • கண்ணிரை தாங்கும் கருப்பை

பணியில் தன்னை அர்ப்பணிக்கும் தன் மகனின் துன்ப வேதனையில் தியாக வேள்வியில் பங்கேற்கும் தாய் இதோ கருவிலே சுமந்து, பிறப்பில் காத்து ஏழ்மையில் வளர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காக சென்று வா மகனே வென்று வா என்று வழியனுப்பி சிலுவை பயணத்தில் தொடந்து வந்து தன் மகனின் இலட்சிய பயணத்தில் அவரின் அன்னை துணை வருகிறாள். அன்னை மரியாள் வேதனையோடு கண்ணீர் வடித்தாலும் கடவுள் சித்தம் இதுவென மௌனம் சாதிக்கிறாள்.  இதோ உமது அடிமை என்று கடவுளுக்கு அர்ப்பணித்தவளாய் புரியாத துயரங்கள் நமக்கு வரும் போது பிடிக்காத பொருட்களை ஆட்களை விளைவுகளை சந்திக்கும் போது நாமும் சொல்வோம் - இதோ உமது அடிமை, இறைவா ஏற்பாய் என்னை இயேசு மனிதனை சிந்திக்க அழைப்பது:
உன் தாயையும் தந்தையையும் மதித்து கீழ்படிந்து சங்கமித்து இருப்பாயாக
சிந்தனை:

தன் மகன் நோபல் பரிசு பெற்றாலும் தண்டனைப் பெற்றாலும் தூக்கி வாரி தோளில் போட்டுக்கொள்பவர் தான் அன்னை. ஆனால் முதல் ஆசிரியராய் செவிலியராய் இருக்கும் பெற்றோரை நீ படுத்தும் கொடுமையை எண்ணிப்பார்.

செபம்:
தியாக வேள்வியின் சின்னமே இறைவா! இனிவரும் நாளில் நாங்கள் எங்கள் சந்ததிகளை உம்மை போல் உருவாக்க தேவையான அருள் வரங்களைத் தாரும். ஆமென்.

5-ம் நிலை

  • தோள் கொடுக்கும் தோழன்
பத்து பேரும் குணம் பெறவில்லையா? மீதி ஒன்பது பேர் எங்கே? திரும்பி வந்து இறைவனை மகிமைப்படுத்த இந்த அந்நியனைத் தவிர வேறு ஒருவரையும் காணோமே

என்று அந்த அந்நியனைப்பார்த்து இயேசு அன்று கேட்டார். ஆனால் இன்று அதே இயேசு நம்மை பார்த்து என் கேட்கிறார்? என்னை மகிமைபடுத்துவதோடு நின்று விடாமல் உன் சகோதரனையும் நேசி.
சின்னஞ்சிறிய உதவி என் சகோதர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்
என்கிறார். ஆகவே தேவைப்படும் போது மற்றவர்களுக்கு உதவிகள் செய்வோம் அத்துடன் நின்றுவிடாது மற்றவர்கள் துன்பத்தில் பங்கு கொள்வோம்.  ஆகவே நாம் இது நாள் வரைக்கும் கண்ணிருந்தும் குருடர்களாக! காதிருந்தும் செவிடர்களாக! கையிருந்தும் முடவர்களாக! கால் இருந்தும் ஊனர்களாக! வாய் இருந்தும் ஊமையர்களாக! எதையும் தட்டிகேட்கும் உரிமை இருந்தும் உரிமையை இழந்தவர்களாக வாழ்ந்து இருக்கிறோம் அதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். சீமோனை கண்ட இயேசு புன்முறுவலிட்டு சுமக்காத மனிதங்களை நோக்கி:
மனதில் தாழ்ச்சியும் சாந்தமும் கொள்ளுங்கள்.
சிந்தனை:
சின்னஞ்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தாய் என்று சொன்னவர் இயேசு. நீ துனபத்தில் தவறும் சகோதரனாகியா இயேசுவுக்கு எத்தனை முறை உதவியுள்ளாய்?

செபம்:
இறையரசை மண்ணில் பரப்பிய இயேசுவே! உம் மக்களாகிய நாங்கள் உம்மை பின்பற்றி வாழவும், உம் சீடர்களாக மாறவும் பிறருக்கு உதவி செய்யும் இளகிய மனதை தாரும்! ஆமென்.

6-ம் நிலை

  • முகம் துடைக்கும் மலர்க் கொத்து

மாபெரும் குற்றவாளியாக கல்வாரி மலையை வியர்வையும் இரத்தமும் வழிந்தோடுவதை வேடிக்கைப் பார்க்கின்றனர். ஆனால் வெரோக்காள் என்ற பெண் இயேசுவின் முகத்தைத்துடைக்கத் துணிவு கொண்டாள்! பார்ப்பவர்கள் என்ன சொல்வார்களோ? பாவி என்று ஒதுக்கி விடுவார்களோ? பங்கம் என்று இகழ்வார்களோ? என்று அவர் எண்ணவில்லை? எனவே நாம் ஒவ்வொருவரும் அத்தகைய வீரம் பெற்று மற்றவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அநீதிகளை கண்டு வெகுண்டெழுவோம். இயேசு நம்மை பார்த்து பேசுகிறார்:
பகைவனையும் அன்பு செய் எதிர்பவனையும் ஏற்றுக்கொள். தீர்ப்பிட்டவனையும் திருத்திக்கொள்.
சிந்தனை:
ஏழை எளியவர்களிடம் இரக்கம் காட்டுவது எளியது தான் சில நேரங்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடப்பட்டவர் மீதும் சமுக விரோதி என்று தண்டிக்கப்பட்டவர் மீதும் பரிவும், அன்பும் காட்டுவது மட்டும் போதாது. அதைத்தாண்டி மனித நேயமும் தேவை.

செபம்:
அன்பு இறைவா! பெண்களின் உள்ளம் கருணையினால் நிறைந்தது. இது அன்பின் பிறப்பிடம் தியாகத்தின் உறைவிடம் கருணையின் சமுத்திரம் அப்படிப்பட்ட இறை மதிப்பீடுகளை எங்கள் அனைவருக்கும் தந்தருளும். ஆமென்.

7-ம் நிலை

  • இரண்டாம் தடுமாற்றம்

சிலுவையின் பாரம் மேலே உடலை அழுத்த கற்களும் முற்களும் கீழே கால்களின் பாதங்களைத் துளைக்க உடல் இளைக்க கால்கள் சோர நடை தள்ளாட கீழே விழுகின்றார். இயேசுவின் வாழ்க்கைப்பாதையில் இன்னல்கள் துன்பங்கள், வேதனைகள் பல இருப்பினும் மனம் சோரவில்லை. நம்பிக்கை இழக்கவில்லை எழுகின்றார் புத்துயிருடன் நடைபோட்டு இறைவனின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற அவர்தம் பயணத்தை தொடர்கின்றார். ஆகவே நாமும் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் சோகங்களைக் கண்டு சோர்ந்து விடாமல், கஷ்டங்களைக் கண்டு களைத்து விடாமல் அனைத்தையும் முறியடித்து வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடைபோட இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற முன் வருவோம். விழுந்த இயேசு நம்மோடு பேசுகிறார்:
நீங்களும் விழுங்கள் கோணலான மானுடத்தை நேராக்க கேவலமான நடத்தைகளை சீரமைக்க...
சிந்தனை:
புலம், பலவீனம் இரண்டும் கலந்த கலவைதான் மனித உள்ளம்.  பலவீனங்களிலே விழுந்தால் பலம்கொண்டு எழுதல் வேண்டும்.  அதுதான் போராட்டம்.  ஆனால் போராட மறுத்தவனாய் பலவீனங்களின் வேரிலே சாய்ந்து வாழ்வை வீணடித்தது வருந்தத்தக்கது அல்லவா?

செபம்:
இரக்கத்தின் இறைவா! எங்கள் வாழ்வில் வரும் கொடுமைகள் இன்னல்களைக் கண்டு மனம் சோர்ந்து விடாமல் மீண்டும் புத்துயிர் பெற்று உம் திட்டத்தை நிறைவேற்றவும் எங்கள் வாழ்க்கைப் பாதையில் தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் புது முயற்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட அருள் தாரும். ஆமென்.

8-ம் நிலை

  • ஆறுதல் சொல்லும் அபலைகள்.

இயேசுவுக்கான கொடிய பாதையில் ஆறுதல் அளிப்பவர்களாக அங்கே கல்வாரிப் பாதையில் யெருசலேம் பட்டணத்துப் பெண்கள் இயேசுவுக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஏனெனில் அவர்களின் குழந்தைகளை அரவணைத்திருந்த கரம் பற்றியிருப்பது சிலுவை மரத்தை. அந்த அன்புக் கரத்தை துளைக்க இருப்பது கொடூரமான ஆணிகள். இவையனைத்தையும் கண்டு ஆறுதல் அளிக்க வருகின்றார்கள் அந்த பெண்கள். தாங்க முடியாத துன்பத்தில் இருந்தாலும் கூட தன்னை நோக்கி வந்தோருக்கு இயேசு ஆறுதல் அளிக்கிறார். அன்பார்ந்தவர்களே ஆயிரம் துன்பம் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் அதையும் கடந்து நம்மில் எத்தனை பேர் பிறருக்கு ஆறுதல் கூறுகிறோம் என்பதை சிந்திப்போம்.
துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்
என்கிறார் இயேசு.

சிந்தனை:
மனிதமே அழுவதில் பலவகை உண்டு. நிலவுக்காக அழும் விட்டில்களும் உண்டு. நனையும் ஆட்டிற்காக அழும் ஒநாய்களும் உண்டு. உன் கண்ணீர் எந்த வகையைச் சேர்ந்தது? எண்ணிப்பார்.

செபம்:
புதுமைகள் பல பொழிந்து புதுபொலிவாற்றிய புரட்சி நாயகனே இயேசுவே! உம்மைப் போன்று நாங்களும் மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் துன்புறும் போது ஆறுதல் தருபவர்களாக மாற வரம் தாரும்! ஆமென்.

9-ம் நிலை

  • தடை வந்தும் தடைப்படா பயணம்

இயேசு தம்முடைய பாடுகளையும் மரணத்தையும் அவருக்கு ஏற்படவிருக்கும் உயிர்ப்பையும் நன்கு அறிந்திருந்தார். அந்த குறிக்கோளுக்கு அவருடைய ஊன பலவீனங்கள் குறுக்கே நின்றாலும் அவைகளையும் தாண்டி அவரால் எழுந்து நடக்க முடிந்ததற்கு காரணம் அவருடைய இலட்சியமே. நமது வாழ்விலும் ஒரு துணிவு மிக்க இலட்சியம் தேவை. இல்லையெனில் இலட்சியமில்லா வாழ்வு துடுப்பில்லா படகைப் போன்றதாக மாறிவிடும். இறைமகன் இயேசு நம் ஒவ்வொருக்கும் மகனே! மகளே! நீ முயன்றால் உன்னால் முடியாதாது எதுவுமில்லை. கடின உழைப்புக்கு ஈடு இணையேதுமில்லை என்று தனது பாடுகளின் வழியாக சிறப்பான பாதையைக் காண்பித்திருக்கின்றார். கீழே விழுந்த இயேசு உன்னைப் பார்த்து:
நீ விழும் போதெல்லாம் நானும் எழுகிறேன் காரணம் நீ கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கு என்பதற்காய்.
சிந்தனை:
மனிதமே இதோ நீ தடைகள் வரும் போது முடங்கி போன முதுகெலும்பற்ற மனிதனாய் இருந்த தருணங்களை எண்ணிப்பார்.

செபம்:
ஒ இயேசுவே! நாங்கள் அனைவரும் உம்மைப்பின் செல்ல எம்மையே மறுத்து உம் சிலுவையைச் சுமந்துக்கொண்டு உம்மைப்பின் தொடரவும் உம் பொருட்டு எம் உயிரை இழக்கவும் உமக்கு சான்று பகரவும் தேவையான ஆற்றலையும் அருளையும் சக்தியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்தருளும்! ஆமென்.

10-ம் நிலை

  • நிர்வாணம் நிரந்தரம்

கசியும் இரத்த்தோடு ஒட்டியிருந்த அந்த ஆடைகள் கூறும் செய்திகளைக் கேளுங்கள். ஆடையில்லாதவன் அரை மனிதன் என்று நாம் கூறுகிறோம். ஆனால் இயேசு நமக்காகப்பட்ட வேதனைகளால் அவரது அழகான உடல் அடைந்த புண்களை அந்த ஆடைகள் மறைத்து விட்டன! ஆதலால் அது களையப் படுகிறது. ஆக எந்த ஒரு மனிதனும் தனது உயிரை இழக்க துணிந்தாலும் தனது மானத்தை இழக்க விரும்பவும் மாட்டான். அதனை இழக்க முன் வரவும் மாட்டான். ஆனால் இறைமகன் இயேசு அனைத்திற்கும் துணிந்து தனது உயிரைத் தியாகம் செய்கிறார் தன் வாழ்வை முழு மனதுடன் அர்ப்பணிக்கிறார் இங்கே தான் ஒரு மனிதம் மடிகிறது. ஒரு தெய்வீகம் மனிதர்களின் மத்தியில் துடிக்கிறது. ஆதனால் ஏற்படும் கொடிய வேதனை ஒரு பக்கம் அதையும் தாண்டி அவமானம் மற்றொரு பக்கம். இயேசு இவ்வேதனையை யாருக்காகத் தாங்கி கொள்கிறார் தனக்காகவா? இல்லை. நமக்காக நம் சுயவாழ்வுக்காக ஆடையில்லாத ஏழை உள்ளங்களுக்காக உதவுங்கள். அதன் நிமித்தம் சரிந்து விழும் படி கொடுக்கப்படும் என்கிறார் இயேசு.

சிந்தனை:
இயேசுவுக்கு ஏற்பட்ட அவலநிலை உனக்கு வந்தாலும் மதிப்பீடுகளை உனதாக்கி துணிச்சலோடு திணிக்கப்படும் அடக்குமுறைகளை எதிர் கொண்டு என்றும் அவரின் சாட்சிகளாக நிற்க நீங்கள் தயாரா?

செபம்:
எல்லாம் வல்ல இயேசுவே எங்கள் வாழ்வில் பிறருக்காக நாங்கள் அவமானப்படுத்தப்படும் போது உம்மைப் போன்று பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள தேவையான ஆற்றலையும் சக்தியையும் தாரும்! ஆமென்.

11-ம் நிலை

  • ஆணிகளுக்கு ஆண்டவர்

இயேசு சிலுவை சுமந்துக்கொண்டு கொல்கொத்தா என்னும் இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். யூதர்களுக்கு புதுமைகள் பல செய்த கைகளில், புண்கள் ஆற்றிய கைகளில், புண்ணிய வழிகாட்டிய கைகளில் கொடுமையான கோரமான ஆணிகள் துளைக்க அதனால் இயேசு துடிதுடிக்க வேதனையும் துன்பமும் அடைந்தார். அவருடைய ஆறுதலுக்காக யூதர்களின் அரசர் என்ற பலகை தலைக்கு மேல் அறையப்பட்டு பாறையில் உயர்த்தப்பட்டார். தரையை மட்டும் பார்க்க இயேசு விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே பாலமாய் தொங்கி கொண்டிருந்தார். அப்போது அதைப் பார்த்த யூதர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், எள்ளி நகைக்க இயேசு சொல்லொண்ணா துயரம் அனுபவித்து மானிடத்தைப் புனிதமாக்க பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார். 
எங்கே அவமானத்தை சந்திக்கிறயோ அங்கே உன் நிலையைப்பற்றி சிந்திக்கிறாய்.
என்கிறார் இயேசு

சிந்தனை:
மனிதமே எத்தனை ஆணிகளால் இன்றும் இயேசுவை அறைந்து கொண்டிருக்கிறாய்? சாதி, மதம், லஞ்சம், ஊழல், பதவி வெறி, பழித்தூற்றல், வரத்தட்டசனை, தீண்டாமை, வறுமை, ஏற்றத்தாழ்வு, என்று எண்ணற்ற ஆணிகளால் இயேசுவை இன்றும் அறைந்துக்கொண்டிருக்கிறாய்.

செபம்:
இயேசுவே! நாங்களும் உம்மைப்போன்று எம் வாழ்வை மற்றவர்களுக்காக அர்பணித்து உண்மையின் சாட்சிகளாக உமக்கு சான்று பகர வரம் தாரும். ஆமென்.

12-ம் நிலை

  • ஆதவனின் அஸ்தமனம்

நண்பகல் தொடங்கி நாடெங்கும் மூன்று மணிக்கு இருள் உண்டாயிற்று அப்பொழுது இயேசு "எலோயி, எலோயி, லாமா சபக்தானி'' என்று கத்தினார். இதற்கு ''என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்'' என்பது பொருள். சிலுவையும் ஆணிகளும் இயேசுவைக் கொல்லவில்லை. மாறாக மனிதர்களின் பேச்சு அவரைக் கொன்றது.
யாருக்கும் தீங்கு செய்யாத கோரமான சிலுவை இயேசுவைக் கொலை செய்து தன்னைப் புனிதப் படுத்திக்கொண்டது. உயிர்விடும் தறுவாயிலும் கூட தம்மை துன்புறுத்தியவர்களுக்காக மனம்விட்டு தம் தந்தையிடம் மன்னிப்பு கேட்கிறார். இன்று நம்மில் எத்தனைப் பேர் இப்படி இருக்கிறோம் என்று சிந்திப்போம்.
இறந்து தொங்கும் இயேசுவே நாங்களும் உம்மைப்போல் பிறர் சுமையைச் சுமக்க வரம் தாரும்.
சிந்தனை:
மனிதமே! நண்பனுக்காய் உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு வேறொன்றுமில்லை என்றவர். நட்பின் இலக்கணமாய் நாடித்துடிப்பை முடித்துக்கொண்டார். அவருக்காக நீ என்ன செய்துள்ளாய்?

செபம்:
ஆம் தந்தாய், எங்களிடம் இருக்கின்ற சுயநலம் மாறி எங்களை துன்புறுத்துவோருக்காக செபிக்க உம்மை நோக்கி நாள்தோறும் முழு மனதுடன் மன்றாட வரம் தாரும். ஆமென்.

13-ம் நிலை

  • இடி தாங்கும் மடி

அழகுக் குழந்தையாக இயேசுவைத் தனது அன்புக் கரங்களில் ஏந்திய அன்னை மரியாள் இன்று வாடி வதங்கி துவண்டு கிடக்கும் அவரது உடலைத் தாங்கி பிடிக்கிறாள். யாரால் இத்தகைய நிலையைத் தாங்கி கொள்ளமுடியும். யாராலும் முடியாத நிலையைத்தான் அன்னை "தன்னால் முடியுமென்று'' நமக்கு நிரூபித்து காட்டுகிறார். இங்குதான் அவளின் அன்பும், அரவணைப்பும், வீரமும், கடமை, உணர்வும் வெளிப்படுகின்றது. உயிர் பிரிந்தப்பின் மகனின் உடலை வைத்துக்கொண்டு அன்னை முகாரி பாடவில்லை. அதற்கு மாறாக, சிலுவையென்னும் வாளை கையில் எழுந்து தன் மகனின் மீட்புத் திட்டதில் பங்கு கொண்டதைப் போல இறைச்சித்தத்தை நிறைவு செய்கின்றவர்கள், இயேசுவின் தாய் போன்றவர்கள் என்பதை நினைவில் நிறுத்துவோம்.
எக்காரியத்தையும் தொடங்குவது எளிது தொடர்ந்து செயலாற்ற இறைவனின் பலன் தேவை நம்பிக்கையோடு கேளுங்கள் பெற்று கொள்ளுங்கள்
என்கிறார் அன்னை மரியா.

சிந்தனை:
மனிதமே! நீயும் நானும் எத்தனை முறை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தந்தையையும் சொல்லாலும் செயலாலும் புண்படுத்தியிருக்கிறோம். அதற்காய் மனம் வருந்துவோம்.

செபம்:
படைப்பின் பரம்பொருளே! எம் வாழ்விற்க்காக தம் மகனைத் தந்து எங்களுக்கு சான்று பகர்ந்த எங்கள் வியாகுல அன்னையைப் பின்பற்றி வாழ வரம் தாரும். ஆமென்.

14-ம் நிலை

  • கல்லறைக்குள் கர்த்தர்

இயேசுவின் மரித்த உடலுக்கு மரியா தம் மடியில் புகலிடம் அளித்தார். மரியன்னையின் புகலிடம் அடைந்த இயேசுவின் உடல், இப்பொழுது பூமியில் விதைக்கப்படுகிறது. வாழ்நாளெல்லாம் நமக்காக கையளிக்கப்பட்ட இயேசுவின் உடல் என்னும் வீரிய விதையை நிலத்தில் விதைக்க அரிமத்தியா என்னும் ஊரைச் சேர்ந்த யோசேப்பு சிரமம் எடுத்துக்கொண்டார். பிலாத்துவிடம் சென்று அனுமதிப் பெற்றுவந்தார். சிலுவையிலிருந்து இறக்கினார் துணிகளால் பொதிந்து கல்லறையில் வைத்தார். கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் பலன் தரும் என்று கூறிய இயேசு தன்னையே பிறருக்காக அழித்துக்கொண்டார். நாம் நமது சுயநலத்திற்காக மடிய வேண்டும். நம்மையே அழிக்க வேண்டும். அப்போதுதான் பிறருக்கு வாழ்வளிக்க முடியும்.
நண்பா நம்பிக்கையோடு புறப்படு நாளைய விடியலுக்காய் காத்திருக்காதே.
சிந்தனை:
உண்மைகள் உறங்கலாம்,மறைக்கப்படலாம். ஆனால் நிரந்தரமாக மாண்டுவிடாது. மனித நேயத்தை புதைத்தாலும் அது சிதைந்து விடாது. சிந்தித்து செயல்பட மனிதனே நீ தயாரா?

செபம்:
நிறைவின் இருப்பிடமே இறைவா! மனித குலம் சேர்த்துக் வைக்கவும் காத்துக்கொள்ளவும் விரும்புகின்றதே ஒழிய உன்னைப்போல இழக்க விரும்புவதில்லை. இயேசுவே உம்மைப் போன்று தியாக உள்ளத்தை இந்த மானிட மனங்களுக்குத் தாரும். ஆமென்.

Thanks for joining us in our journey with the Lord
  1. J. Arokia Rajesh
  2. M. Arul Raj
  3. S. John Cornelius
  4. A. Bruseline
  5. E. Sathia Seelan
Graduates 2011 - Sacred Heart Seminary
Kumbakonam

விவிலியச் சிலுவை பாதை (Biblical Stations of the Cross)


தொடக்க செபம்

முதல்வர்:  தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்!

எல்லோரும்:  இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச் சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!

(திருச்சிலுவைப் பாதையின் ஒவ்வொரு தளத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் கீழ்வரும் செபங்களைச் சொல்லவும்)

தொடக்கத்தில்:

முதல்வர்: இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

எல்லோரும்:ஏனெனில், உமது திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இறுதியில்:  (பரலோகத்தில்; அருள்நிறைந்த; பிதாவுக்கும்)

முதல்வர் மற்றும் எல்லோரும்:  எங்கள்மேல் இரக்கமாயிரும், ஆண்டவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்!

இறந்த விசுவாசிகள் அனைவரின் ஆன்மாக்களும் முடிவில்லா அமைதியில் இளைப்பாறுவனவாக! ஆமென்!

1. இயேசு சாவுக்குக் கையளிக்கப்படுகிறார்

விவிலியச் சிந்தனை (மத்தேயு 27:1-2, 22-24, 26)
பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும்” என்று பதிலளித்தனர். அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினா¢ன் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். அப்போது அவன் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

செபம்:  எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோ அறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும், வழியும், உண்மையுமான உம்மையே நாங்கள் பின்பற்றவும், தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!

2. இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்

விவிலியச் சிந்தனை (மத்தேயு 27:27-31)
ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.

செபம்: அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவை எங்கள் பாவங்களின் விளைவு என்பதை உணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப் பழிசுமத்தாமல் இருக்கவும், எங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!

3. இயேசு முதல் முறை கீழே விழுகிறார்

விவிலியச் சிந்தனை (புலம்பல் 1:14, 16-17)
என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது; அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன; அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார். இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்; என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன; என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்; பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர். சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்; அவளைத் தேற்றுவார் யாருமில்லை; சூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்; எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.

செபம்: அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம் குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால் வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
  
4. இயேசு தம் தாயைச் சந்திக்கிறார்

விவிலியச் சிந்தனை (புலம்பல் 2:13, 15, 18)
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? அவ்வழியாய்க் கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! “அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?” என்றனர். அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!

செபம்: அன்பு இயேசுவே! உம்மை ஈன்றெடுத்த அன்னை மரியா உம் துன்பங்களைக் கண்டு மனமுடைந்தார். அந்த அன்னையின் அரவணைப்பில் நாங்கள் என்றும் மகிழ்வுகொள்ள அருள்வீராக. ஆமென்!
   
5. இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் உதவிசெய்கிறார்
  
விவிலியச் சிந்தனை (லூக்கா 23:26)
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.

(மத்தேயு 16:24)
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்றார்.

(மத்தேயு 11:29-30)

இயேசு, “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

செபம்: அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்துசெல்ல சீமோன் என்பவர் துணைசெய்தார். எங்கள் சகோதரர் சகோதரிகளின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திட எங்களுக்குத் துணைசெய்வீராக. ஆமென்!
  
6. வெரோணிக்கா இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறார்

விவிலியச் சிந்தனை (மத்தேயு 25:37-40)
அதற்கு நேர்மையாளர்கள் “ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?
எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார்.
  
செபம்: அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும் கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணி அன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார். எங்கள் வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் கவலையால் வாடும் அனைவரின் துன்பங்களையும் துடைத்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!

7. இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்

விவிலியச் சிந்தனை (எசாயா 53:3-6)
அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம்அனைவா¢ன் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.

செபம்: அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களை அழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர். ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும் கண்டு துவழ்ந்துவிடாமல் துணிந்து எழுந்து, உம்மேல் நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக. ஆமென்!

8. எருசலேம் மகளிருக்கு இயேசு ஆறுதல் கூறுகிறார்

விவிலியச் சிந்தனை (லூக்கா 23:27-28)
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்” என்றார்.


(திருத்தூதர் பணிகள் 21:13)
அதற்குப் பவுல் மறுமொழியாக, “நீங்கள் அழுது ஏன் என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்? நான் ஆண்டவர் இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, சாவதற்கும் தயார்” என்றார்.

செபம்: அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கரிய துன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர். தன்னலம் பாராது பிறர்நலம் நோக்கவும், துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்கு நல்மனத்தைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திட அருள்வீராக. ஆமென்!

9. இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்

விவிலியச் சிந்தனை (திருப்பாடல்கள் 22:1; 40:11-13)
இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?ஸ ஆண்டவரே, உமது போ¢ரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக! ஏனெனில் எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன; என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது. ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்; ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

செபம்: அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால் உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள் பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நாங்கள் தூய்மையோடு வாழவும், பாவத்தை வெறுத்து, உம் அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!

10. இயேசுவின் ஆடைகள் களையப்படுகின்றன

விவிலியச் சிந்தனை (யோவான் 19:23-24)  
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்கும் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்” என்றார்கள். “என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.

செபம்: அன்பு இயேசுவே! உம் உடைகளைக் களைந்தவர்கள் உம்மை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமை, அரசியல் அடக்குமுறை, அதிகாரப்பாணி போன்ற அவலங்களால் மனித உரிமையும் மாண்பும் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்படுகின்ற எம் சகோதரர் சகோதரியரை நினைத்துப் பார்க்கின்றோம். உம் உடன்பிறப்புகளாகிய அவர்களது மாண்பினைக் காத்துப் போற்றிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
  
11. இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்

விவிலியச் சிந்தனை (யோவான் 19:16-19,25)
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு “மண்டை ஓட்டு இடம்” என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் “கொல்கொதா” என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

செபம்: அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்டபோது உம் கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்கள் காயங்களைக் குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால் நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகிய சிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியதுபோல நாங்களும் எங்கள் துன்பதுயரங்களை உம் சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களை இடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!

12. இயேசு சிலுவையில் உயிர்துறக்கின்றார்
  
விவிலியச் சிந்தனை (மத்தேயு 27:45-46, 50, 54)
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி!” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்!” என்று உரத்த குரலில் கத்தினார். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன்” என்றார்கள். 

செபம்: அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர் சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின் பிள்ளைகளாக்கிட நீர் எம்மில் ஒருவராக மாறினீர். சிலுவையில் தொங்கியபோது நீர் உரைத்த சொற்களை நினைத்துப் பார்க்கிறோம். “தாகமாயிருக்கிறது” என்று கூறிய இயேசுவே, எங்கள் ஆன்ம தாகத்தை வளர்த்தருளும். “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி உயிர்நீத்த இயேசுவே, நாங்கள் கடவுளின் திருவுளத்தை இறுதிவரை நிலைத்துநின்று நிறைவேற்றிட அருள்தாரும். ஆமென்!

13. இயேசுவைச் சிலுவையிலிருந்து கீழே இறக்குகிறார்கள்

விவிலியச் சிந்தனை (யோவான் 19:38-40)   
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.

செபம்: அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார். அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காக உயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வு வழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும் பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திட அருள்வீராக. ஆமென்!

14. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்

விவிலியச் சிந்தனை (யோவான் 19:41-42)        
அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.  அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

(லூக்கா 23:55-56)
கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

செபம்: அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில் வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகி அழிந்துபோகவில்லை. நாங்களும் திருமுழுக்கின் வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம். பாவத்திற்கு இறந்தோம். ஆனால், நீர் புத்துயிர் பெற்று எழுந்ததுபோல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு அளித்து, புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்ற வாழ்வு இவ்வையகம் பெற்று மகிழ்ந்திட அருள்வீராக. ஆமென்!

15. இயேசு சாவினை வென்று உயிர்த்தெழுகின்றார்

விவிலியச் சிந்தனை (லூக்கா 24: 1-6)
வாரத்தின் ஆதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்; கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர்.

செபம்: அன்பு இயேசுவே! கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணர நீர் வந்தீர். உமக்கு எதிராகச் செயல்பட்ட தீய சக்திகள் உமக்குக் கொலைத்தண்டனை விதித்தபோதிலும், நீர் சாவின்மீது வெற்றிகொண்டீர். எங்களைப் பாவத்தின் அடிமைத் தளையிலிருந்து விடுவித்து எங்களுக்குப் புதுவாழ்வு தந்தீர். உயிர்த்தெழுந்த ஆண்டவராகத் தந்தையின் வலம் அமர்ந்து எங்கள் அரசராக ஆட்சிசெய்கின்றீர். “உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று வாக்குறுதி அளித்துள்ளீர். உமது அன்புச் சீடராக நாங்கள் வாழவும், நீர் சென்ற வழியில் நடக்கவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.

(சிலுவைப் பாதையின் இறுதியில் நம் திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படி கிறிஸ்து கற்பித்த செபம், மங்கள் வார்த்தை செபம், திருத்துவப் புகழ் சொல்வோம். நம் பாவங்களுக்காக முழுமையாக மனம் வருந்துவோம். நற்கருணை விருந்தில் பங்கேற்போம். இவ்வாறு, இறையருள் துணையால் நம் ஆன்ம நலனுக்காக நாம் பரிபூரண பலன் பெறலாம். அதை இறந்தோருக்காகவும் ஒப்புக்கொடுக்கலாம்).

மரியன்னையின் கல்வாரி மலைப்பாதை

சிலுவை பாதை (Stations of the Cross)

முன்னுரை:

என் அன்பு மகனே! மகளே! என்னைப்பார். நான் தான் உன் தாய் அன்னை மாரியாள் பேசுகின்றேன். கபிரியேல் தூதரின் தேவசெய்திக்கு செவிமடுத்து என்னையே அடிமையாக கையளித்துத் தேவக் குமாரனை என் உள்ளத்தில் உதிரத்தில் சுமந்து பெற்றெடுத்தேன். முப்பது ஆண்டுகள் என் மகன் இயேசுவை கண்ணின் மணிபோல் கணிவுடன் காப்பாற்றி வந்தேன். பரம பிதாவின் சித்தத்திற்கு பணிந்து என் மகன் இயேசு மூன்று ஆண்டுகள் நற்ச்செய்தி பணி செய்தார். உலகம் என் மகனை வெறுத்தது. குசையடி முள்முடி அவருக்கு கொடுத்தது. பாரச்சிலுவையை சுமந்த என் மகன் கல்வாரி மலைநோக்கி தள்ளாடித் தள்ளாடி, அடிமேல் அடிவைத்து, விழுந்து எழுந்து, நடந்துசென்று, கள்வர்கள் நடுவில் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை, என் மகனே! மகளே! உனக்கு எடுத்து சொல்கின்றேன். என் பின்னே வா. என் மகன் சுமந்த சிலுவை அவர் தோள் மீதிருந்து இன்னும் இறக்கப்படாமல் உங்களில், உங்கள் சகோதர ககோதரிகளின் தோள்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து ஏற்று, கண்ணீர் சிந்த கருனையுடன் உங்களை அழைக்கிறேன் வா மகனே! வா மகளே!

முதல் நிலை
என் மகன் இயேசுவுக்கு பிலாத்து அநியாயத் தீர்ப்பு அளிக்கின்றான்.
என் அன்பு மகளே!என் மகன் இயேசுவைப்பார். சிவப்பு அங்கி அணிந்தராய் சிரசில் முள்முடி தாங்கியவராய் சிதைக்கப்பட்ட உடலில் எண்ணற்ற காயங்களோடு கைகள் கட்டி தலைகவிழ்ந்தவராய்,என் மகன் இயேசு பிலாத்துவின் முன் நிறுத்தப்படுகிறார். தலைமைக்குருக்களின் தூண்டுதலின் அடிப்படையில் “அவனை சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும்” என,  ஆட்டு மந்தைப்போல் கூச்சலிடும் மக்களின் கூக்குரலுக்கு பயந்து, தன் மனைவியின் எச்சரிக்கையை துச்சமென தூக்கி எறிந்த பிலாத்து, “இவனை கொண்டு போய் நீங்களே உங்கள் சட்டப்படி சிலுவையில் அறைந்து கொள்ளுங்கள்” என்ற அனியாய் தீர்ப்பை அறிவித்தான். என் மகன் இயேசுவின் அவலக்கோலத்தையும் பிலாத்துவின் அனியாயத்தீர்ப்பையும் எண்ணி நீ களங்குகிறாய் கண்ணீர் வடிக்கின்றாய்.

என் அன்பு பிள்ளைகளே உன் சுயநலத்திற்க்காக, உன் நற்பெயரைக் காபாற்றிக்கொள்ள, பிறரின் நிற்பந்தங்களுக்கு பயந்து, உன் வீட்டில் உள்ளவர்கள் மீது இல்லாதது பொல்லாதது சொல்லி, எத்தனை முறை அநியாயத் தீர்ப்பிட்டிருக்கின்றாய். உம்முடைய அநியாயத் தீர்ப்பால் கண்ணீர் வடித்தவர்கள் எத்தனை பேர். அவர்களின் வேதனையை என்னிப்பார். மனம் வருந்து கண்ணீர் சிந்து.

இரண்டாம் நிலை
என் மகன் இயேசுவின் மேல் பாரச்சிலுவை சுமத்தப்படுகிறது.
என் அன்பு மகனே! மகளே! விண்ணையும் மண்ணையும், உன்னையும் என்னையும்வார்த்தையால் படைத்த என் மகன் இயேசுவுக்கு உலகம் தந்த பரிசு பாரச்சிலுவை. முடவனை நடக்கச் செய்தார், பார்வையற்றவனுக்கு பார்வை அளித்தார். தொழுநோயாளனை சுகப்படுத்தினார். இறந்தவர்களை உயிர்ப்பித்தார். “எங்கு சென்றாலும் நன்மைகளையே செய்து சென்ற” என் மகன் இயேசு ராஜாவுக்கு யூத குலம் தந்த பரிசுதான் இப்பாரச்சிலுவை. மரத்தால் மனுக்குலத்திற்க்கு வந்த பாவத்தின் சுமையை போக்க மானுட மகன் மாபெறும் பாவச்சுமையாம் பாரச்சிலுவையை அன்புடன் அரவணைத்து முத்தமிட்டு கொடுமையினை எண்ணி கலங்குகிறாய் கண்ணீர் சிந்துகிறாய்.

என மகனே! என் மகளே! நல்லதை நினைத்து நல்லதை பேசி நல்லதையே செய்ய அழைக்கப்பட்ட நீ தீமையை எண்ணி தீய வார்த்தைகளை பேசி தீமையான செயல்களை செய்து உன் வீட்டில் சுற்றத்தில் தொழிலகத்தில் உள்ளவர்களுக்கு பாரச்சிலுவையாக இருந்து அவர்களை கண்ணீர் வடிக்கச் செய்தாயே அதை எண்ணி மணம் வருந்து! கண்ணீர் சிந்து!

மூன்றாம் நிலை
என் மகன் இயேசு கீழே விழுத்தாட்டப்படுகிறார்
என மகனே!என் மகளே!என் மகன் இயேசுவின் கண்களை கட்டி கண்ணத்தில் அறைந்து “உன்னை அடித்தவன் யாறென்று தீர்க்க தரிசனமாக சொல்” என்று ஏளனம் செய்தனர் கசையடி கொடுத்து பகட்டாடை உடுத்தி காறி உமிழ்ந்து கைகளில் ஒரு கோலைக்கொடுத்து எள்ளி நகையாடி ஏளனம் செய்தனர். குழந்தையின் கையில் உள்ள பந்தைப்போல குரங்கின் கையில் உள்ள மாலையைப் போல என்மகனின் உடலை சிதைத்தனர். கல்வாரி மலை நோக்கி தளர்ந்த நிலையில் தள்ளாடி நடக்கும் என் மகன் இயேசுவின் காள்களை ஓர் போர் வீரன் வேண்டுமென்றே தட்டி விட அவர் வெட்டப்பட்ட கிளைபோல் பாரச்சிலுவையோடு சட்டென விழுகிறார்.என் மகன் பாரச்சிலுவையின் கீழ் விழுந்து கிடப்பதை எண்ணி பதறி அழுகின்றாய்.

என் மகனே! மகளே! எத்தனை முறை பிறர் வாழ்வு கெட்டுப்போக திட்டமிட்டு செயல் பட்டு அவர்களை தலைகுனிய செய்தாய். பிறர் குடும்பம் சீரழிய வேண்டும் என்று பில்லி சூனியம் ஏவல் எடுப்பு செய்திருகக்கின்றாய். உனக்கு பிடிக்காதவர்களின் பிள்ளைகள் மடிய வேண்டும் என சாபமிட்டு என்னை நோக்கி எத்தனை முறை மன்றாடியிருக்கிறாய். உம்மால் விழித்தாட்டப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

நான்காம் நிலை
மண்ணில் விழுந்தஎன் மகனை ஓடி வந்து சந்தித்தேன்
என் அன்பு மகனே! மகளே! “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் பலன் கொடுக்கும்” என்ற என் மகனின் வார்த்தைகளை உண்மையென நிறுபிக்க என் மகன் இயேசுவை கீழே விழச் செய்தார்களோ! பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த என் உதிரம் பதறியது. முப்பது ஆண்டுகள் அன்போடு ஆசையோடு ஊட்டி வளர்த்த என் மகனின் உடல் மண்ணில் சரிந்து சாய்ந்த போது என் உடலில் பூகம்பம் வெடித்தது. தான் ஆடா விட்டாலும் தன் தசையாடும் என்பார்களே. விழுந்த என் மகன் இயேசுவுக்கு ஏற்பட்ட வேதனையை விட என் உள்ளத்தில் செல்லௌன வேதனை அனுபவித்தேன். போர் வீரர்கள் மத்தியில் காய்ந்த இலைபோல வீழ்ந்த என் மகனை தேற்ற ஓடினேன். “என் மகன் இயேசு இராஜாவே! ஊன் பின்னே நான் வருகிறேன் துணிந்து செல்” என என் பார்வையால் பார்த்தேன்.

என் மகனே! மகளே! என் மகன் இயேசு என்னை ஒருபோதும் மனம் நோகச் செய்ததில்லை. ஆனால் நீ, உன் தந்தை, தாயை மனம் நோகச் செய்தாய், அவமதித்தாய், கீழ்ப் படிய மறுத்தாய், அடித்தாய், முதுமையில் அவர்களை ஆதரிக்கவில்லை. பிச்சை எடுக்கச் செய்தாய், உன் தாய் தந்தைக்கு உன்னால் ஏற்ப்பட்ட கொடுமைகளை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஐந்தாம் நிலை
பரமன் என்மகன் பாமரன் சீமோனின் உதவியை பாசமுடன் ஏற்றுக்கொள்கிறார்.
என் அன்பு மகனே! மகளே! என் மகனே இயேசு ஏழைகுடும்பத்தில் பிறந்த என் கணவர் சூசையப்பரையும், என்னையும் தெரிந்து கொண்டார். ஏழையாக ஊருக்கு வெளியே இருக்கும் சத்திரத்தில் பிறக்கவும் திருவுளம் கொண்டார். ஏழை எளியவர்களை சிறுவயது முதல் நேசித்தார். எனவேதான் ஏழை மீனவர்களை தன் சீடர்களாக தெரிந்தெடுத்தார். “ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் ஏனெனில் கடவுளின் அரசு உங்களதே” என எடுத்தியபினார். எளியவர்களோடு இருப்பதில் இன்பம் கொண்டார். பணம் மனிதனின் மனதை மயக்கி சீரழிக்கும் மருந்து என்பதை உணர்ந்த அவர் பணம் பகட்டான வாழ்வு நம்மை வாணக வாழ்வுக்கு அழைத்து செல்லாது என்பதை உனர்ந்தவர் அதை அடியோடு வெறுத்தார். ஏழை சீமோன் உதவியை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

என் மகனே! மகளே! பண ஆசைதான் எல்லா தீமைக்கும் ஆணிவேர். பொருளாசை சிலைவழிப்பாட்டிற்கு சமம். ஏழையாய் இருப்பது இறைவனின் சாபம் என்று தவறாக எண்ணி பணத்தையும் பகட்டான உடையையும் வசதி நிறைந்த வாழ்க்கையையும் தேடி ஓடி சோர்ந்து போன, உன் அவலநிலையை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஆறாம் நிலை
வெரோனிக்காளின் வீரச் செயலுக்கு என் மகன் இயேசு விருது அளிக்கின்றார்
என் அன்பு மகனே! மகளே! திருடர்களால் உடைமைகள் பறிக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டு குற்றுயிராய் விடப்பட்ட வழிப்போக்கனை கண்ட குருவும் லேவியனும் கண்டும் காணதவாறு கருணையின்றி கடந்து சென்றார்கள். என் மகன் இயேசுவை கசையால் அடித்து காறி உமிழ்ந்து காலால் உதைத்து கொடுமைப் படுத்தியதை பார்த்தவர்கள் பார்க்காதவாறு போர் வீரர்களுக்குப் பயந்து, ஒதுங்கி கை கட்டி, வாய் பொத்தி நிற்கின்றார்கள். நல்லவரை ஏன் துன்புறுத்திகிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை உண்மை பேசியவரை ஏன் இம்சைப் படுத்துகிறீர்கள் என்று யாரும் தடுக்கவும் வரவில்லை. என் மகன் இயேசுவுக்கு உதவி செய்ய ஒரு சிலரை அழைத்தேன். அவர்களும் வர பின் வாங்கினார்கள்.என் மகனுக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இருந்த வேலையில் வீரப் பெண் வெரோணிக்கா ஓடோடி வந்து என் மகனின் முகத்தை துடைத்தது என் மகனுக்கும் எனக்கும் ஆறுதல் அளித்தாள்.

என் மகனே! மகளே! தீமை செய்பவனை விட தீமையை பார்த்து கண்டிக்காமல் இருப்பவன் இருமடங்கு தீமை செய்கிறான். அநீயாயம் என்று தெரிந்தும் ஆமைபோல் ஊமையாகி ஒதுங்கிச் செல்கிறாய். உதவி செய்ய முடிந்தும் ஊர்வம்பு நமக்கெதற்கு என்ற அலட்சியத்தால் விலகிச் செல்கின்றாய். எனக்கு ஆறுதல் கிடைக்காத என ஏக்கத்தோடு காத்திருக்கும் உள்ளத்திற்கு, காயப்பட்டு கண்ணீர் வடிக்கும் அனாதைக்கு, இது இவள் பாவத்தால் வந்தது என ஏளனம் பேசி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாய். தீமையைக் கண்டும் கானதவாறு செல்லும் உன் அலட்சியப் போக்கால் ஏற்படும் கொடுமைகளை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஏழாம் நிலை
என் மகன் இயேசு கால் தடுமாறி விழுகின்றார்
என் அன்பு மகனே! மகளே!என் மகன் இயேசு நடந்து சென்ற கல்வாரி மலைப்பாதை கரடு முரடுள்ள கற்கள் முட்கள் நிறைந்த கடினப்பாதை. கல்லின் மேல் கால் வைக்க கால் தடுமாறி முகம் குப்புற விழுகின்றார். “ அம்மா! அம்மா! தடுமாறி விழுந்து விட்டேன் அம்மா” என்றஎன் மகனின் அலறல் என் காதில் மட்டும் தான் ஒலித்தது”. என் மகனே! இயேசுவே! உன் தாய் நான்! உன் பின்னே வருகின்றேன் திடம் கொள் எழுந்து நட” என்ற எனது குரல் என் மகனுக்கு மட்டும் கேட்க்கின்றது. எழுந்து நடக்கின்றார். பாவப் பாதாள சிறையில் விழுந்து கிடந்த மனிதனைத் தூக்க மனித சாயலில் வந்த என் மகன் இயேசு பாரச் சிலுவையின் அடியில் தடுமாறி விழுந்ததை எண்ணி நீ கலங்குகின்றாய். கண்ணீர் வடிக்கின்றாய்.

என் மகனே! மகளே! உன் வாழ்க்கையில் பள்ளங்கள் மேடுகள் வெற்றிகள் தோல்விகள் சாதனைகள் வேதனைகள் இன்பங்கள் துன்பங்கள் புகழ்ச்சிக் கீதங்கள் பழிச்சொற்கள் நிந்தைகள் வருவது சகஜம். துன்பத்தைக் கண்டு துவளாதிருக்கும் உள்ளத்தை இன்பத்தைக் கண்டு இளகாதிருக்கும் உறுதியான மனதையும் என் மகனிடம் கேள். தவறி தடுமாறி விழும்போதெல்லாம் எழுந்து நடக்க வரம் கேள்.

எட்டாம் நிலை
பாவத்திற்காக கண்ணீர் சிந்த எருசலேம் பெண்களை என் மகன் இயேசு அழைக்கிறார்
என் அன்பு மகனே! மகளே! “பாவம் செய்தேன். பாவத்தின் மேல் பாவம் கட்டிக்கொண்டேன். அதனால் எனக்கு என்ன தீமை வந்தது” என்று சொல்லும் என் பிள்ளைகள் எத்தனை பேர். மனுக்குலப் பாவத்தினால் உருவாக்கப்பட்ட பாரச் சிலுவையை என் மகன் இயேசு தோளில் சுமந்து வந்த பரிதாபத்தை எண்ணி எருசலேம் பெண்கள் கதறி அழ “எனக்காக அழாதீர்கள் உங்கள் பாவங்களுக்காக உங்கள் பிள்ளைகளின் பாவங்களுக்காக தினமும் கதறி அழுங்கள் “ என்கிறார். ஏனெனில் பாவத்திற்காக அவர் பாதத்தில் அழுத பாவியை பாராட்டி “இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. காரணம் இவள் காட்டிய பேரன்பே “ என்றார்.

என் மகனே! மகளே! “உலகத்திலுள்ள பாவிகலெல்லாம் பெரும்பாவி நானே” என்றார் புனித சின்னப்பர். “தன்பாவத்திற்காக வாழ்நாள் முழுவதும் மனம் வருந்தி அழுதார் புனித இராயப்பர்” ஆண்டவருக்கு எதிராக நான் பாவம் செய்தேன் என்கிறார் தாவீது. நாம் தண்டிக்கப்படுவது முறையே நம் செயல்களுக்கு தக்கபலனை பெறுகின்றோம் என்று ஏற்றுக் கொண்டான் நல்லக்கள்ளன். “இயேசுவே நான் பாவி உம் இரக்கத்தால் என்னை கழுவி தூய்மையாக்கும்” என தினமும் அறிக்கையிட்டு உன் பாவங்களுக்காகவும் உன் குடும்பத்தாரின் பாவங்களுக்காகவும் கண்ணீர் சிந்து.

ஒன்பதாம் நிலை
சுமைதாங்கியாகிய என் மகன் இயேசு மண் மீது சாய்ந்தார்
என் அன்பு மகனே! மகளே! “ சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் உங்களை நான் இளைப்பாற்றுவேன்” என்றழைத்த என் மகன் இயேசு ஏழை எளியவர்களின் சுமைகளை சுமந்தார். பாவிகளின் நண்பராயினார். வுழிமாறி தடம் புரண்ட மக்களுக்கு வாழ்வின் வழியானார். ஓளியிழந்து இருண்டு போன மனக்கண்களுக்கு ஒளி விளக்கானார். வாழ்வில் களையிழந்து வாழ்நாளில் விளிம்பிற்கு துன்ப துயரத்தால் தள்ளப்பட்ட கைவிடப்பட்ட அனாதைகளின் அடைக்கலமானார். இதயத்தில் இரக்கம் இல்லாதவர்கள் அன்பு இல்லாதவர்களே ஊனமுற்றவர்கள் உடலில் ஊனமுற்ற தொழுநோயாளிகள் ஊனமுற்றவர்களே அல்ல என்று உரக்கக் கூவினார். உண்மையை மட்டும் பேசி நன்மையை நாள்தோறும் செய்த என் மகன் இயேசு என்னும் சுமைதாங்கி மண்ணில் சாய்ந்தார் என்று கண்ணீர் சிந்துகிறாய்.

என் மகனே! மகளே “என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து நாள்தோறும் தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின் தொடரட்டும்” என்ற என் மகனின் அன்புக் குரலைக் கேட்டு உன் வாழ்வில் வரும் சுமைகளையும் உன்னை அன்பு செய்கின்றவர்களின் சுமைகளையும் உன் குடும்பத்தின் சுமைகளையும் தாங்கி நீ வழி நடக்கும் போது மண் மீது சாயலாம். கண்ணீர் சிந்தலாம் அது உனக்கு மீட்புத் தரும். மாறாக உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் நீ எத்தனை முறை சுமக்க முடியாத சுமையாக பாரமாக இருந்தாய். அதை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!.

பத்தாம் நிலை
நித்திய தேவன் என் மகன் இயேசு நிர்வாணமாக்கப்படுகிறார்
என் அன்பு மகனே! மகளே! பரிசுத்த நிலையில் படைக்கப்பட்ட மனிதன் இறைவனோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தபொழுது அவனது நிர்வாணம் அவனுக்கு அவமானம் தரவில்லை. அருவறுப்பையும் உணர்த்தவில்லை. “ நான் எனக்குப் போதும் இறைவன் எனக்கு வேண்டாம்” என்று கீழ்படிய மறுத்து தன்னைப் படைத்த இறைவனுக்கு எதிராகப் போராடத் துணிந்த மனிதனுக்கு நிர்வாணம் அவமானத்தைத் தந்தது. அருவறுப்பை உணர்த்தியது. மனுக்குலப் பாவத்தினால் வந்த நிர்வாணத்தின் அவமானத்தை போக்க வந்த என் மகன் இயேசு பலர் மத்தியில் நிர்வாணத்தின் அவமானத்தை அனுபவித்தார். வயல்வெளி மலர்களை உடுத்தியவர் வானத்துப் பறவைகளுக்கு தினமும் உணவுகொடுத்துக் காப்பவர் ஆடையின்றி நிர்வாணத்தின் கொடுமையை அனுபவிப்பதை எண்ணி நீ கலங்குகிறாய். கண்ணீர் வடிக்கிறாய்.

என் மகனே! மகளே! “ நிர்வாணியாய் என் தாய் வயிற்றினின்று வெளிப்பட்டேன் நிர்வாணியாகவே திரும்பிப் போவேன்” என்ற யோபுவின் வார்த்தையை எண்ணிப் பார். பிறரைப் பற்றி புறங் கூறும் உன் இல்லாத பொல்லாத வார்த்தைகளினால் நற்பெயர் என்ற ஆடை உரிக்கப்பட்டு நிர்வாணத்தின் அவமானத்தின் கொடுமையை அனுபவித்து கண்ணீர் சிந்தியவர்கள் எத்தனை பேர். உன் கணவன் மீது மனைவி மீது சந்தேகப்பட்டு பிறர் மத்தியில் அவர்களைக் குறித்து தவறான கட்டுக் கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விட்டு நிர்வாணத்தின் அவமானத்தை அவர்கள் அனுபவிக்க விட்டு விட்டு நிம்மதி அடைய நினைக்கும் நிர்ப்பாக்கியர்களே உங்களுக்கு வரப்போகும் நிர்வாண நிர்பாக்கியத்ததை எண்ணி மனம் வருந்துங்கள். கண்ணீர் சிந்துங்கள்.

பதினொன்றாம் நிலை
என் மகன் இயேசுவின் பரிசுத்த உடல் பாரச் சிலுவையோடு அறையப்படுகின்றது.
என் அன்பு மகனே! மகளே! “ உங்கள் உடல் கடவுளின் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் உடலில் கடவைள மகிமைப் படுத்துங்கள். கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால் கடவுளே அவனை அழித்து விடுவார்” என்ற இறைவார்த்தைகளை எண்ணிப்பார். “ உன் கண்தான் உன் உடலுக்கு விளக்கு. ஒரு பெண்ணை இச்சையோடு நோக்குபவன் எவனும் ஏற்கனவே தன் உள்ளத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று” என்னும் வேத வசனங்களை நினைத்துப்பார்.என் மகன் கர்ததர் இயேசுவின் உடல் கழுமரத்தில் மூன்று ஆணிகளால் அறையப்பட்டு துடிதுடித்ததை எண்ணிக் கலங்குகிறாய் கண்ணீர் வடிக்கிறாய்.

என் மகனே! மகளே! “மனிதன் செய்யும் பாவமெல்லாம் உடலுக்குப் புறம்பானது. கெட்ட நடத்தை சொந்த உடலுக்கே எதிரான பாவம்” என்பதை உணர்ந்து விபச்சாரப் பார்வை சிந்தனை குடும்பத்தில் பிரமாணிக்த்துக்கெதிராக கொண்ட தகாத உறவுகள் ஓரிணச்சேர்க்கை சுய இன்பம் போன்ற பலவீன பாவங்களை எண்ணி மனம் வருந்து. “இயேசுவேஎன் பரிசுத்த உடலுக்கு எதிராகவும் பிறர் உடலுக்கு எதிராகவும் செய்த எண்ணற்ற என் பாவங்களை மன்னியும். உம் இரத்தத்தால் என் உடலைக் கழுவி பரிசுத்தாமக்கும்” என செபித்து கண்ணீர் சிந்து.


பன்னிரெண்டாம் நிலை
கைவிடப்பட்ட கர்த்தர் கழுமரத்தில் மரிக்கின்றார்
 என் அன்பு மகனே! மகளே! “என் கடவுளே!என் கடவுளே! ஏன் என்னைக் கைவிட்டீர்” எனஎன் மகன் இயேசு கதறினார். ஏனெனில் உலகத்தை அவர் நேசித்தார் உலகம் அவரை வெறுத்தது. சீடர்களை அவர் நேசித்தார். யூதாசு அவரைக் காட்டிக் கொடுத்தான் இராயப்பர் மறுதலித்தார். மற்றவர் சிதறி ஓடினர். புலரை அவர் குணப்படுத்தினார். பலரும் பலவாராக ஏளனம் பேசினர். வருவோர் போவோர் வசைபாடினர். துன்பத்தில் தோள் கொடுக்க ஆளில்லாமல் கைவிடப்பட்டவராக எல்லாராலும் வெறுக்கப்பட்டவராக ஊருக்கு வெளியே கல்வாரி மலையில் கல்வர்களின் நடுவில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே வேதனையோடு மரித்தஎன் மகன் இயேசுவின் கொடுமையை எண்ணி நீ கலங்குகிறாய் கண்ணீர் வடிக்கிறாய்.

என் மகனே! மகளே! எனக்கு என் தாயின் அன்பு கிடைக்கவில்லையே. என் தந்தை என்னை வெறுக்கின்றார். என் பிள்ளைகள் என்னை ஆதரிக்கவில்லை. என் கணவன் என் மீது சந்தேகப்பட்டு என்னை வெறுக்கின்றார். குடிக்கின்றார். அடிக்கின்றார். என் குடும்பத்தைக் கவனிப்பதில்லை. என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டாள். என்னை மதிப்பதில்லை. பிள்ளைகள் மத்தியில் என்னை அவமதிக்கின்றாள். என்னை எல்லோரும் வெறுக்கின்றார்கள். நான் யாருக்காக வாழவேண்டும் சாவதே மேல். நான் ஆனாதை. துனிமரம் - என்றெல்லாம் எண்ணி கைவிடப்பட்ட நிலையில் தள்ளப்பட்ட கல்லாக இருக்கும் நீ அனாதைகளின் அடைக்கலமாம்,என் மகன் இயேசுவிடம் அடைக்கலம் தேடு. அவர் உன்னை ஆதரிப்பார். அழாதே.

பதிமூன்றாம் நிலை
மரித்தஎன் மகன் இயேசுவின் உடலை மடியில் வைத்துக் கதறினேன்.
என் அன்பு மகனே! மகளே! உன் தாயாகிய என்னைப் பார். எனக்கு வந்த வேதனையைக் கேள். எனக்கு பத்தாவாகிய சூசையப்பர் என்னையும் என் மகனையும் தனியே தவிக்கவிட்டு மரித்துப்போனார். என்னை நேசித்தஎன் ஒரே அன்பு மகன் இயேசுவும் “ அம்மா இதோ! உன் மகன் எனக் கூறி அருளப்பர் கையில் ஒப்படைத்து விட்டு என்னை அனாதையாக்கிவிட்டு மரித்துப்போனார். நான் விதவையாகிவிட்டேன். என்னை அம்மா அம்மா என்றழைக்க ஆளில்லாத நிலையில் நான் தனிமரமானேன்.என் மகன் என்னோடு இருந்தபோது சொன்ன அன்பான வார்த்தைகளையும் செய்த பாசமிக்க செயல்களையும் எண்ணி எண்ணி” இயேசுவே என் அன்பு இயேசுவே என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டாயே” என்று விம்மி ஓலமிட்டு அழுதேன். வருவோர் போவோரின் இழிச்சொல்லும் என் வேதனையை அதிகப்படுத்தியது.என் வேதனையை எண்ணி நீ கலங்குகிறாய். கண்ணீர் வடிக்கிறாய்.

என் மகனே! மகளே! உன் அன்புக்காக ஏங்கும் உன் தாய், உன் தந்தை, உன் மனைவி, உன் கணவன், உன் பிள்ளைகள் இவர்களை எண்ணிப்பார். என் மகள், மகன் என்னை பார்க்க வரவில்லையே என ஏங்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்.என் கணவன் என்னையும் என் பிள்ளைகளையும் தனியே தவிக்க விட்டு ஓடிப்போனார் திரும்பி வரவில்லையே என்று ஏங்கும் மனைவிகள் எத்தனைபேர். என் அன்புப் பெற்றோர் மரித்துப் போனார்கள் எனக் கண்ணீர் வடிக்கும் பிள்ளைகள் எத்தனை பேர். உனது அன்பிற்காக ஏங்கித்தவிக்கும் உள்ளங்களை அன்பு செய்யாமல் மனநோகச் செய்த குற்றத்தை நினைத்து கண்ணீர் சிந்து.

பதினான்காம் நிலை
மரித்த என்மகனின் உடலை மாற்றான் கல்லறையில் அடக்கம் செய்தேன்
என் அன்பு மகனே! மகளே! “அப்பா உம் கரத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்ற அலரல் கல்வாரி மலையெங்கும் எதிரொலிக்க என் மகன் இயேசு மரித்து போனார். அடுத்த நாள் ஓய்வு நாள். கல்லறை தோண்ட நேரமில்லை. அன்று என் மகன் பிறக்க இடம் வேண்டும் என தேடி அலைந்தேன். சத்திரத்தில் இடமில்லை. மாட்டுத் தொழுவத்தில் இடம் கிடைத்தது. இன்று என் மகனை அடக்கம் செய்ய கல்லறை வேண்டும் என கையேந்தி நின்றேன். பலர் கைவிரிக்க ஒருவர் மட்டும் உதவினார். அவர் பின்னே வந்தேன்என் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று அழுதேன், அழுதேன்.

என் மகனே! மகளே! மனிதனே நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய். மனிதனின் வாழ்வு வயல் வெளி புல்லுக்கும் மலருக்கும் சமம். புல் உலர்ந்து போகிறது மலர் மடிந்து போகின்றது. வாழ்வு எப்படியோ அப்படியே உன் மரணம் அமையும். உனக்கு வரப்போகும் சாவை என்னி உன் பாவ வாழ்வை மாற்றிக்கொள்ள மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

பதினைந்தாம் நிலை
என் மகன் இயேசு உயிர்த்தார்.
என் அன்பு மகனே! மகளே! என் மகன் இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார் எனக்கும் சீடர்களுக்கும் காட்சி கொடுத்து எங்களைத் தேற்றினார் மகிழ்ச்சி கொண்டோம். நீயும் என்னைப் போல் இயேசுவுக்காக இயேசுவோடு அவரின் நற்செய்திக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தால் உனக்கும் அவர் காட்சியில் தோன்றுவார். உன் துன்பங்களில் வேதனைகளில் உன்னைத் தேற்றுவார். விண்ணக மகிழ்ச்சி உன்னகம் வரும். உன்னத பேரின்பம் அடைவாய்.

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு ஏசுவாம்
நாம் நம்மையே பலியாய் கொடுப்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம்

இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2)
இதை உணர்வோம்; நம்மை பகிர்வோம் (2)
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே


பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
ஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இனையற்ற சாட்சிகளே(2)
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (2)
நாளைய உலகின் விடியலாகவே

பொதுக்காலம் 7 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 19-02-2012


முன்னுரை:  இறை இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டவர் இயேசுவிடம் சென்றால் வேண்டியது கிடைக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு முடக்குவாதமுற்ற மனிதனை தன்னிடம் கொண்டுவந்ததை கண்ட இயேசு அவனைக் குணப்படுத்துகிறார். மிகுந்த நம்பிக்கையோடும், தோழமை உணர்வோடும் பிணியாளரைத் தூக்கி வந்த நண்பர்களை போன்று இருந்தால் இன்றும் அதிகமாக நம்பிக்கை, விசுவாசம் கொண்டு பிறரை அன்பு செய்ய வரம் வேண்டுவோம். உள்ளத்திலே பொறாமை, தீய எண்ணம் ஆகியவைகளை கொண்டு வெளியில் நடக்கும் நன்மைகளை தீமையாகப் பார்த்துப் பிளவுகளை ஏற்படுத்துகின்ற மறைநூல் அறிஞரை போன்று இருந்தோமென்றால் இறைவன் நம் அனைவரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:  நம் முன்னோரின் கடவுள் பழிவாங்குபவராகவும், தண்டிக்ககூடியவராகவும் இல்லை மாறாக பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வதுபோல அவர் நம் பாவங்களை மன்னித்து புது வாழ்வை அருள்வார் என்று இறைவாக்கினர் எசாயாவிடம் கடவுள் கூறுவதை வாசிக்க கேட்போம்.
எசாயா நூலிலிருந்து வாசகம் (எசாயா43:18-19,21-22,24-25)

முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்;இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்;இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர். ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே! பணம் கொடுத்து நீ எனக்கென்று நறுமணப்படையல் வாங்கவில்லை; உன் பலிகளின் கொழுப்பால் என்னை நிறைவு செய்யவில்லை; மாறாக, உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்; உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய். நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி என்று மொழிந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, ஒரே நேரத்தில் ஆம் என்றும் இல்லையென்றும் பேசவில்லை. அதேப்போன்று தான் கடவுளின் ஊழியனாகிய நானும் என் உடன் ஊழியர்களும் இருந்தோம். ஆகவே நீங்களும் உண்மைக்கு சான்று பகர்ந்து கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் உறவை உறுதிப்படுத்தி தூய ஆவியை பெற்றுக்கொள்ள நம்மை நாமே தயாராக்குவோம் என்று புனித பவுலடியார் கூறுவதை வாசிக்க கேட்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் (2கொரி. 1:18-21)

நான் ஒரே நேரத்தில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் "ஆம் " என்றும் "இல்லை " என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் "ஆம் " என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் "ஆம் " வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக "ஆமென் " எனச் சொல்லுகிறோம். கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (2:1-12)

சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்றார்.அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு கண்ணுவதை இயேசு தமமுள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் " என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ "என்றார்.அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே " என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அன்பு தந்தையே எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும்  திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் மக்களை சாமாதானத்தின் கருவிகளாக மாற்றி நம்பிக்கையின் ஒளியில் வழிநடத்தி இறையரசைப் பரப்பிட தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று மொழிந்த இறைவனே! எம் ஊரில் உள்ள மக்கள் ஏதாவது ஒருவிதத்தில் பாவம் செய்து உம்மை விட்டு விளகி சென்றிருக்கும் அவர்களை மன்னித்து உம்பிள்ளைகளாக வாழ்ந்து உமக்கு பெருமைச்சேர்க்க வேண்டிய அருளைத்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும்,வறுமையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. நம்பிக்கையோடு வந்த அந்த முடக்குவாதமுற்ற மனிதனை குணப்படுத்தியது போல என் பங்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை ஆசிர்வதித்து அவர்கள் நம்பிக்கையோடு எதிர்கொள்ள இருக்கின்ற அரசு பொதுத்தேர்வினை சிறந்த முறையில் செய்து நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைந்து பிறருக்கு உதவிசெய்து வாழ வேண்டிய அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 12-02-2012


முன்னுரை:  

பணியாளர்கள் நாம்; பகவான்கள் அல்ல.
பாட்டாளிகள் நாம்; முதலானவர்கள் அல்ல.
நோயாளிகள் நாம்; நோயற்றவர்கள் அல்ல.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 6ஆம் ஞாயிரை பொருளுணர்ந்து இயேசுவின் தியாகப்பலியை நிறைவேற்றிடவும், நமது பங்கில் உள்ள நோளிகள் நலம் பெற்றிடவும் செபிக்க அழைப்பு விடுக்கின்றது. தீட்டுப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தொழுநோளிகளை நம் இறைமகன் இயேசுகிறிஸ்து மனித மாண்பேடும், மதிப்போடும் தொட்டுக் குணமளிக்கின்றார். மருத்துவன் நோயற்றவருக்கு அன்று நோய்யுற்றவருக்கே தேவையென்று கூறி இவ்வுலகிற்குவந்த நம் இறைமகன் இயேசுவின் இப்பணி வெறும் உடல்சார்ந்த நோய்களை போக்குவதோடு நின்றுவிடாமல் ஆன்ம, உள்ள சமூக நலன்களை கொடுக்கின்ற பணியாக செய்துவந்தார். அப்படிப்பட்ட நாம் இறைவனிடம் செல்லும்போது நாம் குணம்பெறுவது நிச்சயம் எனவே யாருகெல்லாம் மருத்துவ மற்றும் பிற உதவிகள் அதிகமாக தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உயிர் வாழும் வரை கிடைப்பதற்கு வேண்டிய அருளைத் இறைவன் தந்தருள வேண்டுமென்று இத்திருப்பலியில் செபிப்போம்.


முதல் வாசக முன்னுரை:  தொழுநோயால் பீடிக்கப்பட்ட மக்கள் யாருடைய உதவியும் இன்றி தனிமையில் விடப்பட்டனர். அதேப்போன்று பாவம் செய்து இறைவனைவிட்டு பிரிந்து செல்பவர்களும் அத்தகைய தனிமையின் கொடுமையினை உணர்வார்கள் என்று மறைமுகமாக கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
லேவியர் நூலிலிருந்து வாசகம் (லேவி. 13:1-2,45-46)

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: "ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்." எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  முதல்வாசகத்திற்கு பதில் அளிக்கின்றவகையில் இன்றைய இரண்டாம் வாசகம் அமைகின்றது. நாம் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் இறைவனுக்காக செய்திடுவோம். திருச்சபையின் போதனைக்கு எதிராக நடக்காமல் இருந்தால் நாம் இறைவனின் மக்களாக, குழந்தைகளாக வாழ்வோம் இருப்போம் என்று புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலிருந்து வாசிக்க கேட்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1கொரி. 10:31,11:1)

அதற்கு நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:40-45)

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, " நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் " என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! " என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் " என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை: வெளியே தன்மையான இடங்களில் தங்கிவந்தார்.எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. மருத்துவர் நோயற்றவருக்கு அன்று நோயுற்றவருக்கே தேவை  என்று மொழிந்த எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும்  திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து நோயினாலும், பிணியாலும் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் உம் வல்லமையின் கரங்கள் அவர்கள் வழியாக வந்து மக்களை ஆசிர்வதிதத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எம் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல தேவையான அருளைத்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும், பிணியினாலும் பாதிக்கப்பட்டு கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் இயங்கிவருகின்ற அன்பியங்கள் அனைத்தும் பிறர்நலனில் அக்கறைக்காட்டிடவும், பொருளாதாரவசதியின்றி மருத்துவசிகிச்சை பெறாமல் வாழ்ந்துவருகின்றவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அவர்களின் அன்பை பிறர்க்கு எடுத்துக்காட்டி சாட்சிய வாழ்வு வாழ தேவையான அருளைத்தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 05-02-2012


முன்னுரை:  இறையேசுவில் பிரியமானவர்களே! பரபரப்பான சூழலில் பல்வேறு பொறுப்புகளால் நமது வாழ்வு நெருக்கடிக்குள்ளாகி தடுமாறுகிறது.  அமைதியில், குடும்பத்தில், உறவுகளில் இறைவனை கண்டு இளைப்பாறுதல் பெற நமது ஆண்டவர் இயேசு அவரது திருப்பலிக்கு அழைக்கிறார். தனிமையான இடத்தில் இறைவேண்டுதல் வழியாக இயேசு  ஆற்றல் பெற்றது போல நாமும் குறிப்பாக நமது குழந்தைகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ (லூக்கா 2:52) இப்பலியில் பங்கேற்போம். 

முதல் வாசக முன்னுரை:  மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது. அந்தப் போராட்டத்தில் அவன் சந்திக்கக்கூடியது ஒன்று நோய். எந்தவிதமான நோய் எனக்குள் வந்து பாதித்தாலும் நான் அதற்கு அஞ்சமாட்டேன் ஏனென்றால் நான் கடவுளிள் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்; என்று துன்புறும் உழியனாகிய யோபு கூறுவதை வாசிக்க கேட்போம்.

யோபு நூலிலிருந்து வாசகம் (யோபு 7:1-4,6-7)

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன: இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்: விடியும்வரை புரண்டு உழல்வேன, என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன: அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்: என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  தமது புகழ்க்காக, நற்பெயருக்காக வாழாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு மக்கட்பணி செய்தவர். நற்செய்திப் பணி வழி நம்பிக்கையை ஊட்டியவர். நற்செய்தி அறிவிக்காவிடில் ஜயோ எனக்குக்கேடு என்று பவுல் அடியார் நம் அனைவரையும் இறையன்புக்குச் சான்றுபகர்வோம் என்றும் நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியாவோம் என்றும் நல்லது செய்வதில் என்றுமே முனைப்பாயிருப்போம் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1கொரி. 9:16-19,22-23)

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு: நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:29-39)

பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்: அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் " என்றார்கள். அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்துவாழவும், அவர்களில் உம் அன்பை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் உற்றார் உறவினார்கள் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.