திருமணம்


திருமணம் - மறையறிவு

முன்னுரை:  அன்பும் பிணைப்பும்: கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்குகிறார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்பு@ பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களையே முழுமையாக தன்னலமற்ற அர்ப்பணிப்பால் ஒரு குடும்பமாக வாழ அழைக்கப்படுகிறார்கள்.

உடன்படிக்கை: கத்தோலிக்க திருமண அருள்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவனும் மனைவியும் எந்தவித வறுப்புறுத்தலுமன்றி, எவ்வித வெளி அச்சுறுச்துதலுமின்றி முழுமனதுடன் பரிமாறிக்கொள்ளும்

வாக்குறுதி: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருள்சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. குருவும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளளே. இவ்வாக்குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது. 

கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் இப் புது நிலமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்கு இந்த அருள்சாதனத்தின் வழியாக வலுப் பெறுகின்றனர். ஒருநிலையில் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இந்த திருவருள்சாதனத்தின் ஆற்றலால் அவர்கள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர், விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்கள் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர், அவ்விதமே ஒருவர் ஒருவரைப் புனிதப்படுத்துகின்றனர், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகிறார்கள்.

திருச்சபையின் வழிகாட்டுதல்: குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர் என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் புனிதமடையத் தங்களுக்குரிய வகையில் உதவுகிறார்கள். (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை: 48) 
திருமண அன்பு திருமணத்திற்கே உரிய செயலாகிய தாம்பத்திய உறவில் வெளிப்படுத்தப்படுகிறது, முழுமையடைகிறது. ஆகையால் எச்செயல்கள் வழியாக மணமக்கள் தூய்மையான முறையில் தமக்குள் நெருங்கி ஒன்றிக்கிறார்களோ, அச்செயல்கள் நேர்மையானவை, மாண்பு பெற்றவை.... மணமக்கள், புனித வாழ்வு நடத்துவதற்குரிய அருளால் வலுப்பெற்று, அன்பின் உறுதி,பெருந்தன்மையுடைய உள்ளம்,தியாக உணர்வு ஆகியவற்றை விடாமுயற்சியடன் கடைப்பிடித்து அவற்றை அடைந்திட செபத்தில் வேண்டுதல் தேவை. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:49)

குழந்தைகள் திருமணத்தில் மிகச் சிறந்த கொடையாக இருப்பதுடன், பெற்றோரின் நலனுக்கும் அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். (2 வத். சங்க ஏடு:இன்றைய உலகில் திருச்சபை:50)

மணமக்களே தங்களுக்குள் ஒரே அன்பாலும் மன ஒற்றுமையாலும் ஒருவர் ஒருவரை புனிதப்படுத்துவதாலும் இணைந்திருப்பார்களாக. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:52)

தயாரிப்பு: இத்திருவருள்சாதனத்தைப் பெறுவதற்கு தக்க தயாரிப்பு தேவை. இத்தயாரிப்புக்காக ஒவ்வொறு பங்கிலுமோ அல்லது மறைவட்ட அளவிலோ அல்லது மறைமாவட்ட அளவிலோ பயிற்சி வகுப்புகள் அல்லது கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இப் பயிற்சி வகுப்புகள், திருமணம் முடிக்க இருக்கும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமண வயது வந்த ஆண், பெண் யாரும் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கு கொள்ளாம். 

ஆலோசனைகள்:  ஆன்மீக தயாரிப்பு: திருமணம் என்பது வாழ்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி. என்றும் நினைவில் நிற்கக்கூடியது. இதற்கு நல்ல தயாரிப்புடன் பெற்றோரும் மணமக்களும் ஆயத்தம் செய்யவேண்டும். மணமகனும் மணமகளும் ஆன்மீக தயாரிப்பாக நல்ல பாவசங்கீத்தனம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் மணமக்கள் இதைச்செய்ய பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மணமக்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் வாய்ப்பு இருந்தால் அவர்களும் இந்திருவருள்சாதனத்தைப பெறுவது நல்ல காரியம். தங்கள் இல்வாழ்வு நன்றாக அமைய மணமக்கள் வேண்டுவதோடு இரு குடும்பங்களும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். மற்ற எல்லா ஏற்பாடுகளை திட்டமிட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்வது போல் திருப்பலிக்கும் செய்ய முன் வரவேண்டும்.

திருப்பலி தயாரிப்பு: முதன்முதலாக சரியான நேரத்திற்கோ அதற்கு முன்னதாகவோ மணமக்கள் ஆலயதிற்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும். குருக்களையும் மற்றவர்களையும் நமது சௌகரியத்திற்காக காக்க வைப்பதை தவிற்க வேண்டும். அதற்காக பெற்றோர்கள் - சடங்குகள்,அழகு படுத்துதல், ஆசி பெறுதல், வாகன ஏற்பாடு, இசை முழக்குவோர், எல்லவற்றையும் தக்க நேரத்தில் தயாராக்க கவனமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலயத்தையும் அலங்காரம் செய்ய தகுந்த உறவினர்களையோ முடியாத பட்சத்தில் பூக்களை கொண்டாவது பீட அலங்காரங்களைச் செய்யலாம். வாசகங்களை மணமக்களே வாசிக்க முன்வரவேண்டும். அல்லது மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் வாசிக்க முன்வரலாம். அதை முன்னரே பங்குத் தந்தையிடம் ஆலோசனை செய்து வாசகங்களை வாசித்துப் பழகி வரலாம். சிறப்பான விசுவாசிகள் மன்றாட்டை குடும்பத்தாரே தயார் செய்து பாடலாம் அல்லது வாசிக்கலாம்.(இந்த இணையத்தளத்தில் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது). மணமக்களும் அவர்களின் குடும்பத்தாரும் காணிக்கைப் பவனியில் கலந்து கொள்ளாம். மனக்கலக்கத்தோடும் சோகமான முகத்துடனும் வருவதை தவிற்க முயலவேண்டும். மகிழ்ச்சியோடு புதிய வாழ்கையை இறைவனின் திருமுன்னிலையில் ஆரம்பிக்க போகிறோம் என்ற உணர்வுடன் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வரமுற்படவேண்டும். பராக்கைத் தவிர்த்து திருப்பலியில் அனைவரும் பக்தியோடு மணமக்களுக்காக ஜெபிப்பது மிக மிக முக்கியம். 

சம்பிரதாயச் சடங்குகள்: சடங்குகள் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் சிறுபிழைகள், எதிர்பாராத அசௌகரியங்கள், குறைகள் ஏற்படும போது அதை பெரிது படுத்தாமல், பெருந்தன்மையுடனும் விட்டுகொடுத்தும், நான் பெரியவன் நீ பெரியவன் என்று பெருமை பாராட்டாமல் இரு குடும்பத்தாரும் இணங்கிய முறையில் நடந்துகொள்வது மணமக்களுக்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதை நினைவில் இருத்தி திருமணவிழாவினை இரு குடும்பத்தாரும் அனைவரும் போற்றும் படியாக நடத்திக்காட்ட முன்வரவேண்டும்.



வருகைச் சடங்கு :

(குரு பூசைக்குரிய திருஉடைகள் அணிந்து பணியாளரோடு ஆலய வாசலிலே அல்லது வசதியைப் பொறுத்து, பீடக்கிராதியிலே நின்று வரவேற்கிறார் )

குரு : அன்புமிக்க மணமக்களே, திருமண அருள்சாதனத்தை முறையே நிறைவேற்றி இறைவனின் அருளைப் பெற அவரது திருச்சன்னிதியை நாடி வந்திருக்கிறீர்கள். உங்களோடு இன்று திருச்சபையும் மகிழ்கிறது. பரமனின் திருமுன் பக்தியுடன் வருக! என உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

(பணியாளர் முன் செல்ல, பின்னர் குரு, மணமக்கள், பெற்றோர், சாட்சிகள் என்ற வரிசையாக பவனி பீடத்திற்கு செல்லும். அப்போது மக்கள் வருகைப் பல்லவி பாடுவர்.)

வருகைப் பல்லவி (சங். 19  3,5)

ஆண்டவர் தம் திருத்தலத்தினின்று உங்களுக்குத் துணைசெய்வாராக. சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் இதயம் விரும்புவதை அவர் உங்களுக்கு அருள்வாராக! உங்கள் கருத்தையெல்லாம் நிறைவேற்றுவாராக!

பூசையின் தொடக்கச் சடங்குகள்:

வருகைப் பாடல்
  
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே !

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம் 
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் -2
பரிவுள்ள இறைவன் திருவுளம் ஏற்போம் - அன்பினில்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்
பிறனையும் நம்மைப் போல் நினைத்திடவேண்டும் - அன்பினில்


குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
மக்கள்: ஆமென்.
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.

மன்னிப்பு வழிபாடு:

குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.
( சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதரர் சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவரியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமேஎன் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய மரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன். 
குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

மக்கள்: ஆமென்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.

வானவர் கீதம்:

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.

ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.

(பாடல் திருப்பலியில்) 

உன்னதங்களிலே இறைவனுக்ககே மாட்சிமை உண்டாகுக. 
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே. 
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம். 
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். 
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே. 
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே. 
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே. 
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே. 
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர். 
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர். 
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர். 
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர். 
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர். 
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர். 
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் 
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.

சபை மன்றாட்டு :

குரு : செபிப்போமாக.
அனைத்துலகையும் ஆண்டு நடத்தும் இறைவா, திருமண இணைப்பை ஒரு மாபெரும் அன்பின் அருள்சாதனமாகவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள அன்புறவின் அடையாளமாகவும் ஏற்படுத்தியதற்காக உம்மைக் போற்றுகிறோம். உம்முடைய பிள்ளைகளாகிய... இவர்களுக்காக நாங்கள் புரியும் வேண்டுதல்களைக் கேட்டருளும். இவர்கள் உம்மீதும் ஒருவர் ஒருவர்மீதும் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையால், தங்களது அன்பை இன்று ஒருவர் ஒருவருக்காக அர்ப்பணிக்கிறார்கள். இவர்களது வாழ்வு அந்த அன்பின் பேருண்மைக்குச் சான்று பகர்வதாய் அமைவதாக. உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்- ஆமென்.

முதல் வாசகம்:

குரு: மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் இருக்க, அவனது விலாவெலும்பிலிருந்தே முதல் பெண்ணைப் படைத்தார். இதனால் அவர் மனிதனின் அன்புக்குரியவர் ஆகிறார் என்பதை தொடக்க நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.

தெடக்க நூலிலிருந்து வாசகம். அதிகாரம் 2, இறைவசனங்கள் 18 முதல் 24 வரை

பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான் தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான்.இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான் இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு
எல். -இறைவா உமக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் : சங். 32

ஆண்டவருடைய திருவருளால் 
அவனியெங்கும் நிறைந்துள்ளது!

அவரை இறையாய்க் கொள்ளும் மக்கள் 
அவர் பொருளாய்த் தேர்ந்தோர் பேறுபெற்றோர்,
தமக்கஞ்சிடுவோரைப் பார்க்கிறார் ஆண்டவர்
தம் அருளை நம்பினோரைக் கண்நோக்குகிறார் (ஆண்)

நம் ஆன்மா காத்திருப்ப தவர்க்காக 
நமக்குதவி கேடயமும் அவரே!
மகிழ்கின்ற தவரில் நமது உள்ளம்,
வைக்கிறோம் திருப்பெயரில் நம்பிக்கை (ஆண்)

இரண்டாம் வாசகம் இரண்டாம் வாசகம் (1 இரா 3  1-9) 
அப்போஸ்தலரான புனித பேதுரு முதல் திருமுகத்திலிருந்து வாசகம், அதிகாரம் 3 இறைவார்த்தைகள் 1 முதல் 9 வரை.

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது. முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள் தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள். அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் "தலைவர்" என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள். அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும். இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள் பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள் மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு
எல். -இறைவா உமக்கு நன்றி.

வாழ்த்தொலி:
  
அல்லேலூயா (1அரு.4  8,11) 
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! 
அனை: உம்மோடும் இருப்பாராக!

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 10:6-9
ஆண்டவரே உமக்கு மகிமை.

அக்காலத்தில் படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

குரு: இது கிறிஸ்துவின் நற்செய்தி
மக்கள்: கிறிஸ்துவே உம்மைப் புகழ்கின்றோம்.

மறையுரை :

திருமணச்சடங்கு

அறிவுரை

குரு : அன்புமிக்க மணமக்களே, திருச்சபையின் திருப்பணியாளர்கள் முன்பாகவும், இத்திருக்கூடடத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் அன்பைக் கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். ஏற்கெனவே அவர் உங்களைப் புனித திருமுழுக்கால் அர்ச்சித்துள்ளார், இப்போதோ மற்றொரு திருவருள்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள்வளம் ஈந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றார். எனவே, உங்கள் கருத்தை அறிந்து கொள்ள, திருச்சபையின் முன்னிலையில் உங்களை வினவுகிறேன்.

(மணமக்கள் இருவரும் தனித்தனியே வினாக்களுக்குப் பதில் கூற வேண்டும்)

குரு: (பெயர்...பெயர்) நீங்கள் இருவரும் முழுமனச் சதந்திரத்துடன் திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கிறீர்களா?
மணமக்கள் : ஆம் வந்திருக்கிறோம்.

குரு: நீங்கள் மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி, வாழ்நாளெல்லாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் தயாராய் இருக்கிறீர்களா?
மணமக்கள்: ஆம், தயாராய் இருக்கிறோம்.

குரு: இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றப்படி வளர்ப்பீர்களா?
மணமக்கள்: ஆம் வளர்ப்போம்.

மன ஒப்புதல்:

குரு : நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால், உங்கள் வலது கைகளைச் சேர்த்துப் பிடியுங்கள், இறைவன் திருமுன், திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.

(இருவரும் கைகளைச் சேர்த்து பிடிக்கிறார்கள்)

மணமகன் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

மணமகள் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

குரு : திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிப்படுத்தி, தம் ஆசியை உங்கள் மீது நிறைவாய் பொழிந்தருள்வாராக! இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

மக்கள்: ஆமென்.

மாங்கலியம் அணிவித்தல்:

குரு : (மாங்கலியத்தை ஆசீர்வதித்து) ஆண்டவரே, உம் அடியார் இவர்களையும் இவர்களது அன்பையும் ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இந்த மாங்கலியம் இவர்களுக்குப் பிரமாணிக்கத்தின் அடையாளமாய் அமைந்து, ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை ஆழந்த அன்பையும் நினைவூட்ட வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

மணமகன் : (மணமகளின் பெயரைச் சொல்லி) ... என் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கலியத்தை பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்து கொள்.
(மாலைகள் அருகிலிருந்தால் அவற்றை குரு எடுத்துத் தர, மணமக்கள் ஒருவரொருவருக்கு மாலை அணிவிக்கலாம்.)

12. விசுவாசிகளின் மன்றாட்டு 

(தொடக்கத்தையும் இறுதி செபத்தையும் குரு சொல்ல, நான்கு மன்றாட்டுக்களை சபையில் உள்ள மணமக்களின் பெற்றோரும் உறவினரும் ஆளுக்கொரு மன்றாட்டாகச் சொல்வது நல்லது.)

குரு : அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, இப்புதிய குடும்பத்தின் அன்பு எப்போதும் தொடர்ந்து வளர வேண்டுமென்று இவர்களுக்காக மன்றாடுவோம்.

1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்....

குரு : தந்தையே, உம் பிள்ளைகளாகிய இப்புதிய மணமக்களுக்கு உண்மையான அன்பை நீர் தாராளமாய் வழங்குவதால், நிறை ஒற்றுமையோடு இவர்கள் வாழச் செய்தருளும். நீர் இணைத்த இவ்விருவரையும் எதுவும் பிரிக்காதிருப்பதாக. உம் ஆசி பெற்ற இவர்களை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

நற்கருணை வழிபாடு
அனைவரும் அமர, மணமக்கள் அப்பத்தையும் இரசத்தையும் ஏந்தி பீடத்திற்கு கொண்டு செல்லலாம். வேறு காணிக்கைப் பொருள்கள் கொண்டு வந்திருந்தால், மணமக்களோடு பவனியாக எடுத்துச் செல்லவும்.(பாடல் குழுவினர் காணிக்கைப் பாடல் பாடுவர்.

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருள்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருள்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக்கள் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மன்றாட்டு:
குரு : (காணிக்கை மீது மன்றாட்டு)
அன்புமிக்க இறைவா, இன்று திருமணத்தால் இணைக்கப்பெற்ற ........க்காக நாங்கள் மகிழ்ச்சியுடன் அளிக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருளும். உமது அன்பினாலும் பராமரிப்பினாலும் நீர் இவர்களை இன்று ஒன்றாக இணைத்துள்ளீர். இவர்களுக்குத் தொடர்ந்து உம் ஆசியை வழங்கி, இவர்கள் தங்கள் மணவாழ்க்கை முழுவதும் மகிழ்ந்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள் : ஆமென்.

நற்கருணை மன்றாட்டு 
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 
மக்கள் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக்கள் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக்கள் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம வல்ல நித்திய இறைவா
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக 
என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது 
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.
எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.

திருமண உடன்படிக்கையை நீர் ஏற்படுத்தி, மன ஒற்றுமையின் இனிய நுகத்தாலும், 
அமைதியின் முறிவுறாத பிணைப்பாலும் மணமக்களை இணைத்தருளினீர். 
இதனால், திருமணவாழ்வு மக்கள் பேற்றினால் வளமையுற்று, 
உமக்குப் புதிய அன்பு பிள்ளைகளைத் தருவதற்கு உதவுகின்றது. 
ஏனெனில் ஆண்டவரே, உமது பராமரிப்பினாலும் அருளாலும் 
திருமணத்தின் இரு பயன்களைச் சொல்லற்கரிய முறையில் விளைவிக்கின்றீர், 
பிறப்பினால் உலகம் அணி செய்யப்படுகின்றது, 
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்மு வழியாக வரும் மறுப்பிறப்பினால் 
திருச்சபை வளர்ச்சி பெறுகிறது.

ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,
இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர். 
உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து, 
உம்மை இடையறாது புகழ்கின்றனர்;. 
அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும், 
உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :


பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன 
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா. 

தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர் 
வானமும் வையமும் யாவனும் மாட்சிமை யால்நிறைந் துள்ளன. 
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே 
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

நற்கருணை மன்றாட்டு 3

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.
இ) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்:

ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம்.

ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : 
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் 
ஏனெனில் இது உங்களுக்காக 
கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் 
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். 
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் 
எல்லாருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள் :ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக் கின்றோம்.

ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.

இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இககுடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய தக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.
இவர் வழியாக, இவரோடு, இவரில்
எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
தூய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக்கள் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, 
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக. 
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். 
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

சிறப்பு ஆசீர் :

அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவில் மணமுடித்த இம்மணமக்களை ஆண்டவர் தம் அருளின் ஆசியால் நிரப்பவும், திருமணத்தில் இணைந்த இவ்விருவரையும் நற்கருணை வழியாக அன்பினால் ஒன்றுபடுத்தவும் வேண்டுn;மன்று மன்றாடுவோம்.

(எல்லாரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிக்கின்றனர்.)

தூய தந்தையே, நீர் எமது சாயலாக மனிதரைப் படைத்த போது, ஆண், பெண் எனப் படைத்தீர். இவ்வாறு, கணவனும் மனைவியும் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றுபட்டு இவ்வுலகில் தங்கள் பணியை நிறைவேற்றச் செய்கின்றீர்.

இறைவா, உமது அன்பின் திட்டத்தை வெளிப்படுத்தவும், உம் மக்களோடு நீர் செய்தருளிய உடன்படிக்கையை நினைவூட்டவும், மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை ஓர் அடையாளமாகத் தந்தருளினீர், இந்த அடையாளம் திருவருள்சாதனமாக நிறைவு பெற்றதால், உம்முடைய விசுவாசிகளின் திருமண இணைப்பில் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையே உள்ள மண உறவாகிய மறைபொருள் விளங்கச் செய்கின்றீர். (;---பெயர்-- -) என்னும் உம் பிள்ளைகள் இவர்கள் மீது இரங்கி , உமது வல்லமையால் இவர்களைக் காத்தருளும்.

இறைவா, இத்திருவருள்சாதனம் அருளிய உறவினால் இவர்கள் உமது அன்பின் கொடைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்களாக, மேலும் நீர் இவர்களோடு இருக்கிறீர் என்பதற்கு ஒருவருக்கொருவர் அடையாளமாய் விளங்கி , ஒரே உள்ளமும் ஒரே உயிரும் உடையவர்களாய்த் திகழ்வார்களாக.

இறைவா, இவர்கள் இருவரும் ஒன்றாய் உருவாக்கும் குடும்பத்தை தம் உழைப்பால் பேணிக்காப்பார்களாக, தம் மக்களை நற்செய்தி நெறியில் பழக்கி, உமது வானக அரசின் குடும்பத்தில் வந்து சேர்க்க ஆவன செய்வார்களாக.

உம் மகள் (பெயர்--) மீது உமது ஆசியை நிறைவாய்ப் பொழிந்தருளும். இதனால், இவர் மனைவிக்கும் அன்னைக்குமுரிய பணிகளை நிறைவேற்றி, தூய அன்பினால் குடும்பத்தைப் பேணி, இனிய பண்பினால் அதை அணி செய்வாராக.

உம் மகன் (பெயர்--) மீது உமது ஆசியை நிறைவாய்ப் பொழிந்தருளும். இவர் உண்மையுள்ள கணவராகவும், முன்மதியுள்ள தந்தையாகவும் தம் கடமைகளை நிறைவேற்றுவாராக.

தூய தந்தையே, உம் திருமுன் மணம் புரிந்து கொண்ட இவர்கள் உமது திருப்பந்தியில் அமர விரும்புகிறார்கள், ஒரு நாள் இவர்கள் விண்ணக விருந்திலும் மகிழ்ச்சியுடன் பங்கு கொள்ளச் செய்தருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, |அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்| என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. 
மக்கள்: ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)

(பாடல் திருப்பலியில்)

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வைத்தருளும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வைத்தருளும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எமக்கு அமைதி அருளும்.

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக்கள்: ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.
(மணமக்களுக்கு திவ்ய நன்மை அப்ப இரச குணங்களில் வழங்கப்படலாம்.)

குரு : கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர் : ஆமென்.

திருவிருந்து பாடலைப் பாடுக.

(சிறிது நேரம் மௌனம் காத்து அல்லது நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக.)

குரு : ஜெபிப்போமாக ! 
வாழ்வளிக்கும் வள்ளலாகிய இறைவா, உமது பராமரிப்பினால் நடந்தேறிய இத்திருமணத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கிறோம். இம்மால் ஒரு புனித குடும்பமாக இணைக்கப்பெற்று, ஒரே அப்பத்தாலும் ஒரே பானத்தாலும் நிறைவடைந்துள்ள (பெயர்...பெயர்...) இவர்கள், அன்பினால் கருத்தொருமித்து வாழ்ந்து, உம் திருவுளத்திற்கேற்ப ஓர் இல்லத் திருச்சபையை ஏற்படுத்தி மகிழ்ந்திருக்க அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
அனை: -ஆமென்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.

குரு : என்றும் வாழும் தந்தையாகிய இறைவன், நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பினால் உங்களை ஒருமனப்படுத்தி , கிறிஸ்துவின் அமைதி உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் என்றும் குடிகொள்ளச் செய்தருள்வாராக.
எல் : ஆமென்.

இறுதி ஆசீர்

குரு : உங்கள் மக்களால் ஆசியும், நண்பர்களிடமிருந்து ஆறுதலும் பெற்று, அனைவரோடும் நல்லுரவுடன் வாழ்வீர்களாக.
எல் : ஆமென்.

குரு : உலகிலே நீங்கள் இறையன்புக்குச் சாட்சிகளாய்த் திகழுங்கள். இவ்வாறு உங்கள் தயவைப் பெற்ற துன்புற்றோரும் வறியோரும், இறைவனின் வீட்டில் உங்களை ஒருநாள் நன்றியுணர்வுடன் வரவேற்பார்களாக.
எல் : ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன், பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.

குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று 
மக்கள்: இறைவா உமக்கு நன்றி.

4 கருத்துகள்: