குழந்தை வளர்ப்பு


குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு கலை. ஆனால் பல பெற்றோர்கள் இதற்கு முக்கியதுவம் கொடுப்பது இல்லை என்பதுதான் வேதனை. “பல ஆயிரம் செலவு செய்து பெரிய பள்ளியில் படிக்கவைக்கின்றேன். என் சக்திக்கு மீறி டியூசன் அனுப்புகிறேன். இதைவிட தகப்பன் என்ற முறையில் என்ன செய்துவிட முடியும்?” என்றுதான் பலர் கேட்கின்றனர். இது போதாது. குழந்தைகளுடன் எத்தனை மணி நேரம் செலவு செய்கிறார்கள்? எப்படி செலவு செய்கிறார்கள்? வீட்டிலிருக்கும் போது டீ.வியைப் போடாதே…. விளையாடப் போகாதே என ராணுவ அதிகாரியை போல குழந்தைகளுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தால் குழந்தைகள், “அப்பா, எப்படா வெளியே போய் தொலைவார். கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்” என நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது. பல அறிவுத்திறன்கள் தேவை. குழந்தைகள் சினிமா பாடல் காட்சிகளை டீ. வி யில் பார்த்துவிட்டு அதுபோல டான்ஸ் ஆடுகிறார்களா? “சனியனே என்ன கன்றாவி இது…?” என எரிந்துவிழாமல் முடிந்தால் நடனம் கற்றுக் கொடுங்கள். எவற்றில் எல்லாம் ஆர்வம் இருக்கிறதோ அதைக் கண்டுபிடித்து அவற்றை வளர்க்க உதவுங்கள். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை கம்யூட்டர் இன்ஜினியராகவோ அல்லது ஏதோ ஒரு துறையில் வளர வேண்டுமென விரும்பலாம். உதாரணமாக சச்சின் டெண்டுல்கரை அவரது பெற்றோர், “என்னடா? எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட்னு சுத்திட்ருக்க! ஒழுங்கா படிச்சு முன்னேற வழியைப் பாரு! நீ திறமையான கம்யூட்டர் இன்ஜினியர்னு பேர் எடுக்கனும், தெரிஞ்சுக்கோ” என்று திட்டியிருந்தால் உலகம் புகழும் நம்பர் ஒன் கிரிகெட் வீரராக ஆகியிருக்க முடியுமா? 

எனவே உங்கள் கனவை குழந்தைகள் மேல் சுமத்தக் கூடாது. படிப்பு மட்டும் வாழ்க்கையல்ல என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும். பெற்றோர்கள் ஜாலியாக டீ. வி பார்த்துக் கொண்டு பிள்ளைகளை படி, படி என்றால் எப்படி படிப்பார்கள். “நான் மட்டும் ஹோம் ஒர்க் பண்ணனும். ஆனா அம்மா டீ.வி பார்ப்பாங்க” என்றுதானே எண்ணத் தோன்றும். அதே நேரம் சீக்கிரம் படி, நான் ஒன்பது மணிக்கு சீரியல் பார்க்கனும்” என அவர்கள் தங்கள் அவசரத்தை எல்லாம் குழந்தைகள் மீது காட்டினால் எப்படி, நாம் படிக்கும் வேகத்தில் குழந்தையும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது, சரியா? 
பிரமீடு பற்றி ஒரு விசயத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனுள் இருக்கும் எதுவும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெடாது. சமீபத்தில் ஆராய்சியாளர்கள் சிலர் அதில் சில விதைகளை கண்டெடுத்து மண்ணில் விதைத்துப் பார்த்தார்கள். சில நாட்களில் அவை வீரியத்தோடு விளைந்தன. அதுபோல குழந்தைகளிடம் கூறும் நல்ல வி~யங்கள் உடனடியாக பயன்படாவிட்டாலும் அவை என்றாவது ஒருநாள் அவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். 

இறுதியாக குழந்தைகளை வளர்ப்பது என்பது, மண்ணில் இருந்து தங்கத்தை வெட்டியெடுப்பது மாதிரி. தங்கத்தை வெட்டிப் எடுப்பவர்கள் மண்ணில் தங்கத்தைதான் தேடுவார்களே தவிர, தூசியை அல்ல. அது போல குழந்தைகளிடம் உள்ள சின்னச் சின்னக் குறைபாடுகளையெல்லாம் பூதக்கண்ணாடிகொண்டு பெரிதாக்கிப் பார்க்காதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல வி~யங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவாருங்கள். 

சகோ. ஆல்பர்ட் புஸ்பராஜ்

ஆண்டவரின் திருமுழுக்கு விழா


இறை இயேசுவில் எனக்கு பிரியமானவர்களே!

இறைவார்த்தையை பின்பற்றுவதில் மூன்று விதமான மக்களை நாம் காணலாம்.
  1. முதலாவது நபர் இறைவார்த்தையை வாசிப்பதோடு அல்லது கேட்பதோடு மட்டும் தனது கவனத்தை செலுத்துகிறார். 
  2. இரண்டாவது நபர் இறைவார்த்தையை வாசித்து இறைவார்த்தையின் பொருளை உணர்ந்து கொள்கிறார். 
  3. மூன்றாவது நபர் இருவரையும் விட ஒரு படி மேலே சென்று இறைவார்த்தைக்கு செவிகொடுத்து பொருள் உணர்ந்து, இறைவார்த்தையை தங்கள் வாழ்வில் நடைமுறை படுத்துகிறார். இவர்களே முழுபயனை அடைகின்றனர். 
ஆகவே இந்த மூன்று நிலைகளிலிலும் இன்றைய வழிபாட்டில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்ச்சியுடன் இணைத்து, ஆண்டவர் அருளும் செய்தியையும், அதை நாம் எப்படி நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தி இறையருளை பெறமுடியும் என்று பார்போம்.
1. முதல் நிலை: இயேசு திருமுழுக்குப் பெற்று தண்ணீரை விட்டு வெளியே வரும் போது மூன்று அதிசய நிகழ்ச்சிகளை பார்க்கின்றோம். 
  • வானம் திறந்தது. 
  • தூய ஆவியார் புறா வடிவில் இயேசுவிடம் வருகிறார். 
  • “இவரே என் அன்பார்ந்த மகன்” என்று தந்தையாகிய கடவுள் தனது மகனை உலகிற்கு வெளிப்படுதுகிறார். 
2. இரண்டாம் நிலை: இன்றைய நற்செய்தியின் மூன்று முக்கிய நிகழ்வுகளின் பொருள் என்னவென்று பார்ப்போம்.

1. முதல் நிகழ்ச்சி: வானம் திறந்தது – ஓர் புதிய சகாப்தம்
யூதர்களின் மரபுப்படி கடவுள் விண்ணுலகில் வாழ்பவர், மனிதன் மண்ணுலகில் வாழ்பவன். இவர்களின் உறவுக்கு தடையாக இருப்பது வானம். மனிதர்கள் இறைவனை விட்டு பிரிந்து துன்பங்கள் அனுபவிக்கும் போது அவர்கள் மனம்திரும்பி இறைவனின் ஆசீருக்காக மன்றாடும் போது இறைவன் மக்களின் விண்ணப்பத்தை ஏற்று வானத்தை பிளந்து கொண்டு வருவார் என்பது அவர்களின் நம்பிக்கை. இதைதான் எசாயா 64:1 ல் “இந்த உலகை பாவத்திலிருந்து மீட்க ஆண்டவரே வானங்களை பிளந்து வரமாட்டீரா?” என்று எசாயா இறைவாக்கினர் மன்றாடுகின்றார். இவ்வாறு இஸ்ராயேல் மக்கள் விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடினர். அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்பட்டது. இறைவன் தனது மகனை உலகிற்கு அனுப்பினார். அவரை எல்லோருக்கும் வெளிப்படுத்த இறைவன் அவரின் திருமுழுக்கின் போது வானத்தை திறக்கின்றார். இந்நிகழ்வின் மூலம் கடவுள் மக்களை பாவத்திலிருந்து மீட்க மண்ணுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறார். 

2. தூய ஆவியார் புறா வடிவில் இறங்கி வருதல் - ஓர் புதிய படைப்பு: 
தொடக்க நூலில் இறைவன் உலகை படைத்த பொழுது கடவுளின் ஆவியார் நீர்த்திரளின் மீது அசைந்தாடிக்கொண்டிருந்தது. (தொ. நூ. 1:2) அதே தூய ஆவி யார் இயேசுவின் திருமுழுக்கின் போது புறா வடிவில் வருகின்றார். அத்தூய ஆவியார் புதிய சகாப்தத்தின் புதுப்படைப்பாக நாம் இந்நிகழ்ச்சியில் காண்கின்றோம். 

3. தந்தையின் வாக்கு: - புதிய ஆதாம்
“இவரே என் அன்பார்ந்த மகன், இவரில் நான் பூரிப்படைகிறேன்” என்று கடவுள் மக்களை பாவத்திலிருந்து மீட்க தனது ஒரே மகனை புதிய ஆதாமாக அறிமுகப்படுத்துகிறார். இதைத்தான் புனித பவுல் அடியார் (1கொரி. 15:45-49) வரையிலான வசனங்களில் விளக்குகிறார். 
  • பழைய ஆதாம் மனித இயல்பில் இறைவனால் படைக்கப்பட்டவன் ஆனால் புதிய ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியாராக இருப்பவர்.
  • பழைய ஆதாம் மண்ணிலிருந்து வந்தவன், ஆனால் புதிய ஆதாமோ விண்ணிலிருந்து வந்தவர்.
  • ஆகவே நாம் மண்ணை சார்ந்தவரின் சாயலை கொண்டிருப்பது போல, விண்ணை சார்ந்தவரின் சாயலை கொண்டிருப்போம் என்று கூறுகின்றார். 
சுருக்கமாக பார்த்தால் இயேசு கிறிஸ்து யோர்தானில் பெற்ற திருமுழுக்கு, கடவுள் மக்களை பாவத்திலிருந்து மீட்க மனித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஏற்பட வழிவகை செய்கிறது. இந்த புதிய சகாப்தமே புதிய படைப்பு. மேலும் யேசுக்கிறிஸ்துவின் திருமுழுக்கில் மூவொரு இறைவனின் பிரசன்னத்தையும் நாம் உணரலாம்.

3. மூன்றாம் நிலை: இறைவார்த்தையின் உள்ளார்ந்த செய்தியை உணர்ந்த நாம் நமது வாழ்வில் இறைவார்த்தையை வாழ்வாக்க வேண்டும்.   நம்மில் பலர் பல நேரங்களில் நாம் பெற்ற திருமுழுக்கின் பொருளை அறியாமல் பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மேலும் சிலர் திருமுழுக்கின் சக்தியை தெரிந்தும் செயல்படாதவராக, மற்றவருக்கு மட்டும் போதிப்பவராக வாழ்ந்து வருகிறோம். 
  • இந்த சூழ்நிலையில் இன்றைய வழிபாடு நமக்கு தரும் செய்தியை எப்படி நம் வாழ்வில் பின்பற்றுவது? 
  • நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கின் போது ஆண்டவர் மனித சமுதாயத்தை மீட்க புதிய சகாப்தத்தின் புதியபடைப்பின் புதிய கிறிஸ்து அவனாக அல்லது அவளாக மாற்றப்படுகின்றோம். திருமுழுக்கின் போது மூவொரு இறைவன் நம்முடன் உறவுகொள்கிறார். அப்போது நாம் பழைய ஆதாமின் மூலம் வந்த ஜென்ம பாவத்திலிருந்து புதிய ஆதாமாகிய கிறிஸ்துவால் மீட்கப்பட்டு ஒரு புதிய கிறிஸ்துவனாக அல்லது அவளாக மாற்றப்படுகின்றோம். ஆகவே நாம் அனைவரும் கிறிஸ்துவை மையமாக கொண்ட வாழ்வு வாழ வேண்டும். 
  1. திருமுழுக்கின் போது திருமுழுக்கு பெறுபவர் தூய ஆவியால் அபிசேகம் செய்யப்படுகிறார். ஆக நாம் அனைவரும் தூய ஆவியாரால் அபிசேகம் செய்யப்பட்டவர்கள். தூய ஆவியாரால்  அபிசேகம் செய்யப்பட்ட நாம் எப்படி வாழ வேண்டும்? இதற்கு பதிலை புனித பவுல் அடிகளார், தூய ஆவியாரைப் பெற்ற இயேசு, கடவுளின் வல்லமையால் அலகையின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். ஆகவே திருமுழுக்கு பெற்ற நாம் இயேசுவைப் போல மற்றவருக்கு நன்மை செய்து வாழ வேண்டும். பிறர்க்கு நன்மை செய்வதன் மூலம் நாம் நற்செய்தியை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தலாம்.
  2. திருமுழுக்குப் பெற்றவர் அனைவரும் ஆண்டவரின் ஊழியர். ஆண்டவரின் ஊழியராகிய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? இதற்கு பதிலை எசாயா இறைவாக்கினர் சொல்கிறார். “எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், அதாவது இறைவனே எல்லாம் எனத் திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள மக்களை அழைக்கவும், நோயின் சிறையிலும், பாவத்தின் சிறையிலும், அக்கிரமத்தின் சிறையிலும் அல்லல் படுவோரை விடுவிக்கவும், பல வகையான ஜாதி, மத, இனம் போன்றவற்றில் அல்லல்படுவோரை விடுவிக்கவும், பல வகையான பாவங்களினால் தங்களையே குருடாக்கிக் கொண்டவர்களின் மனக்கண்களை திறக்கவும், அநீதியாலும், அறியாமையாலும் ஒடுக்கப்படுவோர்க்கு உரிமை வழங்கவும், ஆண்டவர் அருள் தருவார் என்ற நம்பிக்கை விதையினை மக்கள் மனத்தில் விதைப்பதும், ஆண்டவரின் ஊழியர் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் ஆகும்.” திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருக்கும் இந்த கடமை உண்டு. அப்படி செய்யவில்லை எனில், நாம் பெற்றுக் கொண்ட திருமுழுக்கின் பயன் என்ன? சிந்திப்போம்…. ஆமென்.
திருத்தொண்டர் அடைக்கலசாமி

இயற்கை


இறைவா!
உன்னை வணங்குகிறேன்.
இயற்கையை படைத்ததற்காய்.
உமது படைப்புக்களே
கவிதை பிறக்க காரணம்
அதுபோல தான்
உமது கைவண்ணமே
கவிஞனின் கருவாக்கம்
இயற்கையே
உன்னை வாழ்த்துகிறேன்
நீ அழகாய் பிறந்ததற்காக அல்ல,
மாறாக
நீ என்னை கவிஞனாய்
வடித்ததற்காய்
தினம் தினம் இரசிக்க
தூண்டும் இயற்கையே - நீ
என் காதலி!


சகோ. இம்மானுவேல்

இயற்கை


ஓசோனில் ஓட்டை
ஓட்டையின் ஊடே புற்றுநோய்
செருக்குடன் கட்டிடங்கள்
செரிக்க வரும் நிலநடுக்கங்கள்
புகையாகிய பூங்காற்று
பூஜ்யமாக்குகிற புயல்
நலிந்த நன்னீர் நாகரீக நோய்கள்
மாண்டு போகும் மரங்கள்
மறந்து போகும் மழைகள்
சேர்கின்ற மணல்
நிலைக்கிற நிலச்சரிவு
ஆம்,
கருவறை இல்லாவிட்டால்
ஏது குழந்தை!
இயற்கையை பாதுகாக்காவிட்டால்
ஏது சுகமான வாழ்க்கை மனிதனுக்கு
சிதைக்க வேண்டாம் இயற்கையை
இயற்கையில் சிதைந்து போவோம்.

சகோ. L. செல்வகுமார்.

கிறிஸ்மஸ் செய்தி

மலர் மணத்தைச் சந்திப்பதுண்டு
வானம் நிலவைச் சந்திப்பதுண்டு
நிலம் நீரைச் சந்திப்பதுண்டு
கடல் கரையைச் சந்திப்பதுண்டு
மயில் மழையைச் சந்திப்பதுண்டு
குயில் சோலையைச் சந்திப்பதுண்டு
இவையாவும் அழகான சந்திப்புகள்தான். ஆனால் இவற்றைவிட ஓர் அற்புதமான சந்திப்பு ஒன்று நம் நடுவே நிகழப்போகிறது. விண்ணகம் மண்ணகத்தை சந்திக்கப்போகிறது. பாசம் பகையைச் சந்திக்கப்போகிறது. ஆம்! கடவுள் மனிதனை சந்திக்கப் போகிறார். கிறிஸ்து பிறப்பிற்காக நம்மையே தயாரிக்கும் காலம் முடிந்து, காத்திருக்கும் கண்களுக்கு விருந்து படைக்க, இதோ மீட்பர் இயேசு பிறந்துவிட்டார்… வாருங்கள்.

மனித வாழ்விலே சந்திப்புகள் பலவிதம். சில சந்திப்புகள் சந்தோசத்தை கொடுக்கின்றன. சில சந்திப்புகள் சங்கடங்களை கொடுக்கின்றன. கண்களால் காண இயலாத கடவுள் கண்களால் காணும் வகையில் மனிதனாக, இயேசு பாலனாக மண்ணில் பிறந்த வரலாற்று நிகழ்வுதான் கிறிஸ்துமஸ் விழா. 

இறைவன் ஏன் மனிதனாக பிறக்க வேண்டும்?

ஆதியிலே இறைவன் உலகைப்படைத்தார்,உயிர்களைப் படைத்தார்.  அவற்றோடு உறவாட தன் சாயலாக மனிதனைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனை படைத்து, அவனுக்கு தன் சாயலைத் தந்து (ஆதி. 1:27) மற்றப் படைப்புகளிடம் இல்லாத அன்பு பாசம் பரிவு போன்றவற்றை தந்து உயர்த்தினார் கடவுள். ஆனால் மனிதனோ இறைஉறவில் நிறைவு பெறாமல், அழிவுக்குறிய உறவைத் தேடினான். தனி வாழ்விலிருந்து குழுவாழ்விற்கு மாறினான்.  கூடிவாழ்ந்தான் கோடி இன்பம் கண்டான். காயின் ஆபேலைக் கொன்றான். கடவுளின் அன்பை இழந்தான். கடவுளுக்கு இணையாக வேண்டுமென்று எண்ணி பாபேல் கோபுரம் கட்டினார்கள். நோவாவின் காலத்தில் மக்கள் கடவுளை மறந்து பாவத்தில் மூழ்கினர். இஸ்ராயேல் மக்களை கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர்களோ திரும்ப திரும்ப பாவச்சேற்றிலேயே விழுந்தார்கள். பல இறைவாக்கினர்கள் வந்தும், அம்மக்கள் மனமாற்றம் அடையவில்லை. எனவே தான் கடவுள் தன் ஒரே பேரான மகனையே உலகிற்கு அனுப்பினார். கடவுள் மனிதனாக பிறந்து மனிதனை சந்திக்க வந்த நிகழ்வைதான் கிறிஸ்து பிறப்பு விழாவாக சிறப்பிக்கின்றோம். இறைவனுக்கு எதிராக மனிதன் இழைத்த குற்றத்தை இறைவன் ஒருவித பரிகாரம் செய்து அவனை மீட்கிறார். அவர் மனிதராகவும் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அப்பரிகாரம் மனிதன் சார்பாக செலுத்தப்பட்டதாக இருக்கும்.  எனவேதான் கிறிஸ்து தம்மையே சிலுவையில் நமக்காக கையளித்தார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது ஏழைகளோடும், சமுதாயத்;தால் ஒதுக்கப்பட்ட மக்களோடும் குழந்தைகளோடும் அன்பு கொண்டிருந்தார். இதன் மூலமாக மறைந்து போன மனிதத்தை மண்ணில் நிலைநாட்டினார். புதைக்கப்பட்டிருந்த மனிதத்தை இயேசு உயிர்ப்பித்தார்.  சிதைக்கப்பட்டிருந்த மனிதனை மாண்புறச் செய்தார். இயேசு இந்த மண்ணில் பிறந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக மரியாளுக்குக் காட்சி கொடுத்த போது கபிரியேல் தூதர் “இதோ கருவுற்று ஒரு மகனை பெறுவீர், அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்” (லூக். 1:30,31) என்று சொன்னார். இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் அல்லது மீட்பர் என்று பொருள். அவர் நம்மை மீட்பதற்காகவே வந்தார்.  இரண்டாவதாக எசாயா இறைவாக்கினர் உரைத்தபடி, “இதோ கன்னி கருத்தாங்கி ஓர் ஆண்மகவை பெற்றெடுப்பார்.  அக்குழந்தைக்கு ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவர் என்று முன்னுரைத்தார். இம்மானுவேல் என்பதற்கு ‘கடவுள் நம்மோடு’ என்று அர்த்தமாகும். இந்த இரண்டு செய்தியும் நமக்கு சொல்லுவது இதுதான், இயேசு நம்மை இரட்சிக்க வந்தார்.  நம்மோடு குடியிருக்க வந்தார். 

இறைமகன் இயேசு அன்று மட்டும் பிறந்திருக்கவில்லை, இன்றும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார். எப்படி? ஏழை, எளியோர், அனாதைகள், நோயாளிகள், முதியோர் என ஒவ்வொருவரையும் அன்பு செய்யும் போது அங்கே இயேசு பிறக்கிறார்.

இன்று மனிதநேயமிக்க இதயங்களிலே இயேசு பிறக்கிறார். மனிதம் மதிக்கப்படுகிற இடமே இயேசு தங்குமிடம்.  வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை – அன்னை தெரசாள். 

வாழ்வது ஒருமுறைதான் அவ்வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். பொன் வேண்டாம், பொருள் வேண்டாம். மண் வேண்டாம், சுகம் வேண்டாம். மாந்தருக்கு உதவிட நல்மனதை தாரும் பாலன் இயேசுவே.  இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து வாழுவோம்.  உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, உறைய உறைவிடம் இன்றி வாடுவோருக்கு நம்மிடம் உள்ளதையும், உள்ளத்தையும் பகிர்வோம்.  பரமனின் அருள் பெறுவோம் எங்கே பகிர்வு உள்ளதோ அங்கே மகிழ்ச்சி பிறக்கிறது. எங்கே மகிழ்ச்சியுள்ளதோ அங்கே பாலன் இயேசு பிறக்கிறார்.  எனவே பகிர்வோம், மகிழ்வோம்.

பிறந்திருக்கும் பாலன் இயேசு உங்களையும், என்னையும் ஆசீரால் நிரப்பிட தொடரும் கல்வாரிப் பலியில் ஜெபிப்போம். 

சிந்தனைக்கு: 
ஆயிரம் முறை இயேசு பெத்லேகமில் பிறந்தாலும் நம் இதயத்தில் பிறக்காவிடில் என்ன பயன்? - ஏஞ்சலுஸ் சிஸ்லெசியுஸ்
திருத்தொண்டர் பர்னபாஸ்

திருவருகை காலம்


வரவிருக்கின்றவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

இறையேசுவில் பிரியமானவர்களே!

திருமுழுக்கு யோவானின் இந்தக் கேள்விகள் நம்மை சிறிது சஞ்சலமடையச் செய்கிறது. “நானோ உங்களுக்கு தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன்.  ஆனால் எனக்கு பின் ஒருவர் வருகிறார், அவர் உங்களுக்கு தூய ஆவியாரால் திருமுழுக்கு கொடுப்பார்.  நான் அருடைய காலடி வாரை அவிழ்க்க கூட தகுதியற்றவன் என்று இயேசுவின் கடவுள் தன்மையை, இயேசுவே மெசியா என்பதை விசுவாச சத்தியமாக அறிக்கையிட்ட திருமுழுக்கு யோவான் இயேசுவிடம் இத்தகைய சந்தேகத்தை ஏன் எழுப்ப வேண்டும்?

“ஏற்கனவே மரங்களின் வேரருகே கோடாரி வைத்தாயிற்று, நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு தீயில் போடப்படும்,” (மத் 3:10).  “அவர் உலக்கை தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார், கோதுமையை தன் களஞ்சியத்தில் சேர்ப்பார்.  ஆனால் பதரை அணையா நெருப்பில் சுட்டெரிப்பார்,” என்று மெசியாவின் செயல்பாடுகளை இறைவாக்காக முன்னறிவித்தவருக்கு இயேசுவின் போதனைகள், செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் யூதர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு, திருமுழுக்கு யோவானிடமும் இருந்தது.  மெசியாவானவர் பாவிகளை அழித்து, அநீதியும், அராஜகமும் நிறைந்த சமுதாயத்தை அழித்து ரோம இராஜ்ஜியத்தையும், யூதாவை சுற்றியுள்ள பகைவர்களையும் அழித்து ஒரு மாபெரும் இராஜ்ஜியத்தை உருவாக்குவார் என்று நினைத்தார்கள்.  திருமுழுக்கு யோவானும் இதே மனநிலையில்தான் மெசியாவை எதிர்பார்த்தார்.

ஆனால் இயேசுவின் போதனைகள், “உங்கள் வலக்கன்னத்தில் அறைபவனுக்கு இடக்கன்னத்தையும் காட்டுங்கள்.  உங்கள் அங்கியைக் கேட்பவனுக்கு மேலாடையையும் கொடுங்கள், உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள், உங்களை துன்புருத்துவோர்க்காக செபியுங்கள்” என்று, அவர்களின் எதிர்பார்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது. எனவே அவர்கள் குழப்பமடைந்திருக்கலாம்.  பாவியாகிய மத்தேயுவை தனது சீடராக ஏற்படுத்திக் கொண்டதும் பாவிகளோடு அமர்ந்து உணவு உண்டதும், திருமுழுக்கு யோவானிடத்தில் சந்தேகத்தை எற்படுத்தி இருக்கலாம்.

இயேசு யோவானின் சீடர்களுக்கு அளிக்கும் பதிலில் தனது நிலையை, தான் மெசியா என்பதை தெளிவுபடுத்துகிறார் இயேசு.  “குருடர் பார்கின்றனர், செவிடர் கேட்கின்றனர், முடவர் நடக்கின்றனர், இறந்தோர் உயிப்பெற்று எழுகின்றனர் என்று நீங்கள் காண்பதையும், கேட்பதையும் யோவானிடம் சென்று கூறுங்கள்” என்று பதிலுரைக்கின்றார் நம் ஆண்டவர் இயேசு.  (லூக் 10:23-24) இந்த பதிலில் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.  ஆதியிலே எத்தனையோ அரசர்கள் இறைவனால் ஏற்படுத்தப்பட்டார்கள்.  சவுல் வந்தார், தவீது வந்தார், சாலமோன் வந்தார், எல்லோரும் ஆட்சி செய்தார்கள்.  ஆனால் இவர்கள் அற்புதங்களை, அருளடையாளங்களை செய்யவில்லை.  இறைவாக்கினர்கள் வந்தார்கள்.இறைவனுடைய வாக்கை அறிவித்தார்கள்.  ஆனால் ஒருவரும் கடவுளின் எல்லையில்லா இரக்கத்தையும், அற்புதங்களையும் சுகத்தையும் நற்செய்தியையும் மக்களுக்கு கொடுக்கவில்லை.  ஆனால் இயேசுவின் போதனைகளில், செயல்பாடுகளில் கடவுளின் எல்லையில்லா இரக்கமும் கருணையும் வெளிப்படுகிறது. 

ஆம்!  கடவுளின் எல்லையில்லா அன்பும் இரக்கமும், நீதியும் இறைமகன் இயேசுவில் வெளிப்படுகிறது.  கடவுளின் எல்லையில்லா இரக்கத்தை அன்பை மனிதன் பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை.  அவருடைய இரக்கத்தை நாடி வருவதில்லை. திருமுழுக்கு யோவான் நினைத்தது போல இறைவன் அல்லது மெசியாவானவர் பாவிகளை அழித்து தண்டனைத் தீர்ப்பு கொடுப்பதாக இருந்திருந்தால் பூவுலகில் ஒரு மனிதன் கூட தப்பி பிழைத்திருக்க முடியாது.  ஏனென்றால் எல்லா மனிதர்களும் தவறக் கூடியவர்கள் பாவிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  கடவுளுடைய இரக்கமும் மனிதனுடைய உண்மையான மனமாற்றமும் இணைகின்ற பொழுதுதான் அங்கு மீட்பு கிடைக்கின்றது.  பழைய ஏற்பாட்டில் பார்கிறோம், நினிவே அழிவுறும் என்று இறைவாக்கு உரைத்தார் யோனா.  ஆனால் அந்த நகரத்தின் அரசன் முதல் ஆண்டிவரை சாம்பலில் அமர்ந்து சாக்குடை உடுத்தி தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகின்றார்கள்.  இறைவனும் அவர்களை மன்னிக்கிறார்.  ஆனால் தன் இறைவாக்கு நிறைவேற வில்லையே என்று முணுமுணுக்கும் யோனாவிடம் தான் எவ்வளவு இரக்கம் மிகுந்த இறைவன் என்று தெளிவுபடுத்துவதை பார்கிறோம்.

திருமுழுக்கு யோவான் கடவுளுடைய நீதிதீர்ப்பையும் தண்டணையையும் மிக அழுத்தமாக ஆக்ரோசமாக வெளிப்படுத்தினாரே தவிர, கடவுளின் எல்லையில்லா இரக்கத்தையும், கருணையையும் வெளிப்படுத்தவில்லை.  அவர் ஒரு பழைய ஏற்பாட்டு மனிதராக கடவுளுக்கு உகந்த முறையில், கடவுளுடைய பார்வையில் பெரியவராக இறைவாக்கினரைவிட மேன்மையானவராக விளங்கினார்.  இறைமகன் இயேசுவின் மூலம் புதிய இறையாட்சி இவ்வுலகில் பிறப்பெடுக்கிறது.  இயேசுவின் வருகை பாவிகளுக்கு புறந்தள்ளப்பட்டவர்களுக்கு வாழ்வு கொடுக்க கூடியதாகவும் எளியோர்க்கு நற்செய்தியை அறிவிப்பதாகவும் அமைந்தது.  இயேவின் மூலம் கடவுள் நமக்கு புதியதொரு வாழ்வை கடவுள் மக்களாகும் உரிமையை கொடுத்திருக்கின்றார். அவருடைய இரக்கத்தை, கருணையை இறைவன் இயேசுவின் மூலம் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று நம்மில் இருக்கும் இயேசுவை அவருடைய அன்பை, கருணையை, இரக்கத்தை நாம் முழுவதுமாக உணர்கின்றோமா, என்று சிந்திக்க இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கின்றது.  “ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்பதை சுவைத்துப் பாருங்கள்,” என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார்.  கடவுளுடைய அன்பை எல்லையில்லா இரக்கத்தை நாம் உண்மையிலேயே அனுபவித்தோமானால் நாமும் அந்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு கொடுக்க கூடியவர்களாக மாறுவோம் என்பதில் ஐயமில்லை. நமது குடும்பங்களில் வாழும் வயது முதிர்ந்த, அன்புக்காக ஏங்கும் பெற்றோர்களை நாம் எவ்வாறு அன்புசெய்கிறோம்? பெற்றோர்கள் நம்மில் காட்டிய அன்பில் நூறுக்கு பத்து சதவீதம் திரும்ப செலுத்தினாலே பல முதியோர் இல்லங்கள் மூடப்பட்டுவிடும். தவறு செய்கின்ற மனைவியோ, கணவனோ மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும்போது இறைவனின் மன்னிக்கும் குணமும், அன்பும் வெளிப்படுகிறது.  அவர்களின் வாழ்வு இறையன்பை உலகிற்கு பறைசாற்றக் கூடியதாக மாறும். இவ்வாறு இறையன்பை தங்கள் வாழ்வில் செயல்படுத்துபவர்கள்தான் புனிதர்களாகின்றனர். 

பலியை அல்ல, இரக்கத்தையே நம் இறைவன் நாடுகின்றார்.  நம்முடைய உள்ளத்தில் வர்மத்தையும் வைராக்கியத்யையும் வெறுப்பையும் வைத்துக் கொண்டு எத்தனை ஆலய படிகளை நாம் ஏறி இறங்கினாலும் இறைவனுடைய ஆசிரையும் அவரது அன்பையும் நாம் அடைவது கடினம்.  மாறாக அவர் நமக்கு வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறைகளை நாம் வாழும் போது இறைவனுடைய இரக்கத்தை, அன்பை அனுபவித்து அதை உலகிற்கு பறைசாற்றக்கூடிய குன்றின் மேல் இட்ட தீபமாக நமது வாழ்வு மாறும்.  வாழ்வின் குறைகள் அழிந்து புது பொலிவு பெற இறைவனிடம் மன்றாடுவோம்.  ஆமென்.

சகோ. சின்னப்பன்

புனித தோமையார் - இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி - ஜீலை 3


இன்று நம் மக்கள் மனதில் தோமா என்றால் ஐயப்பேர்வழி, சந்தேகப்புனிதர் எனும் கருத்து நிலவி வருகிறது.  ஆனால் அவர் “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்” (யோவான் 20:28) என விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல் வேறு யாரும் மனம் விட்டு அறிக்கையிடவில்லையே!  இதையேதான் நாம் விசுவாச அறிக்கை ஜெபமாக கூறுகின்றோம்.

தோமாவுக்கு ஆண்டவர் மேல் தனிப்பற்று.  அதனால்தான் இயேசு இலாசரை உயிர்பிக்க செல்லும் போது மற்ற அப்போஸ்தலர்கள் அவரது உயிர்க்கு ஆபத்து என்று தடுத்தபோது, தோமா, “நாமும் ஆண்டவருடன் சென்று அவரோடு சாக வேண்டியிருந்தாலும் தாயாராய் இருப்போம்” என்று (யோவான் 11:16); கூறியதை சிந்தித்து பார்க்கவேண்டும்.  இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.  தோமா மட்டும்தானா ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் என்றுச் சொன்னதை ஏற்றுக் கொள்ள வில்லை?  மற்றவர்கள் எல்லோரும் “உயிர்த்த ஆண்டவரை பார்த்தோம்” என்று பெண்கள் சொன்னதை நம்பினார்களா? இல்லையே.  “அவர் உயிரோடு இருக்கிறார், என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்ட போது அவர்கள் நம்பவில்லை” (மாற்கு 16:11) சீடர்கள் நம்பவில்லை (மாற்கு 16:13) “தம்மை கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் இறுகிய உள்ளத்தோடு இருந்தமையால் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்” (மாற்கு 16:13.)

தோமா, ஆண்டவரின் விண்ணேற்பிற்குப் பிறகு ‘சென்று போதியுங்கள்’ என்ற ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டு இந்தியாவிற்கு வந்து மறைசாட்சியாக மரித்தார். அவரது கல்லறையை கி.பி 1522ல் போர்த்துகீசியர்கள் சென்னை வந்த போது கண்டுபிடிதிருக்கிறார்கள். 

ஒன்பதாம் வகுப்பில் முழு ஆண்டுத் தேர்வில் எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்த ஒரு மாணவன் சிரித்துக்கொண்டிருந்தான்.  காரணம் கேட்டபோது, “என் பேப்பரை வாங்கி எட்டு மாணவர்கள் காப்பி அடித்தனர்.  அவர்களை நினைத்து சிரிக்கிறேன்” என்றான்.

தேர்விலே காப்பிஅடிப்பது முறைகேடான செயல்.  ஆனால் புனிதர்களை காப்பியடிப்பது வரவேற்கத்தக்கது.  திருத்தூதர் பவுல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போன்று நீங்களும் என்னைப் போல் நடங்கள்” (1கொரி 11:1) என்கிறார்.  புனிதர்கள் அனைவரும் கிறிஸ்துவை மிகவும் பின்பற்றினர்.  எனவே புனிதர்களுடைய வாழ்வு நமக்கு ஓர் எடுத்துக்காட்டு.  அதிலும் புனித தோமாவின் வாழ்வு நம் விசுவாச வாழ்க்கையை ஆழப்படுத்த வழிகாட்டும் வாழ்வு என்றால் மிகையல்ல.  அன்னை மரியா “நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறவில்லை.  மாறாக “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) என்றுதான் சொன்னார்.  புனித தோமாவும் “வாருங்கள் அவரோடு செல்வோம்” என்று (யோவான் 11:16) ல் சொல்வதன் மூலம் ஆண்டவரைப் மையப் படுத்துகிறாரே தவிர தன்னை அல்ல. எனவே தோமாவின் வாழ்வை முன்மாதியாகக் கொண்டு ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடிப்போம். 

சகோ. அந்தோணி தாஸ்