எங்கே மனிதம்?


மனிதன் மனிதனாய் இருந்தான்.
மறைந்திட்ட மனிதம் சொல்லிக்கொண்டது
மனிதன் வாழ்கிறான் என்று...!
மனிதன் மிருகமாய் உருமாறினான்
காட்சிதந்த மனிதம் சொல்லிக்கொண்டது
மனிதனா வாழ்கிறான்? என்று....!
வாழக்கற்றவன்
பிறரை வாழ்விக்க கற்கவில்லை
மனதால் மதி கற்றவன்
மதியின்றி மனிதம் மறந்தான்
வசதிகளால் வறுமை பழித்தான்
மதிப்பினால் 
மரியாதையும் மறந்தான்.
மனிதம்! 
துணைஉயிர் தோன்றியவுடன் 
மலர்ந்திருக்க வேண்டியது
துயரால் உயிர் பிரிந்தும் 
மலர மறுக்கிறது
கல்லுக்குள் ஈரம் கண்டவன் 
மனிதனில் மனிதம் காணவில்லை
கூட்டுக் குடும்பத்தில் 
குடியேற தெரிவதில்லை மனிதனுக்கு 
மனிதம் காக்கும் மண்டபங்களாய் 
மலிந்து காணப்படுகிறது
முதியோர் இல்லங்கள்!
கட்டாயக் கல்வி 
புகட்டிய பெற்றோர்கள்
கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
முதியோர் இல்லங்களுக்கு….!
மந்தைகளில் சில 
கவர்ச்சி மனிதங்கள்
மலிவாய் விற்கப்பட்டனர். 
சில கருப்பு மனிதங்கள்
அதையும் கவர்ந்து சென்றன 
முந்துவோர்க்கு சிறப்பு 
சலுகையும் உண்டாம்!
அரசியலில் மனிதமா?
ஆண்டவா! 
அறியா மக்களிடம் 
நோட்டை வாங்கி 
துண்டுக்களாக்கி கொடுப்பதுதான்…
காந்தி படத்திற்கு பின்னாலல்லவா 
கள்ளப்பணம் கண்டுபிடிக்கப்பட்டன!
கடலே இல்லாத ஊரிலா கப்பல்
அதையும் கேட்டான் 
கதவே இல்லாத ஏழை!
சில மனிதங்கள்
ஓட்டிற்காகவே 
வளர்க்கப்படுகின்றன. 
மதவாதிகளிடம் மனிதம்….. 
அது மதிய நிலவல்லவா?
மதங்களை மடியில் கிடத்தி 
பாலூட்டி வளர்த்ததில் 
எழுந்துசென்று மனிதம் நோக்க 
காலமில்லையாம் 
வெறிநாய் என்றாலும் 
மதவெறிநாய் கடித்தால்
மகிழ்ச்சி…!
மனங்களில் தேடாத இறைவனை 
மதங்களில் தேடி 
மறுத்துவிட்டன மனங்கள்!
நீதிமன்றங்களில் 
நிச்சயம் இருக்குமே மனிதம்!
நிகழ்வதை நம்பமுடியவில்லை…!
காசின்றி காதுகேட்பதில்லை 
வழக்கறிஞருக்கு 
கட்டணமின்றி கதவு 
திறப்பதில்லை…..
பூனையை மீட்க குதிரை
விற்கப்பட்டது. 
குதிரையை மீட்க இருந்த 
குடிசையும் விற்கப்பட்டது…..
குருடன் கண்டதாய் சாட்சி கூற 
அதை செவிடன் கேட்டு 
ஊமையன் பொய் பேசுகிறான்
ஓ… 
புரிந்துவிட்டது பொய்களை
நிறுக்கத்தானோ
நீதி தராசு…?
இதயம் நின்று துடித்தது…?
மருத்துவமணையில் கூடவா
மனிதம் குறைவு….!
உயிர்காக்கும் கட்டிடத்தில் 
மனிதம் காக்க 
சிறுகம்பி கூடவா இல்லை…
பணத்திற்காய் மருந்திட்டவர்கள்
மனிதம் கண்டு 
முகம் சுளித்தார்கள்
ஆடைகளில் இருக்கும் வெள்ளை 
அவர்களின் அகங்களில்
இல்லை…..
உணரப்பட்டது…….!
தீர்க்க முடியா நோயினால்அல்ல!
திரட்ட முடியா பணத்தினால்….!
மனிதத்தை மட்டும் மறந்தவன் 
மறக்கவில்லை
விலங்கிற்கும் ஆறாம் 
அறிவை புகுத்த….
சிங்கத்தை வேடிக்கை காட்ட… 
கிளியை சீட்டெடுக்க…..
யானையை பிச்சையெடுக்க…..
ஐயோ! 
இறைவா நகம் வளர்ந்த அளவு கூட 
மனிதம் வளரவில்லையே!
குரங்கிற்கே குட்டிகரணம் போட 
கற்றுக் கொடுத்தவன் 
குழந்தையையா விட்டுவைப்பான்!
ஏதோ கற்றுக்கொண்டது
காசு கொடுத்தால்தான் 
கடைக்கே செல்கிறது…
விருந்தாக இல்லையெனினும் 
மருந்தாக ஊட்டியிருக்கலாம் 
மனிதத்தை….
படித்தவர்
வாங்கும் சிறப்பு சான்றிதழை விட
பதவியில் இருப்பவரின்
சிபாரிசு சான்றிதழ்
சற்று அதிகமாகவே சாதிக்கிறது
பதவியில் மனிதம் 
பனியளவு கூட இல்லை!
கருக் கலைக்கப்பட்டும் 
கன்னிகளாய் சில பெண்கள்…. 
உறவு அங்கீகரிக்கப்பட்டும் 
கலைக்கப்படும் சில கருக்கள்!
எங்கே மனிதம்?
இளைஞரிடம் இருப்பதாக 
தெரியவில்லை
இருட்டுக்குள் படம் பார்ப்பவர்களிடம் 
மனிதம் மங்களாகத்தானே தெரியும் 
பெண்களுமா மாறிவிட்டார்கள்
மானம் என்றால் 
மரணம் கொள்வார்களே!
மனிதம் என்றால் 
என்ன செய்வார்கள்?
தொலைக்காட்சியின் தொடர்கதையில்
தொலைந்தவர்கள் 
மனிதம் எப்படி தேடுவார்கள்?
மனிதம் மறந்தவர்களுக்காய்
மாநாடு போடுவோம்!
மனிதம் மறந்த முதியோரா?
காய்ந்த மனதை 
அன்பால் உழுவோம் 
மனிதம் மறந்த இளைஞரா?
இங்கும் அங்கும் இலைகளாய் 
துளிர்விடும் மனிதத்தை 
மறவாமல் போற்றுவோம் 
பால் குடிக்கும் குழந்தையா?
வீரத்தை ஊட்டியது போதும், 
மனிதம் ஊட்டுவோம் 
குடிக்கமறுத்தால்
மருந்தாய் ஊட்டுவோம் !
மனிதம் காக்கும் பணி 
நம் 
மனதிலிருந்து முதலில் துவங்கட்டும் 

சகோ. பிரான்சிஸ் அமலதாஸ்.

நிழல்



தென்றல் தவழ காரணமான
மரத்தை வெட்டி
களைத்த மனிதன்
நெருப்பு போன்று சுட்டெரிக்கும்
சு10ரியனின் வெப்பம் தாங்காமல்
இளைப்பாறத் தேடுகிறான்…..
மரத்தின் நிழலை.

சகோ. செல்வகுமார்

துன்பம்


கி. மு: கிறிஸ்துவைப் பின்பற்றும் முன்
கி. பி: கிறிஸ்துவைப் பின்பற்றியப் பின்

கி . மு
துன்பமே எனக்கென்ன நீ நண்பனா?
என்னுடைய வாழ்வில் அடிக்கடி நீ.
துன்பமே எனக்கென்ன நீ
எதிரியா?
பழிவாங்கி பார்த்து சிரிக்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ மழையா?
என்னை முழுவதும்
நனைத்து விடுகிறாய்!
துன்பமே எனக்கென்ன நீ
தூரத்து உறவினரா?
அடிக்கடி எனக்கு போன் செய்கிறாய்!
துன்பமே என்கென்ன நீ தீவிரவாதியா?
சுட்டு சுட்டு மயானத்தில் எரிக்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ
தினமும் வரும் பிறந்த நாளா?
தினமும் கைகொடுத்து
வாழ்த்து தெரிவிக்கிறாய்!
துன்பமே எனக்கென்ன நீ
கல்லூரி காதலியா?
கனவிலும் என்னை தொடருகிறாய்.

துன்பமே எனக்கென்ன நீ
சில் வண்டுகளா?
பூ போன்ற என்னில்
பூதமாக வந்து அமர்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ
life time recharge 
வாழ்நாள் முழுதும்
என்னுடன்……..

கி . பி
இயேசுவே!
எனக்கென்ன நீ
இறப்பினும் வாழ்வா?
நல்லவேளை உன்னை
பின்பற்றினேன்,.
இறப்பதற்கு முன் தெரிந்ததே!
இறந்தபின் தெரிந்திருந்தால்
முடிவில்லா வாழ்வு
முடியாமல் போயிருக்கும்.
முற்றிலும் துறந்து
முழுமையாய் பின்பற்றுவோம்
துன்பங்களும் துகள்களாய் மாறும்!..

சகோ. டேவிட் ரஜேஸ்

நல்ல சமாரியன்


அன்பு இதயத்தில் சுரக்கப்பட வேண்டும்! சுரண்டப்பட கூடாது!  இவ்வுலகில் இரு வகையான அன்பு உண்டு.  1. இறையன்பு, 2. பிறரன்பு. கடவுள் நம்மீது கொண்ட அன்பு அல்லது நாம் அவர் மீது கொள்ளும் அன்பு இறையன்பு எனப்படும். நம் சகோதர சகோதரரிகளோடு கொள்ளும் அன்பு அல்லது அவர்கள் நம்மீது கொள்ளும் அன்பு பிறரன்பு எனப்படும்.
பிறரன்பில் குறைகள் ஏற்பட காரணம் என்ன? நம்மிடம் இருக்கும் சுயநலம் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய நற்செய்தியில் ஒரு மனிதன் ஜெருசலேமிலிருந்து ஜெரிக்கோவுக்கு செல்கிறான் என வாசிக்க கேட்டோம். ஜெருசலேம் என்பது கடவுள் வாழக்கூடிய இடம். விவிலியத்தில் ஜெருசலேம் தேவாலயத்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜெருசலேம் ஒளியின் இடமாக இருந்தது. ஜெரிக்கோ, பகைவர்கள் தங்கி வாழக் கூடிய இடமாக இருந்தது. பாவங்களை கட்டிக்கொண்டு, பிறரின் பொருட்களை கொள்ளையடித்து, சாபத்தை பெற்றவர்களாய் இருளில் வாழந்துக் கொண்டிருந்தனர். நற்செய்தியில் கூறப்பட்ட மனிதனோ ஒளிமிகுந்த ஜெருசலேத்மை விட்டு இருள் நிறைந்த ஜெரிக்கோவை நோக்கி செல்கிறான். பகைவர்களால் தாக்கப்பட்டு செல்வங்களை இழந்து குற்றுயிராய் விடப்படுகின்றான். “பழைய ஏற்பாட்டில் தொடக்க ஆகமத்தில் ஆதாம் ஏவாள் கடவுளின் பிரசன்னத்தில் வாழ்ந்து வந்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளையில் அவர்கள் ஒளியை விட்டு, எந்த மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னாரோ, அந்த இருளான பகுதியை நோக்கி சென்றார்கள். பாவம் என்னும் பாதள குழியில் விழுந்தனர். புதிய ஏற்பாட்டில் இந்த மனிதனும் அதே நிலைக்குதான் ஆளாகியிருக்கிறான். (அருளப்பர் 8: 34) பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமை. (உரோமையர்) 

பாவத்தின் சம்பளம் மரணம்

முதலில் ஒரு குரு தற்செயலாய் செல்ல நேர்ந்தது. அடிப்பட்டுகிடந்தவனை காப்பாற்ற முன் வரவில்லை. காரணம் என்ன? யூதர்களின் சட்டப்படி குரு இறந்தவனையோ அல்லது நோயுற்றிருப்பவனையோ தொட்டால் அல்லது அவன் அருகில் சென்றால் அவர் 7 நாட்கள் கோயில் பணிகள் எதையும் செய்ய முடியாத வண்ணம் தீட்டு என்று ஒதுக்கி விடுவார்கள். எனவேதான் அவர் தன் வழியாய் போனார். இரண்டாவதாக ஒரு லேவியன் ஒருவன் வருகிறான். அவனும் உதவி செய்ய முன் வரவில்லை. ஏன்? நான் ஒரு வேளை அவனை காப்பாற்ற அருகில் செல்லும் போது கள்வர்கள் ஒளிந்திருந்து என்னையும் தாக்க முற்பட வாய்ப்புண்டு என்று யூகித்து பயத்துடன் ஒதுங்கி சென்றான். மூன்றாவதாக நல்ல சமாரியன் வருகிறார். அவனை பார்த்தவுடன் இரக்கம் கொண்டு, அருகில் வந்து அவனின் காயத்திற்கு கட்டுபோடுகிறார். (ஓசே 6:12) வாருங்கள் நாம் அவரிடம் செல்வோம். அவரே நம் காயங்களுக்கு கட்டுபோடுவார். 

ஆம் பாவத்தில் விழுந்து குற்றுயிராய் துடித்துக்கொண்டிருக்கும் நம்மை அவர் மடியில் கிடத்தி பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். எண்ணெய் வார்த்து காயங்களை கட்டுவது, நம்மை மன்னித்து ஆவியாரின்  வல்லமையால் நிரப்புவதை குறிக்கின்றது. பிறகு அவனை ஒரு சாவடிக்கு கொண்டு சேர்க்கிறார். அந்த சாவடிதான் நம் கத்தோலிக்க தாய் திருச்சபை. இந்த திருச்சபையை நிறுவியவர் இயேசுக் கிறிஸ்து. அந்த நல்ல சமாரியனாகிய இயேசு அந்த சாவடிக்காரரிடம் இரண்டு தெனாரியத்தை கொடுக்கிறார். இரண்டு தெனாரியம் என்பது இயேசுவின் இரண்டு கட்டளைகளை குறிக்கிறார். (மாற்கு 12: 30-31) நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன். எல்லாவற்றிகும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது, தன்னைதானே நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பது.

இங்கு யேசு இறையன்பையும் பிறரன்பையும் முன்வைக்கிறார். இயேசு ஜெபிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த நிகழ்வுகளிலும், தந்தை இவரே என் அன்பார்ந்த மகன் இவரிடம் நான் பூரிப்படைகிறேன் என்று சொன்ன நிகழ்வுளிலுமிருந்து இயேசுவிடம் இருந்த இறையன்பு நமக்கு தெளிவாகிறது. இயேசு நோயாளர்கள், அடிமைகள், ஒதுக்கப்பட்டோர் அனைவருக்கும் புதுமைகள், அற்புதங்கள் செய்வதின் வழியாக அவரின் பிறரன்பு வெளிப்படுத்தபடுகின்றது. 

1அருளப்பர் 4:9 – தம் ஒரே பேரான மகனின் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம் மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது. இறைவன் நம்மை அன்பு செய்கிறார். அவரை நாம் அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் புனித சின்னப்பர் கண்ணால் காணக்கூடிய சகோதர சகோதரியை அன்பு செய்யாதவன் கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்யமுடியாது என்கிறார். எனவே அன்பு செய்வோம். அன்பில் வாழ்வோம். மகிழ்வில் திளைப்போம். அகற்கான அருளை வேண்டுவோம். 


திருத்தொண்டர் டோனி 

மரணம் ஒரு மணமகன்


“மனிதன் நினைக்கிறான்
வாழ்வு நிலைக்குமென்று
கடவுள் நினைக்கிறான்
பாவம் மனிதனென்று”
மனிதா மரணத்தை கண்டு அழுகிறாயா? அது
உன் அறியாமையை கண்டு சிரிக்கிறது
மரணம் உனக்கு விருப்பமானவற்றை
பிரித்து விடுகிறது
என்று ஏசுகிறாய் - ஆனால்
மரணம் ஒரு பிறப்பு
மரணம் ஒரு வளர்ச்சி
மரணம் ஒரு மணமகன்
என்பதை நீ அறிந்ததில்லையா?
மரணம் ஒரு பிறப்பு:
இருளின் மரணம் ஒளியின் பிறப்பு
மலர்களின் மரணம் காய்களின் பிறப்பு
அறியாமையின் மரணம் அறிவின் பிறப்பு
சாதியத்தின் மரணம் சமத்துவத்தின் பிறப்பு
உறக்கத்தின் மரணம் தானே விழிப்பு!
மரணம் ஒரு வளர்ச்சி
இலைகளின் மரணம்தான்
கிளைகளின் வளர்ச்சி
இளமையின் மரணம் முதிர்ச்சி
பழமையின் மரணம்
புதியவற்றின் எழுச்சி
கன்னிமையின் மரணம்
தாய்மையின் பிறப்பு
மரணம் ஒரு மணமகன்
மரணம் என்னும் மணமகன்
வாழ்க்கை என்னும் மணமகளை
அழைத்து செல்கிறது
விண்ணகத்தில் நிலைவாழ்வு பெற
ஆம் - “மரணம் ஒரு மணமகன்”


E. எடிசன் ராஜ்

அமைதி


இறையேசுவில் அன்பான சகோதரர்களே, சகோதரிகளே 

எங்கே நிம்மதி என்று மனிதன் தேடி பார்த்து இறுதியில் தற்கொலையில் தன் வாழ்வை முடித்துக் கொள்கிறான். 6000 ஆண்டுகள் முன்பு மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை வரலாற்று ஏட்டில் வடிவமைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த 6000 ஆண்டுகளில் 5700 ஆண்டுகள் ஏதாவது ஒரு மூலையில் அடுத்த நாட்டின் மீது போர்த்தொடுத்து அமைதியில்லா நிலையில் நாட்களை கழித்திருக்கின்றனர். மீதம் உள்ள 300 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? இல்லை. அந்த 5700 ஆண்டுகள் எப்படி சண்டை போடலாம் என்று யோசித்து, ஆயுதங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். கடந்த ஆண்டு ஒரு புகழ் பெற்ற நடிகை தற்கொலை செய்துக் கொண்டாள். அவள் சாகும்முன் தான் கைபட எழுதிய வாசகம்: என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் வாழ்வில் நிம்மதியில்லாததால் நிம்மதியை தேடி செல்கிறேன்”. 

இன்று மனிதன் அமைதியை தேடி அலைமோதிக்கொண்டிருக்கிறான். என் குடும்பம் கடனில் மூழ்கியிருக்கின்றது. இந்த கடன்களையெல்லாம் நான் எப்போது அடைக்கப்போகிறேன் என்று ஏங்கும் கூட்டம் ஒருபுறம், பிரிந்த என்குடும்பம் ஒன்று சேரும் நாள் வராதா? நோயினால் பிடிக்கப்பட்ட நான் சுகம் பெற மாட்டேனா? என் குடும்பத்தில் உள்ள சொத்துப் பிரச்சினை தீராதா? என் குடும்பத்திற்கு எதிராக பிறர் ஏவிவிட்ட பில்லிசு10ன்யம் போன்ற கட்டுகளை உடைத்தெறிய முடியாதா? இப்படி பல கேள்விகளோடு வாழும் நமக்கு இன்றைய முதல் வாசகத்தின் வழியாக கடவுள் சொல்கிறார், நான் என் சமாதானத்தை உங்கள் குடும்பங்களில் ஆறுபோல் பாய்ந்தோட செய்வேன்…. சமாதானம் என்று சொன்னவுடன் நாம் நினைவுக்கு வருவது “பிரிந்தவர்கள் சமரசம் செய்துக்கொண்டு ஒன்று சேர்வது மட்டும் இதன் பொருள் அன்று, கடவுள் சொல்லும் சமாதானம் பல அர்த்தங்களைக் கொண்டது. 

எபிரேய மொழியில் சலோம் (shalom) என்று கூறுவர். சலோம் என்றால் ‘அமைதி’ என்று பொருள். இவ்வார்த்தைக்கு புகழ், செல்வம், நல்வாழ்வு என்று பல அர்த்தங்களை உள்ளடக்கியது என்று பொருள் கொள்ளலாம். கடவுள் சொல்லும் சமாதானமும் மேலே கூறப்பட்டுள்ள பல அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையாகத்தான் இருக்கின்றது. அந்த சாமாதானத்தைதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சீடர்களை அனுப்பிய நிகழ்விலும் பார்கிறோம். “நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் சமாதானம் என்று சொல்லுங்கள்” என்கிறார். 

இயேசு இவ்வுலகிற்கு வந்தது அந்த சமாதானத்தை அகிலம் முழுவதும் கொடுக்கவே. இயேசு பிறக்கும் போது, வானதூதர்கள், “உன்னதத்தில் மகிமையும், மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும் ஆகுக” என்று பாடினார்கள். பலர் இயேசுவை தேடிவந்தபோது, அவர், அவர்களை குணப்படுத்தி, “சமாதானமாய் போ” என்றுதான் சொல்கின்றார். இயேசு பாடுகள் பட்டு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு அச்சத்தில் சீடர்கள் கதவுகளை தாழிட்டு, கலக்கத்தில் என்ன நேருமோ என்று குழம்பியிருந்த போது இயேசு திடீரென்று உள்ளே தோன்றி ‘உங்களுக்கு சமாதானம்’ என்று சொல்கிறார். 

இன்று அந்த சீடர்களைப்போல், நம்முடைய இதயக் கதவுகளை பூட்டி வைத்துக்கொண்டு நடந்ததையும், நடப்பவற்றையும், நடக்கப் போவதைபற்றியம் பலவாறு சிந்தித்து, கலக்கத்தில் துவலும் வேளையில், ஆண்டவர் சொல்வது “உங்களுக்கு சமாதானம்.” இந்த சமாதானம் ஒருவருக்கு மட்டுமன்று, மாறாக உலகுக்கே உரித்தாக வேண்டும் என்று விரும்புகிறார். 
ஆதி ஆகமம் 10ஆம் அதிகாரத்தில் நோவா பெட்டகத்திலிருந்து வெளிவந்த பிறகு அவரின் சந்ததியர்கள் 72 நாடுகளுக்கு சென்று வாழ்ந்தனர் என விவிலிய அறிஞர்கள் சொல்கின்றார்கள். பழைய ஏற்பாட்டின் கணக்குப்படி உலகில் 72 நாடுகள் இருந்தன. புதிய ஏற்பாட்டின் கணக்குபடி 72 சீடர்களை அனுப்புவது உலகம் முழுவதும் அமைதியை கொண்டுபோய் சேர்க்கவே என்று சொன்னால் அது மிகையாகாது. 

எனவே இயேசு இவ்வுலகிற்கு கொண்டுவந்த அமைதி, முதலில் கடவுள் தரும் சமாதானம் நம்மில் குடி கொள்ள ஒத்துழைப்பை தரவேண்டும். புனித அகுஸ்தினார் “என் நெஞ்சம் உம்மை அடையும் வரை இறைவா நிம்மதி இல்லை” என்று கூறுகிறார் . இந்த உலக செல்வங்கள் நிம்மதியை தருவதில்லை. உயிருள்ள தேவனாகிய ஆண்டவர் இயேசுவை தேடும் போதுதான் அமைதி என்பதை இனம் கண்டு கொள்ள முடியும். அதற்கு வேண்டிய அருள் வரத்தை இத்திருப்பலியில் கேட்டு ஜெபிப்போம்! ஆமென்…..

திருத்தொண்டர் டோனி 

ஜெபம்


ஜெபிக்க ஜெபிக்க இறையன்பில் நாளும் வளர்கின்றோம்
கொடுக்க கொடுக்க பிறரன்பில் நாளும் மகிழ்கின்றோம் 
ஆம் எத்துணை அழகான இறையியல் செறிந்த வார்த்தைகள். ஜெபம் கிறிஸ்துவத்தின் அடிப்படையான ஆணிவேர் போன்றது. ஆலமரத்தின் விதை சிறியதாக தன்னுடைய வேர்களை பரப்பி வலிமையடைந்த மரமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. பல்வேறு பறவைகள் தங்கும் சரணாலயமாக தன்னை உருமாற்றிக் கொள்கிறது. கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, நம்முடைய ஜெபமும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலே ஆழ்மனதில் உறைந்து நமக்கும் நம்மை சுற்றி வாழ்வோர் அனைவருக்கும் பலன் தரக்கூடியதாக அமைய வேண்டும். ஜெபத்தினால் நமக்கும் இறைவனுக்கும் இடையே உறவு ஆரம்பமாகிறது. மண்ணுலகில் தந்தைக்கும் உரையாடல் நடைபெறுகிறது. இறைவன்பால் நம்மையெல்லாம் கொண்டு சேர்க்க வல்லதே ஜெபம். நம்மையும் இறைவனையும் ஒன்றாக சேர்க்க வல்ல உடன்படிக்கை பெட்டகமாக ஜெபம் செயல்படுகிறது. காதலன் காதலியிடம் எவ்வளவு நெருக்கமான உறவு கொண்டு இருப்பானோ அதைப்போல ஜெபமானது நம்மை மூவொரு இறைவனோடு நெருக்கம் கொள்ளச் செய்கிறது. 

ஜெபம் வேண்டுதலும், கேட்க்கபடுதலும் 

பழைய ஏற்பாட்டில்
சாலமோன், தான் கட்டிய ஆலயத்தில் இறைவனை வந்து தங்கும்படி கெஞ்சி மன்றாடுகிறார். அதோடுமட்டுமல்லாது இந்த ஆலயத்தில் நின்று கொண்டு கைகளை உயர்த்தி இறைஞ்சும் பொழுது உம் மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும் என்று மன்றாடினார். சாலமோன் இவ்வாறாக மன்றாடிய பின் வானத்திலிருந்து நெருப்பு இறங்கி எரி பலியையும் மற்றப்பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சிமை கோவிலை நிரப்பியது. (2குறிப்பேடு 7:1) யூதாவின் வழிமரபினரான யாக்கோபு இஸ்ராயேலின் கடவுளை நோக்கி “கடவுளே மெய்யாகவே நீர் எனக்கு ஆசி வழங்கி என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னை துன்புறுத்தாது, நீர் பாதுகாத்தருள்வீராக! என்று மன்றாடினார். (1குறிப்பேடு 4:10) எல்கானாவின் மனைவி அன்னா மலடியாய் இருந்தார். அன்னா தனக்கு மகப்பேறு அருளுமாறு இறைவனிடம் கெஞ்சி மன்றாடினார். ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார் ( 1சாமுவேல் 1:19) இப்பையனுக்காகவே நான் வேண்டிக் கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை கேட்டருளினார். (1சாமுவேல் 1:27). 

இறைவாக்கினராகிய எலியா, ஆகாபு அரசிடம் “நான் பணிபுரியும் இஸ்ராயேலின் கடவுளான ‘வாழும் ஆண்டவர்’ மேல் ஆணை! என் வாக்கினாலன்றி வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது” என்றார் (1அரசர்கள் 17:1). பல நாட்களுக்குப் பிறகு பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில் ஆண்டவர் எலியாவிடம் “அகாயு உன்னைக் காணுமாறு போய் நில், நான் நாட்டில் மழைப் பெய்யச் செய்வேன்” என்று கூறினார். (1அரசர்கள் 18:1) ஆகாபு உணவும் பாணமும் அருந்தச் சென்றபின் எலியா கார்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக் கொண்டார். (1அரசர்கள் 18:42). இதற்க்கிடையில் வானம் இருண்டது. கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது பெரும் மழைபெய்தது. (1அரசர்கள் 18:45) 

அமிதாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. நினிவே நகருக்கு சென்று அதற்கு அழிவு வரப்போகிறது என்ற அறிவிக்கச் சொன்னார். ஆனால் ஆண்டவரின் திருமுன்னின்று தப்பியோட தர்சீசுக்கு பயணப்பட்டார். ஆண்டவர் கடலில் கொடுங்காற்று வீசும்படி செய்தார். படகில் இருந்தவர்கள் யோனாவை கடலில் வீசி எறிந்தார்கள். பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கியது. யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறே தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடினார். (யோனா 2:1) ஆண்டவர் அந்த மீனுக்கு கட்டளையிட அது யோனாவை கரையிலே கக்கியது. (யோனா 2:10) யோபு வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் அறிந்த ஒன்றே. துன்பங்கள், சாவுகள், பேரிழப்புகள் மத்தியிலே இறைவனைப்பற்றி அவதூராக பேசாமல் இறைவனைப் புகழ்ந்தேத்தினர். ஆனால் அவர் நண்பர்கள் இறைவனைப் பற்றி சரியாக பேசவில்லை, எனவே ஆண்டவர் யோபுவை அவர்களுக்காக மன்றாட செய்தார். யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடிய பிறகு ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் கொடுத்தார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார் (யோபு 42:10).

நாம் இறைவனிடம் இடையறாது ஜெபிக்கும் பொழுது நம் தேவைகளை நிறைவேற்றுபவராக, சோர்ந்துபோன தருணங்களில் அரவணைக்கும் அன்பு தெய்வமாக நம்மோடு ஒவ்வொரு நொடிப்பொழுதும் தங்கி இருக்கிறார் நம் ஆண்டவராகிய இறைவன். 

புதிய ஏற்பாட்டில்
புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே ஜெப வீரராய் திகழ்கிறார். ஜெபத்தில் தீராத ஆர்வம் கொண்டவராயிருகிறார். கிறிஸ்துவின் பிறப்பு, ஞானஸ்நானம், பணிவாழ்வு, போதனைகள், புதுமைகள், இறப்பு, உயிர்ப்பு அனைத்துமே ஜெபத்தோடு இணைந்ததாக காணப்படுகிறது. கிறிஸ்து தன் தந்தைக்கு நன்றி கூறுவதும், பாடுகளின் மலைமேலும் இரவுநேரத்திலும் (லூக் 6:12) தனிமையிலும் (லூக் 9:18) பாலைவனத்திலும் (லூக் 5:16) இடையறாது ஜெபிக்கிறார். இறைமக்களாகிய நம் அனைவருக்கும் கிறிஸ்துவே முன் உதாரணமாக திகழ்கிறார். 

புனித லூக்கா தன்னுடைய நற்செய்தியிலே “ஜெபம்” பற்றிய மூன்று உவமைகளை கூறுகிறார். 
  1. காலம் தாழ்ந்து வந்து உதவி கேட்கும் தன் நண்பனின் தொல்லையின் பொருட்டாவது அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார்” என்கிறார் கிறிஸ்து (லூக் 11:5-8) கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள். இறைசமூகமாகிய நாமும் இறைவனிடம் கேட்க வேண்டும். (லூக் 11:9-10) 
  2. இரண்டாவதாக நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமையிலே மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனறு இயேசு கூறுகிறார். தாம் தேர்ந்து கொண்ட மக்களின் மன்றாட்டை கேட்பாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நம் தேவன் நாம் கேட்பதற்கு முன்னமே நமக்கு என்ன தேவை என்பதை அறிந்தவராயிருக்கிறார். என்ன தேவை என்பதை அறிந்து தக்க காலத்தில் நமது மன்றாட்டுகளை நிறைவேற்ற காத்திருக்கிறார். (லூக் 18:1-8)
  3. மூன்றாவதாக பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையிலே நாம் எவ்வாறு தாழ்மையோடு ஜெபிக்க வேண்டும் என்று கூறுகிறார்.(லூக் 18:9-14).
நம் வாழ்வில் ஜெபம் 
கடவுளே உனக்கு கண் இல்லையா? காது இல்லையா? என்று புலம்புகிறோம். நம்முடைய ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் தாழ்ச்சி, நேர்மை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம். ஜெபமானது பயிற்சியாக இல்லாமல் நமது வாழ்வாக மாற வேண்டும். நமது தேவைகளான நல்ல வேலைக்கிடைக்கவும், வீடு வாங்கவும் குணம் பெறவும் மட்டுமல்லாது, இறைவனை நம் உள்ளத்திலே கொண்டுவரக் கூடிய கருவியாக செயல்பட வேண்டும். தாழ்ச்சி நிறைந்த மனதோடும் (2 குறிப்பேடு 7:14) திறந்த இதயத்தோடும் (எபி 29:13) ஆண்டவரிடம் நாம் மன்றாடும் போது விண்ணக மலையிலிருந்து நமக்கு நிச்சயம் செவிசாய்ப்பார். ஜெபமானது இறைவனை வழிபடவும், மனம் திருந்தி வாழவும், பிறருக்காக ஜெபிக்க உதவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட வரங்களுக்காக நாம் இத்திருப்பலியிலே மன்றாடுவோம். ஆமென்.

சகோ. ஜோசப்