அன்னையின் அன்பு

வயதான தம்பதியர் ஒரு பூங்காவில் உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த ஒருவர் “இவ்வளவு காலம் ஆகியும் இந்த வயதான காலத்திலே அன்பாக சந்தோ~மாக பேசிக்கொண்டிருக்கிறார்களே!” என்று ஆச்சரியப்பட்ட அவர் அவர்களிடம் சென்று “பெரியவரே, உங்களுக்கு திருமணம் ஆகி எவ்வளவு வருடம் ஆச்சு?” என்று கேட்டார். “55 வருடம் ஆச்சு” என்று பெரியவர் பதில் சொன்னார். “இவ்வளவு சந்தோ~மாக இந்த வயதான காலத்திலும் இருப்பதன் இரகசியம் என்ன?” என்று வினவினார். அதற்கு அந்த பெரியவர் “எங்களுக்குள்ளே சண்டையே வந்ததில்லை” என்றார். “எப்படி சண்டையில்லாமல் வாழ முடிகிறது?” என்ற கேட்டதற்கு பெரியவர் சொன்னார். “எங்களுக்கு திருமணம் ஆன புதிதில் நானும் என் மனைவியும் ஒரு குதிரையில் சென்று கொண்டிருந்தோம். சிறிது தூரம் போனதும் குதிரை முரண்டு பிடித்தது. நான் உடனே இறங்கி அந்த குதிரையைப் பார்த்து, ‘இது உனக்கு முதல் தடவை’ என்று மிரட்டிவிட்டு மீண்டும் குதிரையில் பயணம் செய்தேன். மறுபடியும் குதிரை முரண்டு பிடித்தது. நான் உடனே இறங்கி அந்த குதிரையை சாட்டையால் ஓர் அடி அடித்து ‘இது உனக்கு இரண்டாவது தடவை’ என்று மிரட்டினேன். சிறிது தூரம் சென்ற பின்பு குதிரை முரண்டு பிடித்தது. அப்போது ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தோம். நான் கீழே இறங்கினேன். என் மனைவியையும் கீழே இறங்கச்சொல்லிவிட்டு குதிரையை ஆற்றில் தள்ளிவிட்டு ‘இது உனக்கு கடைசி தடவை’ என்று சொன்னேன். அதைப்பார்த்து என் மனைவி பதறிப்போய் ‘அய்யோ பாவம்! என்ன இப்படி செய்துவிட்டீர்களே?’ என்றாள். நான் மெதுவாக என் மனைவியைப் பார்த்து, ‘இது உனக்கு முதல் தடவை’ என்றேன். அவ்வளவுதான், அதன்பின்பு ஒருநாள்கூட எங்களக்குள் சண்டை வந்ததில்லை” என்று சொன்னார் அந்த பெரியவர்.
பயத்தாலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதாலும் வருவது உண்மையான அமைதியாகாது. உண்மையான அமைதி அன்பினால் மட்டுமே வரும். ஒருவருக்கொருவர் அடங்கி வாழும் குடும்பத்தை விட ஒருவருக்கொருவர் ஐக்கியப்பட்டு வாழும் குடும்பம் சிறந்த குடும்பமாகும். அன்பின் அடிப்படையில் தான் உயிர்களின் உறவுகள் அமைய வேண்டும். இல்லையேல் தொடர்பு மட்டும்தான் இருக்கும். எந்த குடும்பத்தில் அடுத்தவரின் மீது அன்பும், அக்கறையும் இருக்கிறதோ அந்த குடும்பம் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடையும்.
எல்லா உறவுகளுக்கும அடிப்படையாக இருப்பது அன்பே. நாம் யாரை அன்பு செய்கிறோமோ அந்த ஆளுக்கு ஏற்ப அன்பு பல வடிவங்களை எடுக்கின்றது. பல பெயர் களைப்பெறுகின்றது. எடுத்துக்காட்டாக இரு நண்பர்களுக்கிடையேயுள்ள அன்பு நட்பு என்றும், பெற்றோர் பிள்ளைகள் மேல் காட்டும் அன்பு பாசம் என்றும், கணவன் மனைவியிடையேயுள்ள அன்பு காதல் என்றும், இறைவன் மேல் நாம் காட்டும் அன்பு பக்தி என்றும், இறைவன் நம் மீது காட்டும் அன்பு அருள் என்றும், தாய்மொழி மீது, தாய் நாட்டின் மீது நாம் காட்டும் அன்பு பற்று என்றும் பெயர். எனவே, அனைத்து உறவுகளுக்கும் அடிப்படை அன்பு என்பது புலனாகிறது.
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், ‘பாசத்திறற்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?’ என்று கேட்க, மாணவன் ஒருவன்,” சார் நீங்க உங்க பொண்ணு மேலே வைச்சிருக்கிற அன்பு பாசம், உங்க பொண்ணு மேலே நான் வைச்சிருக்கிற அன்பு காதல்” என்று பதில் கூறினான்.
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ‘இனிமேல் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபத்துக்காகவோ, சாவுக்காகவோ அன்றி, வேறு எந்தக்காரணத்திற்கும் விடுமுறை எடுக்கக்கூடாது’ என்றார். அப்போது ஓர் ஆசிரியர் ‘தனது சொந்தத்திருமணத்திற்குக்கூட ஓர் ஆசிரியர் விடுமுறை எடுக்கக்கூடாதா?” என்று கேட்டபோது தலைமை ஆசிரியர் ‘திருமணம் தான் விபத்தில் அடங்கிவிட்டதே” என்றார். திருமணம் ஒருசிலருக்கு ஒரு விபத்தாக அமையலாம்.
அரசமரத்திற்கு ஆணிவேர் எவ்வாறு அவசியமோ அரண்மனைக்கட்டடங்களுக்கு அஸ்திவாரம் எவ்வாறு மூலாதாரமோ அதுபோல ஒரு குடும்பத்திற்கு அன்பு அவசியம் ஆகிறது. குடும்பத்தின் அடித்தளம் அன்பு. குடும்பம் ஒரு கோவில். குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். குடும்பம் ஒரு கதம்பம், குடும்பம் ஒரு குட்டி திருச்சபை என்று சொல்வார்கள். குடும்பத்தில் இறைவனைக் காண வேண்டும். குடும்பத்திலே நல்ல பண்புகள் கற்றுத் தரப்பட வேண்டும் குடும்பம் உறவுகளால் மணம்வீச வேண்டும்.சண்டை காரணமாக பிரிய எண்ணுகிற இறைவனையும், மனைவியையும் இணைக்கும் பேராற்றல் அன்புக்கு மட்டுமே உண்டு.
திருவிவிலியம் ஓர் அன்புக்காவியம். விவிலியத்தின் முதற்பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கடவுள் மனிதன் மீது கொண்ட எல்லையற்ற அன்பு இழையோடி நிற்பதைப்பார்க்கிறோம்.
அளவுகடந்த அன்பு காரணமாக ஆண்டவர் அழகு ஆடுகின்ற அவனியை உண்டாக்கினார். அனைத்தையும் படைத்த பின்னர் மனிதனைத் தமது சாயலாகப்படைத்தார். தமது அன்பிலும் நன்மைத்தனத்திலும் பங்கேற்கும் வாய்ப்பினைக்கடவுள் மனிதனுக்குக்கொடுத்தார். முதல் மனிதன் தவறியபோது ஆண்டவரே அவனைத்தேடிவந்தார். ஒரு தந்தை தன் மகனைத்தேடிச்செல்வதுபோல் ஆதாமைக்கூப்பிட்டு
நீ எங்கே இருக்கிறாய்? என்று (தொ.நூ 3:9)
அன்பு ததும்பக் கேட்டார்.
மலைகள் நிலைசாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது (எசா 54:10)
உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன். எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன் (எரே 31:3)
“இஸ்ராயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்புகூர்ந்தேன். எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். அவர்களைக் கையிலேந்தியதும் நானே, பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து அன்புக் கயிறுகளால் கட்டி நடத்திவந்தேன்”.
எபி 1:1 இறுதியாக,காலம் நிறைவேற்றபோது பலமுறை பல்வேறு வகைகளில் முக்காலத்தில் இறைவாக்கினர் வழியாக தம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். ஆதைத்தான் தூய யோவான் தம் நற்செய்தி 3:16ல் “ஒரே பேரான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்” என்கிறார். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்ந்தவை அனைத்தும் இறைத்தந்தையின் அன்பின் வெளிப்பாடே. நீங்கள் ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கும் அன்பின் வழியாக நீங்கள் என் சீடர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்.
+ காட்டிக்கொடுத்தவனையே தட்டிக்கொடுத்தது அன்பு
+ மனதார மறுதலித்தவரையே மன்னித்து தலைவராக்கியது அன்பு
+ நம்ப மறுத்தவர்களையும் நம்ப வைத்து நற்செய்தியின் தூதுவர்களாக்கியது அன்பு
+ அழிக்கத்துடித்தவர்களையும் அரவணைத்து ஆக்கப்பணிக்கு அனுப்பியது அன்பு
பிறரிடம் அன்போடு நடந்து கொள்கிறவர்கள் தான் உயிருள்ள மனிதர்கள், மற்றவர்கள் தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடுகள் தாம்” என்கிறார் வள்ளுவர்.
ஒருமுறை ஒரு பங்குத்தந்தையிடம் வயதான அம்மா, “சாமி! என் மகன் தன் மனைவியின் பேச்சைக்கேட்டு என்னை வீட்டை விட்டே துரத்தி விட்டான்” என்று சொல்லி அழுதார். அதற்கு அப்பங்குத்தந்தை, “உன் மகன் நாசாமாப்போவான்” என்று கூறி அவனைச் சபித்தார். உடனே அத்தாய், “சாமி அவனைச் சபிக்காதீங்க, அவன் நல்லா இருப்பானு ஒரு வார்த்தை சொல்லுங்க” என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம்! ஒரு தாயின் அன்பு எத்தகையது! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. தாய் மன்னிக்காத குற்றமே இல்லை!
இந்த அன்புக்கு இலக்கணமாக இருப்பவள்தான் தாய். “தாய்” என்றால் அன்பு என்று எல்லோருமே புரிந்து கொள்ள முடியும். இந்த தாயன்பு,
- தன்னையே அர்ப்பணிக்கும்
- தன்னையே மறந்து தன் பிள்ளைகளையே நினைக்கும்
- பிறருக்கு உதவி செய்யும்
- துன்பத்திலே பங்குகொள்ளும்
- பிள்ளைகளுக்காக பரிந்துபேசும்
இந்த குணநலன்கள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவள் தான் நம் அன்னை கன்னி மாயாள். இந்த அம்மாவின் அன்பு இறைவனின் அன்பைப்போன்றது. இவ்வுலகில் எல்லோரும் சுவைத்து இன்புறுவது நம் அன்னையின் அன்பை மட்டுமே.
ஒருமுறை நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவ்வீட்டின் தலைவர் தமது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்திக் கூறியது: ‘சுவாமி என் மனைவி தங்கமானவள். மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கி அதை அப்படியே அவள் கையில் கொடுக்கும்போது, அத்தான்-அத்தான் என தேன் ஒழுகப் பேசுவாள். ஆனால் 15ஆம் தேதி ஆனபிறகு ‘போடா வாடா என்று கத்துவாள்’. காசு இருந்தால் அவன் அத்தான்: அது இல்லையென்றால் அவன் செத்தான்.
ஒருவர் தம் நண்பரிடம், ‘என் வீட்டில் ஒரே பிரச்சனை. என் அம்மா ரசம் வைத்தால் என் மனைவிக்குப் பிடிப்பதில்லை. என் மனைவி ரசம் வைத்தால் என் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை’ என்றார். நண்பர் அவரிடம், ‘நீ என்ன செய்கிறாய்?’ என்று கேட்டதற்கு அவர், ‘நான் இரண்டு பேருக்கம் இடையே சமரசம் செய்கிறேன்’ என்றார்.
வேண்டாத மனைவி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல் ஒருவரை நமக்கு அடிப்படையில் பிடிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை எப்பொழுதும பிடித்துவிடும். ஒருவர் மீத வெறுப்புகொண்டோமென்றால் கருப்பு கண்ணாடி போட்டு பார்த்துகொண்டு எதைப்பார்த்தாலும் கருப்பாகத்தெரிவது போல மற்றவர்கள் நல்லது செய்தாலும் தீமையாகவே தோன்றும்.
50 ஆண்டுகால மணவாழ்க்கையை ஆடம்பரமாகக் கொண்டாடினர் தம்பதியர். பலர் வாழ்த்துச் சொல்ல வந்திருந்தனர். ஒருவர் கணவரிடம் தனியாக, “இத்தனை ஆண்டு திருமண வாழ்வில் உங்கள் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியது உண்டா?” என்று கேட்டார். அவர் சொன்னார். “இல்லவே இல்லை! என் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்று நான் ஒருபோதும் எண்ணியதேயில்லை. ஆனால் அவளைக் கொலை செய்துவிடவேண்டும் என்று பலமுறை தோன்றியுள்ளது. “விவாவகரத்து செய்துவிட வேண்டும் என்று தோன்றாவிட்டாலும் நம் நாட்டில் எத்தனைக் கணவர்கள் இந்தக் கணவர் நினைத்ததைச் செய்து காட்டியிருக்கிறார்கள்! அப்படியில்லாவிட்டாலும் மனைவிக்குச் சமநிலை உரிமை தராமல் கொடுமைப்படுத்தும் கணவர்கள் எத்தனைப்பேர் நம்மிடையே உள்ளனர்.
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.
இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச்செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது: அன்பு இழிவானதைச்செய்யாது: தன்னலம் நாடாது: எரிச்சலுக்கு இடம் கொடாது: தீங்கு நினையாது.
அன்பு தீவினையில் மகிழ்வுறாது: மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். 1 கொரி 13:1-7
ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். உம்மீது நீ அன்பு கூர்வது போல் உன் அயலான் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது (கலா 5:13-14).
“எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில் அன்பு திரளான பாவங்களைப்போக்கும்” (1பேதுரு 4:8).
குடும்பத்தில் கோலோச்சவேண்டிய நற்பண்புகள்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத் தாழ்மை, கனிவு, பொறுமை, அனைத்திற்கும் மேலாக இந்நற்பண்புகளை எல்லாம் பிணைத்து நிறைவு செய்யும் அன்பு (கொலோ 3:12-14).
அம்மா: ஏங்க, பையனை அடிக்கிறீங்க.
அப்பா: பாரு, நம்ம பயல. பரீட்சையில எருமைக்கும் பசுவுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டிருக்காங்க. அதுக்குக் கூட பதில் எழுதத் தெரியல.
அம்மா: அவனுக்கு அந்த வித்தியாசம் தெரியல. உங்களுக்கு இன்னொரு வித்தியாசம் தெரியல.
அப்பா: என்ன சொல்ற
அம்மா: இது நம்ம பையன் இல்ல. பக்கத்து வீட்டு பையன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக