திருக்குடும்பத்தை நோக்கிச் செபம்

இயேசுவின் திரு இருதயமே ! அமலோற்பவ கன்னிமாதாவின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே! உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இறந்து மன்றாடிக் கேட்டஎவனும் அந்த மன்றாட்டுக்களை அடையாமற் போனதில்லையென்று நினைத்தருளுங்கள். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன்.

இரக்கமுள்ள இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னி மாதாவின் திரு இருதயமே! ஓ! மகிமைப்பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே, அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள். – ஆமென்.

பஞ்சகாலத்தில் செபம்

எலிசேயு இறைவாக்கினரின் காலத்தில் சமாரியாவிலே கடும் பஞ்சத்தைச் சடுதியில் அகற்றி மலிவுண்டாகச் செய்தருளின இரக்கமுள்ள தந்தையே ! எங்கள் பாவங்களின் நிமித்தம் தண்டனையாக வெகு துன்பப்படுகிற எங்களுக்கும் காலத்துக்குத் தகுந்த சகாயம் கிடைக்கும் படி இரக்கம் செய்தருளும். உமது பரம ஆசீரினாலே பூமி அதிக பலனைத் தரும்படி செய்து தேவரீர் தாராளமாய்க் கொடுக்கும் நன்மையைப் பெற்றுக்கொள்ளுகிற நாங்கள் உமக்கு மகிமையும் ஏழைகளுக்கு உதவியும் ஆறுதலுமாய் இருக்கத்தக்கதாக, அதை அனுபவிக்க எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

பூச்சிகளால் அழிக்கப்படுகிற பயிர்களுக்காக செபம்

வானமும் பூமியும் யாவும் படைத்த எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரினால் நலன்களெல்லாம் நமக்குப் பெருகுமாக!

மு.  இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும்.
து.  எங்கள் குரலொலி உம் திருமுன் வருவதாக!

செபிப்போமாக
ஆண்டவரே ! நாங்கள் செய்கிற வேண்டுதலைத் தேவரீர் தயாளக் கருணையுடன் கேட்டருள மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களுக்கு நீதியுள்ள ஆக்கினையாக வந்த இந்த பூச்சிகளுடைய நெருக்கடியை உமது இரக்கப் பெருக்கினால் நோக்கி உமது திருப் பெயருக்குப் புகழ்ச்சி உண்டாகும் படி அவைகளை நீக்கியருளும். அப்படியே இந்த துஷ்டப் பூச்சிகள் உமது ஆணையின் பலத்தினால் தூரத் தள்ளுண்டுபோகவும், இந்தப் பயிர்கள் விக்கினமின்றி நன்றாக விளையவும் இதில் உண்டாகிற பலனும் உமது பணி விடைக்கும், எங்கள் பிழைப்புக்கும் பிரயோசனமாகவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

தாய் தந்தையருக்காக செபம்

இறைவா! என் தாய் தந்தையரை உமகு நேசத்தினுடையவும், வல்லமையினுடையவும் சாயலாக உண்டாக்கி என்னை எல்லாவறிறிலும் அவர்களுக்குக் கீழ்படியவும் அவர்களை நேசிக்கவும் கட்டளையிட்டீரே. எல்லாம் வல்ல இறைவா உமது கற்பனைகளை ஆசையோடு முழு இருதயத்தோடும் நான் கைப்பற்ற எனக்கு உமது அருளைத் தந்தருளும். நான் அன்போடு அவர்களை நேசிக்கவும், மதிக்கவும், அவர்களுடைய கட்டளைகளுக்கு உவப்புடன் கீழ்ப்படிந்து அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கி நடக்கவும், எல்லாவறிறிலும் அவர்களுடைய நலனை விரும்பி அவர்களுடைய தண்டனைகளைத் தாழ்சியோடும் பொறுமையோடும் சகித்துக்கொள்ளவும், எனக்கு உதவிசெய்தருளும்!

அன்புள்ள இறைவா! அகங்காரத்திலும், கலகத்திலும், வைராக்கியத்திலும், பிடிவாதத்திலும், சோம்பலிலும் அசட்டைத்தனததிலுமிருந்து என்னை விடுவித்தருளும. என் எல்லாப படிப்புகளிலும் வேலைகளிலும் என்னைச் சுறுசுறுப்புடையவனாகவும் சோதனைகளில் பொறுமையுடையவனாகவும் செய்தருளும். நான் அப்படியே என் வாழ்நாள் முழுவதிலும் என் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்துநாதர் மூலமாக உமது பிள்ளை என்கிற பெயறுக்குத் தகுதியள்ளவனாய் இருப்பேனாக -ஆமென்.

ஊர்தி ஓட்டுநரின் செபம்

அன்புள்ள இறைத் தந்தையே ! உம்மைத் தொழுது நன்றி செலுத்துகிறேன். இந்த வாகனத்தை ஓட்டும் பொறுப்புமிக்கப் பணியை எனக்கு கொடுத்து, என்னைப் பராமரித்து வருவதற்காக நன்றி செலுத்துகிறேன். இந்த ஊர்தியைக் கவனமாக ஓட்ட எனக்கு உதவி புரிவீராக. இதில் பயணம் செய்வோரையும் ஆசீர்வதித்துக் காத்தருளும்.
இறை இயேசுவே ! எம் அன்னையை எங்களுக்கு அன்னையாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறேன். இறை அன்னையே ! என் அன்பு அம்மா ! அன்று இறைபாலனைப் பத்திரமாக ஏந்தி எகிப்துக்கு பயணமானீரே அதுபோல இன்று நான் ஓட்டுகிற இந்த ஊர்தியையும் உம் கைகளில் ஏந்தி, நாங்கள் சேர வேண்டிய இடத்தைப் பாதுகாப்புடன் சென்றடைய உதவியருளும்.

எங்கள் காவல் தூதர்களே ! எங்களுக்காக இறைவனை மன்றாடுங்கள். இந்தச் சாலையில் பயணம் செய்யும் ஏனைய ஊர்திகளின் ஓட்டுநரும் பாதசாரிகளும் பொறுப்புணர்ந்து கடக்க உதவி புரியும்.

நல்ல பயணத்தின் அன்னையே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித கிறிஸ்டோபரே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.

தாய்மை கொண்ட பெண்கள் செபம்

கன்னியும் தாயுமான புனித மரியாளே ! நீர் இயேசு நாதரை உமது திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது, வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப் பெற்றீரே ! அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில் கிருபையாயிரும்.

நானோ பாவத்தில் பிறந்து எல்லா உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன். ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது. ஆகையால் என் மிடிமையைப் பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி, அதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும்.

மேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும், உம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு, சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

இறை அழைத்தல் பெருக வேண்டுதல்

இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே ! அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே ! இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள இளைஞரை உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும். அனைத்துலக மக்களின் மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச் செய்தருளும். இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில் திருப்பலியை நீர் புதுப்பித்து வருகின்றீர்.

இயேசுவே ! எங்கள் ஆண்டவரே ! எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர். உண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக ஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும். இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும் விளங்கவும் அருள் செய்யும்.

ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும். நன்னெறியில் வளர அவர்கள் கற்றுக் கொள்வார்களாக. அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும் , ஆண்டவரே. - ஆமென்.