நோயில் பூசுதல்


நோயில் பூசுதல் - மறையறிவு

நோயில் பூசுதல் என்னும் திருவருள்சாதனமானது குணப்படுத்தும் திருவருள்சாதனம். மனிதனின் நோயும் இறப்பும் கடவுளின் திட்டத்தில் இருந்ததில்லை. இயேசுவே பல முறைகளில் நோயுற்றவர்களை குணமாக்குவதையும், இறந்தோரை உயிர்ப்பிப்பதையும் நற்செய்தியில் நாம் காண்கிறோம்.

தாய் திருச்சபையும் நோயுற்றோருக்கு சிறப்பான பணியைச் செய்யக் காத்திருக்கின்றது. நோயுற்றோர்க்கு நற்கருணை வழங்குவதிலும், நோயுற்றோரை மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ சென்று பார்த்து வருவது குருக்களின் முக்கிய கடமையாகும். உடலும் ஆன்மாவும் சேர்ந்ததுதான் மனிதன். மனிதனின் உடல்நலத்திலும் ஆன்மீகநலத்திலும் நலம் பெற்று வாழ திருச்சபை பல்வேறு வகைகளில் உதவிசெய்கிறது.

நாம் சுகவீனமுற்றிருக்கும் போது பயப்படுகிறவர்களாகவும் மனத்தளவில் சோர்வுற்றவர்களாகவும் காணப்படுகிறோம். பலவேளைகளில் கடவுள் நம்மோடிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். நமது சுகவீனத்தில் இயேசுவே நமக்கு துணையாய் இருந்து நமக்கு பலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதுவும் நோயில் பூசுதல் என்னும் திருவருள்சாதனத்தின் வழியாக நமக்கு நற்சுகத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கிறார்.
இயேசு தம் பன்னிரு சீடர்களைச் சுற்றிலுமுள்ள ஊர்களுக்கு அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுச் சென்று, மக்கள் மனம் மாற வேண்டும் என்று பறைசாற்றினார்கள். பல பேய்களை ஓட்டினார்கள். உடல் நலமந்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள் (மாற்கு6 : 12, 13)
இவ்விதம், நோயில் பூசுதல் திருவருள்சாதனத்தை இயேசு நிறுவினார் என்று அறிகிறோம்.

புனித யாகப்பரும் இதை உறுதிபடுத்தி, பரிந்துரைக்கிறார்: உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவர். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். (யாக்.5 : 14, 15) சாவின் ஆபத்தில் இருக்கத் தொடங்கும் போதே அத்தருணம் இந்த அருள்சாதனத்தைப் பெறும் சரியான நேரம் என உறுதியாகச் சொல்லலாம் (திருவழிபாடு 73)

இந்த அருள்சாதனத்தால் இறை நம்பிக்கை வளர்கிறது, இறப்பின் போது ஏற்படும் கவலைகளையும் சோதனைகளையும் தாங்க உறுதியான அருள், இறைவனின் திருவுளமாயின் நோயினின்று விடுதலை, பாவமன்னிப்பு, கழுவாய் கிடைக்கின்றன.



தொடக்க சடங்கு

குரு: ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.

குரு: (நோயாளியின் மீதும் அறையிலும் தீர்த்தம் தெளித்துக் கொண்டு) இத்தீர்த்தம் நாம் பெற்ற திருமுழுக்கை நினைவூட்டுவதாக, தம் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட கிறிஸ்துவையும் நமக்கு நினைவுப்படுத்துவதாக.
அன்புள்ள சகோதரர்களே, நோயுற்றோர் உடல் நலம் தேடி ஆண்டவரிடம் வந்தார்கள் என்று நற்செய்தி கூறுகிறது. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்காக கொடிய பாடுபட்ட எம்பெருமான், இதோ, தம் பெயரால் கூடியிருக்கும் நம் மத்தியில் எழுந்தருளியிருக்கிறார்.
உங்களுள் யாரேனும் நோயிற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர் மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும் போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார் என்று அப்போஸ்தலரான புனித யாகப்பர் வழியாக நமக்குக் கட்டளை தருபவரும் அவரே.
எனவே, நோயிற்றிருக்கும் நம் சகோதரர் (சகோதரி) மீது கிறிஸ்து பெருமானின் அருளும் வல்லமையும் இறங்கி இவரது வேதனையைத் தணித்து, உடல் நலம் அருளுமாறு உருக்கமாக மன்றாடுவோம்.

மன்னிப்பு

குரு: சகோதரரே இத்திருச்சடங்கில் நாம் தகுதியுடன் பங்கு பெற, நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

எல்: எல்லாம் வல்ல இறைவனிடமும்...

குரு: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

மக்.: ஆமென்.

இறைவாக்கு

சகோதரரே, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் கேட்போம்
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்,.. (மத். 8 ~ 5 - 13)

மன்றாட்டுக்கள்

குரு: சகோதரரே, நம் சகோதரர் (சகோதரி) ....க்காக இறைவனைத் தாழ்ந்து பணிந்து விசுவாசத்தோடு வேண்டிக் கொள்வோம்.
  1. ஆண்டவரே, இத்திருப்புசுதல் வழியாகத் தேவரீர் பரிவன்புடன் இவரைச் சந்தித்துத் தேற்றியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.
  2. தீமை அனைத்திலுமிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. இங்குள்ள நோயாளிகள் அனைவருடைய வேதனைகளையும் நீர் தணித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் நீர் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. இவரைப் பாவத்திலிருந்தும், சோதனை அனைத்திலுமிருந்தும் விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குரு: உமது பெயரால் நாம் இவர் தலைமீது கைகளை வைப்பதால், இவருக்கு நல் வாழ்வும், உடல் நலமும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

திரு எண்ணெய் மீது நன்றி மன்றாட்டு

குரு: எங்களுக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் உம் திருமகனை உலகிற்கு அனுப்பிய எல்லாம் வல்ல தந்தையாம் இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: எங்கள் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்து, எங்கள் பிணிகளைப் போக்கத் திருவுளமான ஒரே திருமகனான இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: உமது நிலையான வல்லமையால் எங்கள் உடலின் சோர்வினைப் போக்கி, திடப்படுத்தி எங்களுக்குத் துணை நிற்கும் தூய ஆவியாம் இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: அன்புத் தந்தையே, உம் அடியார் மீது திரு எண்ணெய் பூசுகிறோம். இதனால் இவர் வேதனை தணிந்து, ஆறுதல் பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

திரு எண்ணெய் பூசுதல்
(குரு நோயாளியின் நெற்றியிலும் கைகளிலும் திரு எண்ணெய் பூசி கூறுவதாவது)
இப்புனித பூசுதலினாலும், தம் அன்பு மிகுந்த இரக்கத்தாலும், ஆண்டவர் தூய ஆவியின் அருளைப் பொழிந்து உமக்குத் துணை புரிவாராக.

எல்: ஆமென்.

குரு: இவ்வாறு, உம் பாவங்களைப் போக்கி, உமக்கு நலம் அளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக.

எல்: ஆமென்.

குரு: செபிப்போமாக. இரக்கமுள்ள எங்கள் மீட்பரே, தூய ஆவியின் அருளால், இந்த நோயாளியின் சோர்வையும் பிணிகளையும் தணித்து, இவருடைய புண்களை ஆற்றி பாவங்களைப் போக்கி, உள்ளத்திலும் உடலிலும் இவர் படும் வேதனைகளை அகற்றி, உள்ளும் புறமும் இவர் முழுமையாக நலம்பெறத் தயைபுரியும். இவ்வாறு இவர் உமது பரிவன்பினால் நலமடைந்து, பழைய நிலை பெற்று, தம் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு கற்பித்தபடியே நாம் ஒருமித்து இறைவனை வேண்டுவோம்.
எல்: பரலோகத்தில் இருக்கிற....
(தேவைப்படின், இங்கு இறுதி வழியுணவு வழங்கலாம்.)

ஆசீர்..........

குரு: தந்தையாகிய இறைவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: இறைவனின் திருமகன் உம்மைக் குணப்படுத்துவாராக.

எல்: ஆமென்.

குரு: தூய ஆவி உம்மீது ஒளிவீசுவாராக.

எல்: ஆமென்.

குரு: உமது உடலைக் காத்து ஆன்மாவை மீட்பாராக.

எல்: ஆமென்.

குரு: உமது உள்ளத்துக்கு ஒளிதந்து உம்மை வானக வாழ்வுக்கு வழி நடத்துவாராக.

எல்: ஆமென்.

குரு: இங்கிருக்கும் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக