ஆண்டின் பொதுக்காலம் 3-ம் ஞாயிறு (III Year)

(நெகே 8: 2-6,8-10; 1கொரி 12:12-30; லூக் 1:1-4; 4:14-21)
முன்னுரை
தவிக்கின்ற மனிதனுக்குத் தேவை வாழ்வு பெற நல்வழி காட்டும் திருநூல், அது என்றும் அழியா இறைவார்த்தைகள் அடங்கிய அற்புதநூல். அது அறியப்பட வேண்டும். புதிய சமுதாயம் படைக்கப்பட வேண்டும். ஏனென்றால் திருநூல் இறைவன் எழுதியக் கடிதம். பதில் எழுதுவது நம் கடமை. இறை பேரன்பின் வெளிப்பாடுதான் திருநூல் என அறிய வேண்டும. இன்றைய முதலாவது மற்றும் நற்செய்தி வாசகத்திலும் திருநூல் பிரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. உயிருள்ள இறைவார்த்தைகள் அடங்கிய எட்டுச்சுருள் வாசிக்கப்பட உயிற்ற, உணர்வற்றிருந்த மனித இதயங்கள் உயிர் பெறுகின்றன. அழுகின்ற நேரமல்;ல. ஆனந்தம் அடைந்து ஆண்டவனை மகிழ்விக்கின்ற நேரம் என்கின்றன. அதற்கு அடிப்படையாக இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
இறைவார்த்தையின் முழு நிறைவான இயேசுவை உணர்ந்திடவும், அவரால் வாழ்வு பெற்றிடவும், இப்பலியில் வரம் கேட்போம் என்றும் நம் குடும்பங்கள் திருநூலைப் போற்றவும், பொருள் புரிந்து வாசிக்கவும் ஆவியின் அருட்கொடைகளால் புதுப்பிக்கப்பட்டு வாழவும் அருள் வேண்டுவோம். ஏன்னில் இன்று இறைவார்த்தை நிறைவேறியது என்ற உறுதியுடன், மகிழ்வுடன் இப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம் (நெகே 8: 2-6,8-10)
கி.மு. 587ல் பாபிலோனிய மன்னன் நெபுகத்தனேசர் எருசலேம் நகர் மீது படையெடுத்தது மட்டுமல்லாமல் யூதர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டு செல்கிறான். ஆனால் கி.மு. 536ல் சைரசு என்ற மன்னன் ஆட்சிக்கு வந்ததும் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு விடுதலை வழங்குகிறான். தாங்கள் இறைவனின் சினத்திற்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டோம் என்பதை உணர்கிறார்கள். இனிமேல் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக மனம் மாறியவர்களாய் உண்மை இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழவும், திருச்சட்ட நூலின் படி வாழவும் உறுதி எடுக்கின்றனர். அப்போது குருவாய் இருந்த எஸ்ராவிடம் திருநூலை வாசிக்கும்படி அணைவரும் தண்ணீர் குளத்திற்கு அருகே வருகின்றனர். இச்சூழலில் திருநூல் வாசிக்கப்படுவதை கேட்போம்.

இரண்டாம் வாசகம் (1கொரி 12:12-30)
தொடக்கக்கால திருச்சபையில் திருமுழுக்குபெற்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் யாரென்றால் யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், உரிமைக் குடிமக்கள், பிற இனமக்கள் ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தூய ஆவியின் அருட்கொடைகளையும் பல்வேறு வரங்களையும் பெற்றவர்களாக இருந்தனர். இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மக்களிடையே ஏற்றத்தாழ்வு தலை தூக்கத் தொடங்கியது. இதை உணர்ந்த திருத்தூதரான பவுல், தூய ஆவியின் வரங்கள் பலருக்கும் பலவேறு வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பது தன் சொந்த வாழ்வுக்காக அல்ல, மாறாக திருச்சபையின் வளர்ச்சிக்காக என்பதைச் சுட்டிக் காட்ட விரும்பி நாம் அனைவரும் கிறிஸ்துவின் மறையுடலாகவும், அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்க்கு செவிக்கொடுப்போம்.

இறைமக்களின் வேண்டல்
1. என் மந்தையின் ஆடுகளை பேணிகாக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன் என்று கூறிய இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் இறைவார்த்தையின் மீது முழுநம்பிக்கை உடையவர்களாக மக்களுக்கு இறைவார்த்தையை அறிவிக்க தேவையான அருளை தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானத்தின் இறைவா! நாட்டையாளும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் பொதுநலத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, சுயநலம் இன்றி மக்களின் தேவையை நிறைவேற்றும் நல்தலைவர்களாய் செயல்பட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கண்பார்வையற்ற பர்த்திமேயுவை பார்த்து நீ போகலாம் உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று என்று மொழிந்த இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் நட்சத்திரங்களாக செயல்பட்டு இறையாட்சியின் விழுமிங்களான அன்பு, நீதி, சமாதானம் அகியவற்றை வாழ்வாக்கி உமது இறைவார்த்தையை நிறைவேற்ற தேவையான சக்தி தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. துன்புற்ற இஸ்ரயேலை நோக்கி நான் ஆறுதல் அளித்து, உங்களை நீரோடைகள் ஓரமாக வழிநடத்தி செல்வேன் என்று கூறிய இறைவா! எம் பங்கிலும், இவ்வுலகிலும் வாழும் ஏழைகள், எளியோர், அனாதைகள், விதவைகள், முதியோர்கள் மற்றும் உடல நோயாளிகள் அனைவரையும் உமது ஆறுதலளிக்கும் கரங்களால் தொட்டு ஆசிரை பொழிந்தருள வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நற்செய்தி முழக்கம் (லூக் 1:1-4; 4:14-21)

சிலர் அடிப்படையான ஒரு கொள்கையை தங்களுக்கே உரித்தான தனிப்பெருங்கொள்கையாக வைத்திருப்பார்கள். இது போன்று விவிலியத்தில் ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடுவரை, படைப்பு முதல் இறுதிவரை நாம் காணும் ஒரு அடிப்படை உண்மை “இறையன்பு”. இறைவன் தனது அன்பரசை உலகிலும், மனிதர் உள்ளத்திலும் அமைக்க எடுக்கும் முயற்சி கிளைப்போல் மீட்பு வரலாற்றில் இன்றும் ஓடுவதை நாம் காணலாம். இந்த அடிப்படையான இறையன்பு நமக்கு கிடைக்க இறைநம்பிக்கை வேண்டும்.
யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெறத் தீர்மானித்தது இயேசு எடுத்த முதல் முக்கியமான முடிவு என்றால், இரண்டாவது முக்கியமான முடிவு இயேசுவின் எண்ணத்தையும், நோக்கத்தையும் நமக்கு தெளிவாக்குகிறது. எல்லாரும் யோர்தானில் பாவங்களை அறிக்கையிட்டுத் திருமுழுக்குப் பெற்று அழிவிலிருந்து தப்பித்துக் கொள்வதன் வழியாக இஸ்ரயேலைக் காத்திட இயேசு நினைக்கவில்;லை. அவர் தேவை என்று கண்டது இன்னொன்று, அதாவது ஏழைகள், பாவிகள், பிணியாளர் போன்றவர்களிடம் அக்கறை காட்டுவது. இஸ்ரயேலில் தவறிப்போன ஆடுகளைத் தேடித் செல்வது - இதுவே இயேசு எடுத்த இராண்டாவது முக்கியமான முடிவு.
யோவான் திருமுழுக்குப் பெற்று மானமாற்றம் அடைய மக்களை அழைத்தார். இயேசுவோ அனைத்துத் தீமைகளிலுமிருந்து மக்களை விடுவிக்கக் தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
திருமுழுக்கு யோவான், மனமாற்றத்திற்கான திருமுழுக்கை வலியுறுத்தினார். இயேசுவோ அதற்கு பதிலாக நம்பிக்கையின் வலிமையை அழுத்திப் பேசினார்.
திருமுழுக்கு யோவான் பாவிகளுக்குப் போதித்தார் இயேசுவோ பாவிகளோடு தம்மை ஒன்றுப்படுதிக் கொண்டார்.
தொழுகைக் கூடத்தில் இயேசு, எசாயா நூலிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசித்து விளக்கம் அளித்தாரா என்பதன்று பிரச்சனை. இயேசுவின் பணியை மிகவும் பொருத்தமாக விவரிக்கின்ற பகுதிகள் இவை, எனவே இப்பகுதிகளைத் தெரிந்தெடுத்து இயேசுவின் பணி எத்தகையதாய் இருந்தது என்று விளக்கிட லூக்கா முனைந்தது முற்றிலும் சரியே.
எசாயா நூல் பகுதிகளில் வருகின்ற காதுகேளாதோர், பார்வையற்றோர், காலூனமுற்றோர், வாய் பேசாதோர், ஒடுக்கப்பட்டோர், உள்ளம் உடைந்தோர், சிறைப்பட்டோர், கட்டுண்டோர் ஆகிய அனைவருமே “ஏழைகள்” மற்றும் “ஒடுக்கப்பட்டோர்” ஆவர். வௌ;வேறு விதங்களில் எழைகளாக இருப்பவர்களுக்கும் வௌ;வேறு வகையில் ஒடுக்கப்பட்டிருந்போருக்கும் இறைவன் எந்தெந்த வழிகளில் நலம் கொணர்வார் என்பதை இப்பகுதிகள் விளக்குகின்றன.
மத் 9,2 “இயேசு அவர்களுடைய நம்பிக்.கையைக் கண்டு முடக்குவாத முற்றவரிடம், மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார்.”
முடக்குவாதமுற்றவரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
மத் 9,29 “பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார்.”
பார்வையற்றோரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
மாற் 1,41-42 “இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.”
தொழுநோயாளரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், தொழுநோயாளரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது போன்று, நமது வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்றால் இறைவார்ததையின் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். அப்படி இல்லை என்றால் நமது வாழ்க்கையில் கண் இருந்தும் குருடர்களாக, கால் இருந்தும் முடவர்களாக, காது இருந்தும் செவிடர்களாக தான் இருப்போம்.
பிரியமாணவர்களே, இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம், நமது வாழ்க்கையிலும் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேற வைப்போம்.

- அ. தாமஸ் சைமன் ராஜ்
இறையியல் 4ஆம் ஆண்டு - 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக